23 ஜூலை 2021, வெள்ளி

“உன் தந்தையையும் தாயையும் மதித்து நட”

பொதுக்காலம் பதினாறாம் வாரம் வெள்ளிக்கிழமை


I விடுதலைப் பயணம் 20: 1-17
II மத்தேயு 13: 18-23

“உன் தந்தையையும் தாயையும் மதித்து நட”

மகன் பெற்றோருக்குச் செய்த அறுசுவை விருந்து:


அன்று அந்தக் குடும்பத்தில் இருந்த கணவன் மனைவியினுடைய திருமண நாள். அதனால் அன்று அவர்களுடைய வீடு அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒருபக்கம் கணவன் பிள்ளைகளை எழுப்பிக் குளிக்கவைத்து, அவர்களுக்குப் புத்தாடை உடுத்திக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் மனைவி அறுசுவை உணவையும், தின்பண்டங்களையும் தயார் செய்துகொண்டிருந்தார்.

சிறிதுநேரத்தில் கணவன், தானும் குளித்துத் தன் பிள்ளைகளையும் குளிக்க வைத்துத் தயாராகிவிட, மனைவி சமையலறையில் முடிக்கவேண்டிய வேலைகளைத் தாமதிப்படுத்திக் கொண்டிருந்தார். இதனால் கணவன் தன் மனைவியிடம், “அப்பாவும் அம்மாவும் காலை ஏழு மணிக்கெல்லாம் சாப்பிட்டுவார்கள். அதனால் நீ இப்படித் தாமதப்படுத்தினால் அவர்கள் பசியோடுதான் இருக்கவேண்டி வரும்” என்று சொல்லி, அவரை அவசரப்படுத்தினான். “இன்னும் சிறிதுநேரத்தில் எல்லா வேலைகளும் முடிந்துவிடும். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்” என்று சொல்லி மனைவி சமையல் வேலையைச் சீக்கிரமாக முடித்துகொண்டு, குளித்துப் புத்தாடை உடுத்தித் தயாரானார்.

எல்லாரும் தயாரான பின்பு சமைத்த உணவையும் தின்பண்டங்களையும் எடுத்துக்கொண்டு, வண்டியில் ஏறி, முதியோர் இல்லத்திற்குச் சென்றார்கள். ஆம், திருமண நாள் அன்று முதியோர் இல்லத்தில் இருந்த தன் பெற்றோரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததால், கணவன் தன் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து மிகவும் பரபரப்பாக இருந்தான்.

பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு, அவர்களை எப்பொழுவதாக பார்க்கக்கூடிய; ஏன் பார்க்கவே பார்க்காத அவல நிலைதான் இன்று பல இடங்களில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில், இன்றைய முதல்வாசகம், “உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட” என்று கூறுவதைக் குறித்துச் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

இறையன்பு (2-11), பிறரன்பு (12-17) என்ற இரண்டு முதன்மையான கட்டளைகளை அடிநாதமாகக் கொண்ட பத்துக்கட்டளைகளை ஆண்டவராகிய கடவுள் தன் அடியார் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு வழங்குவதைத்தான் இன்று நாம் முதல் வாசகமாக வாசிக்கக் கேட்டோம். இதில் இடம்பெறும் ஒரு கட்டளைதான், “உன் தந்தையும் உன் தாயையும் மதித்து நட” என்பதாகும்.

யூதா நாட்டினர் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஒரு முக்கியமான காரணம், அவர்கள் தங்கள் தந்தையும் தாயையும் மதித்து நடக்கவில்லை (எசே 22: 7, 15) என்பதாகும். அப்படியெனில் ஒருவர் தன் தாய், தந்தையை மதித்து நடக்கின்றபொழுது, அவர்களுடைய அறிவுரைச் செவிமடுக்கின்றபொழுது, அவர்கள் இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுவதுபோன்று முப்பது மடங்காக, அறுபது மடங்காக, நூறு மடங்காகப் பலந்தருவார்கள் என்று உறுதி. நாம் நம் தாய் தந்தையை மதித்து நடக்கின்றோமா?

சிந்தனைக்கு:

 தாய்க்குச் சிறுமை ஏற்பாட்டால், அது பிள்ளைகளுக்குச் சிறுமை (சீஞா 3: 11)

 குழந்தாய், உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு (சீஞா 3: 12)

 நமது நமது பெற்றோரை மதித்து, அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்டு நடக்கின்றோமா? சிந்திப்போம்.

இறைவாக்கு:

‘தந்தையரை மதிப்போர் பாவங்களுக்குக் கழுவாய் தேடிக் கொள்கின்றனர்’ (சீஞா 3: 3) என்கிறது சீராக்கின் ஞான நூல். ஆகையால், நாம் பெற்றோரை மதித்து நடந்து, இறைவனுக்கு உகந்தவர்களாகி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.