14 சனவரி 2021, வியாழன்

அறுவடை விழா பொங்கல்

அறுவடை விழா பொங்கல்

வரவேற்புரை:-

இறை இயேசுவில் அன்புக்குரியவர்களே! தைப்பொங்கல், தை ஓன்று அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. அவ்விழாவைக் கொண்டாட நாம் இங்கு குழுமியுள்ளோம்.

'செய்நன்றி கொன்ற மகற்கு உய்வில்லை', என்பதற்கேற்ப, உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. பொங்கல் விழாவன்று, உழவர்கள், நிலத்தை வளப்படுத்தி தங்களுக்கு வாழ்வளித்த படைப்பின் இறைவனுக்கு, அறுவடையின் முதற்கனியை அளித்து, நன்றிப்பலி செலுத்துகின்றனர்.

பொங்கல் விழா, உழவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது உழைப்பின் பயனைத் துய்க்கும் எல்லா மக்களுக்கும் ஒரு பெரும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்

நாளைய வாழ்க்கை எனும் புதுப்பானையில்
புதிய எண்ணங்கள்….
புதிய முயற்சிகள்…
புதிய நண்பர்கள்…
புதிய நம்பிக்கைகள்..
புதிய திட்டங்களைச் சேர்த்திடுவோம்!
சோர்வினை செயல்கள் எனும் தீயைமூட்டி…..
உடனிருப்போரின் ஆதரவு எனும் உலவைச் சத்தத்தில்…..
“பொங்கட்டும் புது வாழ்வு”

பொங்கும் பொங்கல், நோய் இல்லா வாழ்க்கையும், நிறைந்த செல்வமும், நம் வாழ்வில் எல்லா வளமும் பெற்று, அன்புடனும், பாசத்துடனும் வாழ, இனிய இந்த தைத் திருநாளில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, வருகைப் பாடலுக்கு எழுந்து நிற்போம் / இத்திருப்பலியில் இணைவோம்.

வருகைப்பாடல்

இறையாட்சி மலரவேண்டும் புதூழ்வு புலரவேண்டும் - 2
வார்த்தை மனுவாக இங்கு நீதி நிலைக்க வேண்டும் - 2
நிலைமாறுமா கரம்சேருமா வலுவாகுமா துயர் மாறுமா
நிலைமாறுமே கரம்சேருமே வலுவாகுமே துயர்மாறுமே
விண்ணும் மண்ணும் சேரும் நாட்கள்
விரைவில் நாம் காண்போம்

1. பாலும் தேனும் பொழிந்திடுமே
கானான் கனவு பலித்திடுமே
பாறை தண்ணீர் சுரந்திடுமே
மன்னா நிலங்கள் யாவும் இங்கு
பசுமை நிறங்கள் ஆகும் (2) (விண்ணும்...)

2. சிங்கமும் கன்றும் தோழமையில்
சிறுவர் நட்பில் பாம்பருகில்
வேலும் வாளும் ஏர்முனையில்
துணுக்கள் எல்லாம் புதுப்பொலிவில்
பாடும் மனங்கள் யாவும் இனி
பாசம் நிறைந்ததாகும் (2) (விண்ணும்....)

வருகைப் பல்லவி

திபா 66:7

நானிலம் தன் பலனை ஈந்தது: கடவுள், நம் கடவுள் நமக்கு ஆசி அளிப்பாராக.

திருப்பலி முன்னுரை:-

இறைத் திருமகன் இயேசுவின் இனிய நண்பர்களே, சகோதரர்களே, சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் வணக்கம் கூறி, பழையன மடிந்து, புதியன மலர்ந்து தீமைகள் ஒழிந்து, நன்மைகள் பெருக” என்று தைத் திருநாளில் நலமும் வளமும் பெருகி இறை ஆசீரை நிறைவாகப் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

கிறிஸ்து விண்ணகத் தந்தையின் தலைப்பேறான மகன். ஆகவே மோசே சட்டப்படி மரியா, தன் தலைப்பேறான இயேசுவை ஆண்டவருக்கு அர்ப்பணித்தார் (லூக் 2:22-24). பழைய ஏற்பாட்டில் அறுவடை நாளன்று முதற்கனியாக ஒப்புக்கொடுக்கப்பட்ட கதிர்கள், ஐம்பதாம் நாள் அப்ப காணிக்கையாய் அளிக்கப்பட்டன (லேவி 23:16).

