26 மார்ச் 2020, வியாழன்

யோவான் 5: 31-47

தவக்காலம் நான்காம் வாரம் வியாழக்கிழமை

யோவான் 5: 31-47

இயேசுவை இறைமகன் ஏற்றுக்கொள்ள மறுத்த யூதர்கள்

நிகழ்வு


ஓர் அரங்கில் கருத்தமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கருத்தமர்வில் பேசுவதற்காகச் சிறப்புப் பேச்சாளர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார். கடவுள்மீது நம்பிக்கையில்லாத அவர் பேசும்போது, இடையிடையே கிறிஸ்துவைப் பற்றியும் கிறிஸ்தவ மதத்தில் நடக்கும் தீமைகளையும் பேசினார். எல்லாவற்றையும் பேசிமுடித்தபின்பு, அரங்கில் இருந்தவர்களைப் பார்த்து, “ஏதாவது கேள்வி இருந்தால் கேட்கலாம்” என்றார்.

உடனே அரங்கில் இருந்து ஒருவர் எழுந்து மேடையில் ஏறினார். அவர் ஒரு பெரிய குடிகாரராக இருந்து, பின் மனம்மாறி, கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தவர். அவர் தன்னிடத்தில் இருந்த ஓர் ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, அதன் தோலை மெல்ல உரிக்கத் தொடங்கினார். அவரைக் கண்ட பேச்சாளருக்குக் கடுமையாகச் சினம் வந்தது. பேச்சாளர் அந்த மனிதரிடம், “கேள்வி கேட்கச் சொன்னால், இப்படி ஆரஞ்சுப் பழத்தை உரித்துக்கொண்டிருக்கின்றீரே! உமக்கு என்ன பிரச்சனை?” என்றார். அப்பொழுதும் அந்த மனிதர் எதுவும் பேசாமல் ஆரஞ்சுப் பழத்தை உரிப்பதிலேயே தீவிரமாக இருந்தார்.

ஒருவழியாக ஆரஞ்சுப் பழத்தை உரித்து முடித்ததும், அந்த மனிதர் பேச்சாளரைப் பார்த்து, “இந்த ஆரஞ்சுப் பழம் இனிக்குமா? புளிக்குமா?” என்றார். பேச்சாளருக்குத் தாங்க முடியாத சினம் வந்தது. “நீ பெரிய முட்டாளாகத்தான் இருக்கவேண்டும்... ஆரஞ்சுப் பழத்தைச் சுவைத்துப் பார்க்காமல் அது இனிக்குமா? புளிக்குமா? என்று எப்படிச் சொல்லமுடியும்?” என்று கத்தினார் பேச்சாளர். இதற்கு அந்த மனிதர் அவரிடம், “நீங்கள் பேசினீர்களே இதுதான் சரியான பேச்சு. எப்படி ஆரஞ்சுப் பழத்தைச் சுவைத்துப் பார்க்காமல், அது இனிப்பா, புளிப்பா என்று சொல்ல முடியாதோ, அப்படி இயேசுவைப் பற்றி எதுவும் தெரிந்துகொள்ளாமல், அவர் இப்படி, அவர் தோற்றுவித்த மதம் இப்படி என்று சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அது மிகப்பெரிய முட்டாள்தனம். ஒரு காலத்தில் நான் கிறிஸ்துவைப் பற்றி எதுவும் தெரியாமல் குடித்துக் குடித்து வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டிருந்தேன். என்றைக்கு கிறிஸ்துவைக் குறித்து அறிய வந்தேனோ, அன்றைக்கே என்னுடைய வாழ்க்கை மாறிப்போனது” என்றார்.

ஆம், ஒன்றைக் குறித்து அல்லது முழுமையாக அறிந்துகொள்ளாமல் அதை, அவரை விமர்சிப்பது மிகப்பெரிய முட்டாள்தான். அதைத்தான் மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நற்செய்தி வாசகத்தில் இயேசுவைக் குறித்து எதுவும் தெரியாமல், அவர் கடவுளைத் தந்தை என்று சொன்னதற்காக யூதர்கள் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுகின்றார்கள். இந்த நிகழ்வு நமக்கு என்ன செய்தியைச் சொல்கிறது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தான் இறைமகன் என்பதற்கு இயேசு தரும் சான்றுகள்

பொதுவாக யூதர்கள் ஒருவர் தரும் சான்றினை ஏற்றுக்கொள்வதில்லை (இச 17: 6; 19: 15) இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்டோரோ சொன்னால்தான் அதை நம்புவார்கள். இங்கு இயேசு தான் இறைமகன் என்பதைப் பல்வேறு சான்றுகளின் வழியாக விளக்குகின்றார்.

முதலாவதாக இயேசு தரும் சான்று திருமுழுக்கு யோவான். திருமுழுக்கு யோவான் இயேசுவைக் குறித்து சான்று பகர்ந்தார் (யோவா 1: 6-8). மட்டுமல்லாமல், அவர் இயேசுவைக் கடவுளின் ஆட்டுக்குட்டி (யோவா 1: 29) என்று சுட்டிக்காட்டினார். இயேசு தரும் இரண்டாவது சான்று தந்தைக் கடவுள். தந்தைக் கடவுள் இயேசுவை, ‘இவரே என் அன்பார்ந்த மைந்தர்’ (மத் 3:17; 17:5) என்றார். இயேசு தரும் மூன்றாவது சான்று மறைநூல். மறைநூலும் இயேசுவைப் பற்றிச் சான்று பகர்ந்தது. இயேசுதரும் நான்காவது சான்று மோசே. மோசேயும் இயேசுவைப் பற்றிச் சான்று பகர்ந்தார் (எண் 21: 9; 24: 17).

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவின் செயல்கள் அவர் இறைமகன் என்று சான்று பகர்ந்தன. எதில் எதையும் யூதர்கள் நம்பாமல், இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் இருந்ததுதான் வியப்பாக இருக்கின்றது. பல நேரங்களில் நாமும் கூட பல்வேறு சான்றுகள் இருந்தும், இயேசுவை ஏற்றுக்கொள்ளவும் அவர்மீது நம்பிக்கை வைக்கவும் தயங்குகின்றோம். ஆகையால், நம்முடைய வாழ்வின் அச்சாரமாக இருக்கும் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து வாழக் கற்றுக்கொள்வோம்.

சிந்தனை

‘இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கின்றார்; அவரும் கடவுளோடு இணைந்திருக்கின்றார்’ (1 யோவா 4: 15) என்பார் புனித யோவான். ஆகையால், நாம் இயேசுவே இறைமகன் என்று நம்பி, அறிக்கையிடுவோம். அதன்வழியாக இறைவனோடு ஒன்றித்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்