18 செப்டம்பர் 2021, சனி

“இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா”

பொதுக்காலம் இருபத்து நான்காம் வாரம் சனிக்கிழமை


I திமொத்தேயு 6: 13-16
II லூக்கா 8: 4-15

“இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா”

அலெக்சாண்டர் ஓவிட் என்னும் ஆகச்சிறந்த மறையுரையாளர்:


நான்கு வயதிலேயே தன் தாயிடம், “நான் ஒரு மறைப்பணியாளராகப் போகிறேன்” என்று சொல்லி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தவரும், கல்லூரிக் காலங்களில் திருவிவிலியத்தை பசித்த ஓநாய் (Famished Wolf) போன்று வெறிகொண்டு படித்தவருமான அலெக்சாண்டர் ஒயிட் (Alexander Whyte) என்பவரை உலகில் தோன்றிய மிகப்பெரிய மறையுரையாளர் என்று உறுதியாகச் சொல்லலாம்.

அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து அன்றன்றைக்கு உரிய மறையுரைகளைத் தயாரித்து, அதை மக்களுக்கு வழங்குபோது, கேட்கும் யாவரும் அப்படியே சொக்கிப் போயிருப்பர். இதில் வியப்புக்குரிய செய்தி என்னவென்றால் அலெக்சாண்டர் ஒயிட் முதுமை அடைந்து, கோயிலுக்குப் போக முடியாத நிலை ஏற்பட்டபோதும், வழக்கம் போல் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து மறையுரை தயாரித்தார் என்பதுதான்.

ஒருமுறை இவருக்கு அறிமுக ஒருவர் இவரிடம், “அது எப்படி உங்களால் மட்டும் இவ்வளவு சிறப்பான மறையுரைகளை வழங்க முடிகின்றது?” என்று கேட்டபொழுது இவர், 1 திமொ 4: 16 இல் வரும், ‘உன்னைப் பற்றியும் உன் போதையைப் பற்றியும் கருத்தாயிரு; அவைகளில் நிலைத்திரு. இவ்வாறு செய்தால் நீயும் மீட்படைவாய்; உனக்குச் செவிசாய்ப்போரும் மீட்படைவர்’ என்ற இறைவார்த்தையை மேற்கோள் காட்டிப் பேசிவிட்டு, “நான் என் போதனையைப் குறித்துக் கருத்தாயிருக்கும்போது நான் மட்டுமல்லாமல், என் போதனையைக் கேட்பவரும் மீட்படைவர் என்பதால், என்னால் சிறப்பான வழங்க முடிகின்றது” என்றார்.

ஆம், இறைவார்த்தையைப் போதிப்பவர் யாவரும் தங்கள் போதனையைப் பற்றிக் கருத்தாய் இருக்கவேண்டும். இன்றைய முதல்வாசகத்தில் பவுல், “இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா” என்கிறார். பவுல் சொல்லக்கூடிய கட்டளை எது, அந்தக் கட்டளையைக் கடைப்பிடிப்பதால் என்ன ஆசி கிடைக்கும் என்பன குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

நம்பிக்கை அடிப்படையில் பவுலுக்கு உண்மையான பிள்ளையாக இருந்தவர் திமொத்தேயு (1 திமொ 1: 1). அதனால் பவுல் திமொத்தெயுக்கு ஒரு தந்தைக்குரிய பாசத்துடன் பல்வேறு அறிவுரைகளை வழங்குகின்றார். அதில் சிறப்பான ஓர் அறிவுரைதான், “இறைவார்த்தையை அறிவு. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு” (2 திமொ 4: 2) என்பதாகும். இன்றைய முதல் வாசகத்தில் அதை நினைவுபடுத்துகின்ற பவுல், “இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா” என்கின்றார்.

நற்செய்தியில் இயேசு விதைப்பவர் உவமையைக் குறித்துப் பேசுகின்றார். ஒருவர் இறைவார்த்தைக்குச் செவிமடுப்பதைப் பொறுத்தே அவரது உயர்வும் தாழ்வும் உள்ளன என்ற உண்மையைப் பறைசாற்றும் இவ்வுவமை, ஆண்டவரே நம் உள்ளத்தில் இறைவார்த்தை என்னும் விதையை விதைக்கின்றார் என்ற உண்மையையும் உணர்த்துகின்றது. ஆண்டவர் நம் உள்ளத்தில் இறைவார்த்தை என்னும் விதையை விதைக்கின்றார் எனில், அவர் அதை இன்றைய காலக்கட்டத்தில் தன் அடியார்களான அருள்பணியாளர்கள் வழியாக விதைக்கின்றார். ஆகவே, இறைவார்த்தையை அறிவிக்கும் ஒவ்வொருவரும் கருத்தாய் அறிவிக்கவேண்டும். அப்பொழுதுதான் அவர் மட்டுமல்லாது, அதைக் கேட்போரும் மீட்படைய முடியும்.

ஆதலால், கடவுள் தன் அடியார்கள் வழியாய் இறைவார்த்தையை மக்களின் உள்ளங்களில் விதைக்கின்றார் என்ற உணர்வோடு இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடப்போம்.

சிந்தனைக்கு:

 புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல் (எரே 1: 17).

 அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும் (உரோ 10: 17).

 இறைவார்த்தைக் கேட்டு, அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் மிகுதியாகப் பேறுபெற்றோர் (லூக் 11: 28).

இறைவாக்கு:

‘உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்’ (மத் 16: 15) என்பார் இயேசு. எனவே, நாம் கடவுளின் வார்த்தையைக் கருத்தாய் அறிவித்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.