இறைமகன் இயேசு கிறிஸ்து, தன்னையே தாரை வார்த்து தகனப்பலியாக, இந்த தரணியில் உயிர் நீத்து, விலையில்லா காணிக்கையாக்கினார்

திருச்சபையில் திருமுழுக்கு பெற்ற அனைவரும் முதற்கனியாக ஒப்புக்கொடுக்கப்படுகின்றனர் (யாக் 1:18, 1கொரி 16:15). ஆகவே ஒவ்வொரு அறுவடை விழாவும் அல்லது முதற்கனி விழாவும் நாம் பெற்ற திருமுழுக்கை நமக்கு நினைவூட்டுகிறது.

பொங்கல் விழா, அறுவடையின் முதற்கனியை இறைவனுக்குப் படைக்கும் விழா. இவ்விழா, கிறிஸ்தவனின் திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்து, உயிர்த்தெழுதலில் அவரது நம்பிக்கையையும் உறுதிப்படுத்தி, விண்ணுலக வாழ்வை இம் மண்ணுலகிலேயே முன்சுவையாக அனுபவிக்க உதவுகிறது.

ஆகவே நாம் அனைவரும் ஒன்றித்து இறைவன் நமக்கு அளித்துள்ள அருங்கொடைகள் அனைத்திற்கும் நன்றி கூறுவோம், இத்திருப்பலியில் இணைவோம்.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, நல்ல தந்தையே, உமது பராமரிப்பினால் மனிதரிடம் நிலத்தை ஒப்படைத்தீரே; நாங்கள் நிலத்திலிருந்து பெற்ற விளைச்சல் வழியாக எங்கள் வாழ்வைப் பேணிக் காக்கச் செய்தருளும். உம்முடைய புகழ்ச்சிக்காகவும் அனைவருடைய நலனுக்காகவும் உமது உதவியால் நாங்கள் என்றும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள அருள்வீராக. உம்மோடு.

அல்லது

ஆண்டவரே, மனிதருக்கு நன்மை பயக்கும் நிலத்தின் விளைச்சலுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகின்றோம்; இவ்வுலகில் உமது மேலான பராமரிப்பினால் நீர் எங்களுக்குப் போதுமான விளைச்சலை அளித்தது போல, எங்கள் உள்ளமாகிய நிலத்தில் நீதி தளிர்விட்டு, அன்பின் நற்கனிகளை விளையச் செய்வீராக. உம்மோடு.

முதல் வாசக முன்னுரை: (லேவியர் 23: 9-14))

அறுவடைக்காலம் இறையருட் பெருக்கின் அருங்குறி. ஆகவே நல்ல விளைச்சலை நல்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, அறுவடையின் முதற்கனியாகிய கதிர்கட்டை இறைவனுக்குக் காணிக்கையாக அளித்தனர் கூறும் இவ்வாசகத்திற்கு செவிசாய்ப்போம்.

அறுவடை விழா (பொங்கல்) வாசகங்கள்

பழைய ஏற்பாட்டிலிருந்து

1

ஆற்றலை உங்களுக்கு அளித்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நினைவில் கொள்ளுங்கள்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 8: 7 – 18

அந்நாள்களில்

மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை வளமிகு நாட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த நாடு பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பாய்கின்ற ஆறுகளையும் ஊற்றுகளையும் ஏரிகளையும் கொண்டது. கோதுமை, திராட்சை, அத்தி, மாதுளை, பார்லி ஆகியவை நிறைந்த நாடு. அது ஒலிவ எண்ணெயும் தேனும் நிறைந்த நாடு. அந்த நாட்டில் பஞ்சமின்றி நீங்கள் அப்பங்களை உண்பீர்கள். அங்கு உங்களுக்கு எந்தக் குறையும் இராது. அந்த நாட்டின் பாறைகள் அனைத்தும் இரும்பு. அதன் மலைகளிலிருந்து செம்பு வெட்டி எடுக்கலாம். நீங்கள் உண்டு நிறைவு கொள்வீர்கள். அப்போது, வளமிகு நாட்டை உங்களுக்குக் கொடுத்ததற்காக உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவீர்கள்.

இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்ற கட்டளைகள், நியமங்கள், முறைமைகள் ஆகியவற்றினின்று வழுவியதன் மூலம் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து போகாதபடி கவனமாய் இருங்கள். நீங்கள் உண்டு நிறைவுகொள்ளும் போதும், அழகிய வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருக்கும்போதும், உங்கள் ஆடுமாடுகள் பலுகும் போதும், வெள்ளியும் பொன்னும் உங்களுக்ககு மிகுதியாகும் போதும், உங்களுக்கு உள்ளதெல்லாம் பெருகும் போதும், நீங்கள் நெஞ்சில் செருக்குற்று, அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிட வேண்டாம். அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, நீரற்று வறண்ட நிலமான பரந்த கொடிய பாலைநிலத்தில் உங்களை வழி நடத்தியவர்; இறுகிய பாறையிலிருந்து உங்களுக்காக நீரைப் புறப்படச் செய்தவர். உங்கள் மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலைநிலத்தில் உங்களை உண்பித்தவர்; இறுதியில் உங்களுக்கு நல்லது செய்வதற்காக உங்களை எளியவராக்கிச் சிறுமைப்படுத்திச் சோதித்தவரும் அவரே.

எனவே, எங்கள் ஆற்றலும் எங்கள் கைகளின் வலிமையுமே இந்தச் செல்வங்களை எங்களுக்கு ஈட்டித்தந்தன என்று உங்கள் உள்ளங்களில் எண்ணாதபடி கவனமாய் இருங்கள்.உங்கள் மூதாதையருடன் ஆணையிட்டுச் செய்துகொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துமாறு, இந்நாளில் இருப்பது போன்ற செல்வங்களை ஈட்ட வல்ல ஆற்றலை உங்களுக்கு அளித்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நினைவில் கொள்ளுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

2

போரடிக்கும் களங்களில் கோதுமை நிறைந்திருக்கும்

இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 2:21 - 24, 26 – 27

நிலமே நீ அஞ்சாதே; மகிழ்ந்து களிகூரு; ஏனெனில், ஆண்டவர் பெரிய காரியங்களைச் செய்தார்.காட்டு விலங்குகளே, அஞ்சாதிருங்கள்; ஏனெனில், பாலைநிலப் புல்வெளிகள் பசுமையாய் இருக்கின்றன; மரங்கள் கனி தருகின்றன; அத்திமரமும் திராட்சைக் கொடியும் மிகுந்த கனி கொடுக்கின்றன.

சீயோனின் பிள்ளைகளே, அகமகிழுங்கள்; உங்கள் கடவுளாகிய ஆண்டவரை முன்னிட்டுக் களிப்படையுங்கள்; ஏனெனில், அவர் தமது நீதியை நிலைநாட்ட உங்களுக்கு முன்மாரியைத் தந்தார்; முன்போலவே உங்களுக்கு முன் மாரியையும் பின்மாரியையும் நிறைவாகத் தந்தருளினார்.

போரடிக்கும் களங்களில் கோதுமை நிறைந்திருக்கும்; ஆலைகளில் திராட்சை இரசமும் எண்ணெயும் வழிந்தோடும். நீங்கள் வேண்டியமட்டும் உண்டு நிறைவடைவீர்கள்; உங்களை வியத்தகு முறையில் நடத்தி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைப் போற்றுவீர்கள்; இனிமேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாகமாட்டார்கள்.

இஸ்ரயேல் நடுவில் நான் இருக்கிறேன் என்றும், ஆண்டவராகிய நானே உங்கள் கடவுள் என்றும், என்னையன்றி எவரும் இல்லையென்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்; இனிமேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

புதிய ஏற்பாட்டிலிருந்து

1

கடவுளே விளையச் செய்தார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 6 – 1

சகோதரர் சகோதரிகளே,
நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார். நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை; விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை. நடுகிறவரானாலும் நீர் பாய்ச்சுகிறவரானாலும் ஒன்றுதான். தாம் செய்த வேலைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தம் கூலியைப் பெறுவர். நாங்கள் கடவுளின் உடன் உழைப்பார்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம். நீங்கள் அவர் எழுப்பும் கட்டடம்.

கடவுள் எனக்கு அளித்த அருளின்படியே, நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன். அதன்மேல் வேறொருவர் கட்டுகிறார். ஒவ்வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

2

செல்வர்களாய் இருப்பவர்கள் நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைத்தலாகாது.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 6 – 11, 17 -19

அன்பிற்குரியவரே,
இறைப்பற்று பெரும் ஆதாயம் தருவதுதான்; ஆனால் மனநிறைவுள்ளவர்களுக்கே தரும்.உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது.எனவே, உணவும் உடையும் நமக்கு இருந்தால் அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம்.

செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர்கள் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக் கொள்கிறார்கள்; அறிவீனமான, தீமை விளைவிக்கக்கூடிய பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை மனிதரைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை. பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக் கொள்கிறார்கள்.

கடவுளின் மனிதனாகிய நீ, இவற்றிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி, பணிவு ஆகியவற்றை நாடித்தேடு.

இவ்வுலகில் செல்வர்களாய் இருப்பவர்களுக்கு இவ்வாறு கட்டளையிடு; அவர்கள் மேட்டிமை உணர்வு கொள்ளலாகாது. நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல் நம்முடைய இன்பத்திற்காகவே எல்லாவற்றையும் நிறைவாக அளிக்கும் கடவுளை மட்டுமே எதிர்நோக்கி இருக்கவேண்டும். அவர்கள் நல்லதைச் செய்து நற்செயல்கள் என்னும் செல்வத்தைச் சேர்ப்பார்களாக; தங்களுக்குள்ளதைத் தாராள மனத்தோடு பகிர்ந்தளிப்பார்களாக. இவ்வாறு அவர்கள் தங்களது வருங்காலத்திற்கென்று நல்லதோர் அடித்தளமாக இச்செல்வத்தைச் சேமித்துவைப்பதால் உண்மையான வாழ்வை அடைய முடியும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்கள்

1

திபா 67: 1-2. 4. 6 – 7 (பல்லவி 6)

பல்லவி: நானிலம் தன் பலனை ஈந்தது; நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார். அல்லது: (3a): கடவுளே! மக்களினத்தார் அனைவரும் உம்மைப் போற்றுவர்.

1 கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!
2 அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். பல்லவி

4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். பல்லவி

6 நானிலம் தன் பலனை ஈந்தது; நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார்.
7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! பல்லவி

2
திபா 126: 2b – 3. 4-5. 6(பல்லவி 3a)

பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்.

2b “ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்” என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். பல்லவி

4ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.
5கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். பல்லவி

6 விதை எடுத்துச் செல்லும்போது — செல்லும்போது — அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது — வரும்போது — அக்களிப்போடு வருவார்கள். பல்லவி

திருப்பாடல் 67

நானிலம் பலனைத் தந்தது
கடவுள் ஆசீர் வழங்கினார்

1. கடவுளே எம்மீது இரங்கி எமக்கு ஆசீர் வழங்கும்
திருமுக ஒளி எம்மேல் வீசிடச் செய்தருளும்
அப்போது உலகம் உமது வழிதனை அறிந்துகொள்ளும்
பிற இனத்தார் யாவரும் மீட்பை உணர்வார்கள்

2. வேற்று நாட்டினர் உம்மை மகிழ்ந்து பாடுவர்
உலகின் நாடுகளை நேர்மையாய் நடத்துகின்றீர்
கடவுள் நமக்கு ஆசீர் வழங்கிடுவார்
உலகில் வாழ்வோர் அவருக்கு அஞ்சிடுவர்

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 126: 5

அல்லேலூயா, அல்லேலூயா! கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகங்கள்

1

மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 15-21

அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி, “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” என்றார்.

அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: “செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.அவன், ‘நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!’ என்று எண்ணினான். ‘ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்’. பின்பு, "என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு" எனச் சொல்வேன்’ என்று தனக்குள் கூறிக்கொண்டான்.

ஆனால் கடவுள் அவனிடம், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

2
காலில் முகங்குப்புற விழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினார்.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11-19

அக்காலத்தில்
இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே, “ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று.

அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். இயேசு, அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்.

பின்பு அவரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

வேறு வாசகங்கள் தேவையெனில், “26. இறைவனுக்கு நன்றி செலுத்த” (பக்கம் 650) என்ற பகுதியிலிருந்து வாசகங்களைத் தேர்ந்து கொள்ளலாம்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு:

1) எம்மைப் படைத்து பராமரிக்கும் பரம்பொருளே! இறைவா! நீர் எங்களுக்கு கொடையாக தந்த இயற்கைக்காகவும், அதன் பலன்களுக்காகவும் நன்றி கூறுகிறோம். இந்த வளமிக்க இயற்கையை நாங்கள் பாதுகாத்து எம்பின்வரும் சந்ததியினரும் அதன் பலன்களை பெறும் வண்ணம் வாழ்ந்திட வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2) சேற்றில் பதித்து, வெயில் மழை பாராமல் எப்போதும் விளைநிலங்களில் பணிபுரியும் எமது விவசாய நண்பர்களுக்காக மன்றாடுகிறோம். தங்களின் உடல் உழைப்பின் பலனை நிறைவாகப் பெற்று, பஞ்சம், பசி, கடன், நோய் போன்ற எல்லா தீமைகளிலிருந்தும் விடுதலை பெற்று நிறைவோடு வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3) விவசாய வளமிக்க எம் நாட்டை ஆளும் அதிகார வர்க்கத்தினருக்காக மன்றாடுகிறோம். தங்கள் சுயநலத்தை மறந்து ஏழை, எளிய விவசாய பெருமக்களின் வாழ்வு, வளம் பெற விவசாய தொழில் சிறக்க சட்ட திட்டங்களை இயற்றி செயல்படுத்தும் மனதிடனை அவர்களுக்கு அளித்தருளுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4) இயற்கை சீற்றம், பொய்த்த பருவமழை, விவசாய இடுபொருட்களின் விலையேற்றம், உலகமயமான சந்தை பொருளாதாரம் போன்ற தீய சக்திகளின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் விவசாயிகள் உமது அருள் துணையோடு, நியாயமான தொழில் முறைகளை பின்பற்றி உழைக்கவும், அவர்கள் வாழ்வு ஏற்றம் காணவும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5) இந்த பொங்கல் விழா வழிபாட்டில் கலந்து கொள்ளும் நாங்கள் அனைவரும் விவசாய மக்களையும், அவர்களின் உழைப்பையும் மதித்து, சுயநல உணர்வோடு உணவு பொருட்களை பதுக்காமல், நல்மனத்தோடு அவற்றை இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ளும் தாராள மனத்தை எமக்கு தந்தருளுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


காணிக்கைப் பாடல்

எடுத்துக்கொள்ளும் ஆண்டவரே
உடல்பொருள் ஆவியையும்
எடுத்துக்கொள்ளும் ஆண்டவரே
சிந்தனை சொல் செயல்
அனைத்தையும் தந்தோம்
நிந்தனை யாவையும் ஏற்கவும் துணிந்தோம்

1. அனைத்தையும் உம் அதிமிக மகிமைக்கே என்று
ஆர்வமாய் வாழ்ந்திட துணைபுரிவாயே

2. உம் அருள் ஒன்றே எமக்கென்றும் போதும்
உம் பதம் நாங்கள் சரண் அடைந்தோமே

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, வளமான நிலத்தில் விளைந்த இக்காணிக்கைகளைப் புனிதப்படுத்தியருளும்; நிலத்தின் விளைச்சலை இவ்வுலகப் பயன்பாட்டுக்காக வழங்கியது போல் எங்கள் உள்ளங்கள் விண்ணக நலன்களால் வளம் பெறச் செய்வீராக. எங்கள்.

ஆண்டின் பொதுக் கால ஞாயிறின் தொடக்கவுரை V (பக். 540).

திருவிருந்து பாடல்

சமபந்தி விருந்தின் சங்கமமே - இது
இறைமகன் இயேசுவின் திருவுளமே (2)
இதை எந்தன் நினைவாய் செய்யுங்கள் என்ற
இறைவாக்கு நிறைவேறும் பலிப்பீடமே (2)

1. அன்பின் சின்னம் சமபந்தி நட்பின் இலக்கணம் சமபந்தி
உறவின் பாலம் சமபந்தி இந்த உன்னத வாழ்வே சமபந்தி
ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய்
நம்மை இணைத்திடும் சமபந்தி
இது இயேசு வழங்கிடும் திருப்பந்தி - 2

2. மன்னிப்பு தந்திடும் சமபந்தி
மாண்பினைப் போற்றிடும் சமபந்தி
பணிவிடை புரிந்திடும் சமபந்தி நம்மில்
புனிதமாய் மலந்திடும் சமபந்தி - ஒரே உள்ளமும் ... ...

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 104:13-15

ஆண்டவரே, உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடைகின்றது; பூவுலகினின்று அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கின்றீர்; மனித உளத்திற்கு மகிழ்ச்சியூட்டத் திராட்சை இரசமும், முகத்திற்குக் களையூட்ட எண்ணெயும் மனித உள்ளத்திற்குப் புத்துணர்வூட்ட அப்பமும் அளிக்கின்றீர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நிலத்தின் கனிகளில் இருந்து சேகரித்தவற்றை உம் திருமுன் கொண்டு வந்து நலம் தரும் இம்மறைநிகழ்வில் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகின்றோம்; அதனால் எங்களில் செயல்படும் இம்மறைபொருளின் ஆற்றலால் இன்னும் மிகுதியாக நலன்களைப் பெற்றுக்கொள்ளும் தகுதி பெற அருள்புரிவீராக. எங்கள்.

பொங்கல் அர்ச்சிப்பு (திருப்பலியின் இறுதியில்)

பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!
எல : உம் ஆன்மாவோடும் இருப்பாராக!

பணி: சகோதர, சகோதரிகளே, பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இவ்வேளையிலே, மகிழ்ச்சிக்கெல்லாம் ஊற்றாகிய கடவுளை நினைத்து, அவர் நமக்கு அளித்துள்ள அருங்கொடைகள் அனைத்திற்காகவும் அவருக்கு நன்றிகூறுவோம்.

குரு: என்றும் வாழும் தந்தாய்! உம் ஞானமும் பேரன்பும் விளங்க, இவ்வுலகத்தைப்படைத்து, மனிதனை அப்படைப்பின் சிகரமாய் வைத்து, அவனை அதன் ஆளுனனாக ஏற்படுத்தியதற்காக. எல்: ஆண்டவரே, உமக்கு நன்றி கூறுகிறோம்.
குரு: உழைக்கும் கரங்களுக்கு ஆற்றல் மிக அளித்து உமது படைப்பின் வளத்தை மக்களனைவரும் பெற்று மகிழச் செய்வதற்காக.
எல்: ஆண்டவரே, உமக்கு நன்றி கூறுகிறோம்.

குரு: எமக்கு நல்ல மழையைத் தந்து, நிலத்தை வளப்படுத்தி, நிரம்ப பலனைத் தந்ததற்காக.
எல : ஆண்டவரே, உமக்கு நன்றி கூறுகிறோம்.

குரு: எங்கள் உழைப்பை ஆசீர்வதித்து, எங்கள் வாழ்வில் நிறைந்த மகிழ்ச்சியையும், அமைதியையும் அளித்ததற்காக,
எல்: ஆண்டவரே உமக்கு நன்றி கூறுகிறோம்.

குரு: பொருள் வளம் தந்து அதன் வழியாக அருள் வளமும் அளித்தமைக்காக,
எல்: ஆண்டவரே உமக்கு நன்றி கூறுகிறோம்.

குரு: அனைத்தையும் படைத்த இறைவா! படைப்புப் பொருள் யாவும் உமதே. எங்களது உழைப்பின் மூலம் உமது படைப்பு அலுவலில் பங்கு தந்து, அதன் பலனைத் துய்க்கும் பேற்றையும் தந்து, உமது அருளை என்றும் போற்றிப் புகழ வாய்ப்பளித்ததற்காக எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உமக்கு நன்றி கூறுகிறோம்.
எல : ஆமென்!

பணி:
மன்றாடுவோமாக
நன்மைகளுக்கெல்லாம் ஊற்றாகிய இறைவா! உழவர்களுக்கும், அவர்களது உழைக்கும் கரங்கள் மூலம் எங்களுக்கும், நீர் அளித்துள்ள அருட்கொடைகளுக்கெல்லாம் நன்றி செலுத்துகிறோம். எங்கள் நன்றியின் அடையாளமாக நாங்கள் உமக்கு படைக்கும் அறுவடையின் முதற்கனியாலான இப்பொங்கலை (அல்லது அறுவடையின் முதற்கனியான இப்பொருட்களை) + ஆசீர்வதித்தருளும். எங்களுக்கு உழைக்கும் திறனையும், அதன் பலனையும் நிரம்பத்தந்து, வளம் மிக்க எம் நாட்டை, அன்பும், நீதியும், அமைதியும், ஒற்றுமையும், பகிர்வும் கொண்ட நல்மனம் படைத்த மனிதர்களின் நாடாக்குமாறு எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்;

(பீடத்தின் முன் படைக்கப்பட்ட பொங்கல், கரும்பு, மஞ்சள் போன்ற விளை பொருட்கள் மீது தீர்த்தம் தெளிக்கிறார்.)

நன்றிப்பாடல்

இறைவன் படைத்த நாளிதே நன்றி நன்றி பாடுவோம்
இதயம் மகிழும் நாளிதே நன்றி நன்றி பாடுவோம்
நன்றி இறைவா - 4

1. வானம் பூமி யாவுமே நன்றி கூறட்டும்
வாழும் உயிர்கள் இயேசுவை வணங்கி மகிழட்டும் (2)
இதயம் இன்று இனிய கீதம் பாடட்டும் பாடட்டும்
இறைவன் இயேசு என்றும் நம்மைக் காப்பதால் நன்றி இறைவா - 4

2. கவலை யாவும் மறைந்தது கலக்கம் இல்லையே
காலமெல்லாம் கர்த்தர் யேசு நம்மோடு உள்ளார் (2)
புதிய வானம் புதிய பூமி பூத்திட
புதிய பயணம் புவியில் இன்று தொடருவோம் நன்றி இறைவா - 4

- மறைத்திரு. அடைக்கல ராசா ச.ச