ஆண்டவரின் திருக்காட்சி
ஆண்டவரின் திருக்காட்சி
முன்னுரை
நல்ல உள்ளங்களே நல்வாழ்த்துக்கள்.
ஆண்டின் முதல் ஞாயிறு. பராம்பரியமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த அற்புத திருவிழா வழிபாட்டுக்கு உங்களை வரவேற்கின்றோம்.
தன்னை தரணிக்கு காட்சியாக்கினார். புல இடங்களில் இருந்து புறப்பட்டு வந்தவர்களை வீண்மீன் கொண்டு வழிநடத்திய அற்புதம் இன்று நினைக்கப்படுகின்றது.
காணிக்கைகள் கொணர்ந்து தங்களது மரியாதையை வெளிக்காட்டி நிற்கின்றார்கள்.
குழந்தையாய் இருந்த போதிலும், அவரே மெசியா என்பதனை தெரிந்து அறிந்திருந்ததாலும், தெண்டனிட்டு வணங்கி ஆராதிக்க முற்பட்டனர்.
நம்மையும் ஜொலிக்கச் செய்யும் நட்சத்திரங்களாக, அவரே நம்மை ஆசீர்வதிக்கின்றார். வழிநடத்துகின்றார்.
நாமும் அவரது சாட்சிகளாவோம். அவரிடமிருந்து பெற்றவைகளை அவருக்கு காணிக்கையாக்குவோம். அவரே ஆண்டவர் மெசியா என்று வணங்கி ஆராதிப்போம். வாருங்கள். பங்கேற்று பலன் பெறுவோம்.
முதல் வாசகம் (எசா 60: 1-6)
இஸ்ரயேல் மக்கள் பிற நாட்டவரால் அடிமைகளாக பல வழிகளில் நசுக்கப்பட்டனர். சொந்த நாட்டையும், வழிபட்டு வந்த கோவிலையும் இழந்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், ஆண்டவர் பிற இனத்தவரும் உன் ஒளி நோக்கி வருவர், எருசலேமே எழுந்து ஒளிவீசு! என்று இறைவாக்கினர் எசாயா மூலம் நம்பிக்கை ஊட்டுவதை இவ்வாசகத்தில் கேட்போம்.
முதல் வாசகம்
ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 60: 1-6
எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்! பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்.
உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர்.
அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; சேபா நாட்டினர் யாவரும் பொன், நறுமணப் பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 72: 1-2. 7-8. 10-11. 12-13 (பல்லவி: 11)
பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.
1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக. பல்லவி
7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. 8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். பல்லவி
10 தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள். 11 எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள். எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். பல்லவி
12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். 13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். பல்லவி
இரண்டாம் வாசகம் (எபே 3: 2-3, 5-6)
புறவினத்தாரின் திருத்தூதர் என்று அழைக்கப்படும் புனித பவுலடியார் பிற இன மக்களும் கிறிஸ்து இயேசுவை அறிந்து புதிய உடன்படிக்கையின் பங்காளிகளாக மாறுகின்றனர் என்று இவ்வாசகத்தில் கூறுகின்றார்.
இரண்டாம் வாசகம்
பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளர் என இப்போது வெளியாக்கப்பட்டுள்ளது.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 2-3ய,5-6
சகோதரர் சகோதரிகளே, உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது.
அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 2: 2
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கிறோம். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
அரசரை வணங்க வந்திருக்கிறோம்.
+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12
ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்'' என்றார்கள்.
இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்றுகூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.
அவர்கள் அவனிடம், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில், `யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்' என்று இi றவாக்கினர் எழுதியுள்ளார்'' என்றார்கள்.
பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்துகொண்டான்.
மேலும் அவர்களிடம், “நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்'' என்று கூறி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.
அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றி குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.
அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.
வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து, பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.
ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
January 2015
இறைவன் இயற்கை ஒவ்வொன்றையும் மிக அழகாக தன் திட்டத்திற்கு பயன்படுத்துகிறார். ஆம், தன் மகனை இந்த உலகிற்கு வெளிப்படுத்த சிறிய நட்சத்திரத்தைத் தேர்ந்தெடுக்கிறார். ஒரு சிறிய நட்சத்திரம் இறைவன் கரங்களில் அழகான கருவியாக, அவர் பார்வையில் மதிப்புக்குரியதாக பயன்படுத்தப்படுகிறது.
அதனால்தான் கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு முன்பே சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர் வரை வீடுகளில் விதவிதமான, அழகான நட்சத்திரங்கள் கட்டி தொங்கவிடுகின்றனர். நட்சத்திரத்தை நம் இல்லங்களில் தொங்க விடுகிறோம்.
ஆனால் அந்த நட்சத்திரம்; கற்றுத்தந்த பாடத்தை நம் வாழ்வில் கற்றுக் கொள்ள வேண்டும். இறைமகனை நாம் எந்த விதத்தில் பிறருக்கு வெளிப்படுத்துகிறோம் என்பதுவே முக்கியமானது. நம் சிந்தனை, எண்ணங்கள், வார்த்தைகள், செயல்பாடுகள் இவை அனைத்தும் தான் அவரை நம் வாழ்வில் வெளிப்படுத்தக் கூடியவை.
மிக உயர்ந்த படைப்பாக, மனிதனை தன் சாயலாக படைத்தார். அந்த அன்பு தெய்வத்தின் சாயலைத் தாங்கியுள்ள நாம், அவரின் பண்புகளை, குணநலன்களை நம் வாழ்வில் செயல்படுத்தும் போது தான் நாம் அவரை வெளிப்படுத்துகிறோம்.
மன்றாட்டு:
யூதர்களின் அரசரே இறைவா! பிரபஞ்சத்திற்கு சுடர்விடும் விண்மீனாக திருஅவை துலங்க, பொறுப்பாளர்களை ஆசீர்வதித்து, வழிநடத்த, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
யூதர்களின் அரசரே இறைவா! நாட்டு மக்கள் யாவரும் உண்மை கடவுளாகிய உம்மை அறிந்து, ஏற்று, வழிபட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
யூதர்களின் அரசரே இறைவா! வழிபாட்டில் பங்கேற்று பயன் பெறும் நாங்கள் உம்மை மட்டுமே வழிபட, ஆராதிக்க, வணங்க, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
யூதர்களின் அரசரே இறைவா! நாங்கள் ஜொலிக்கும் விண்மீனாக துலங்கவும், ஆன்மாக்களுக்கு வழிகாட்டிகளான விளங்கவும், அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
யூதர்களின் அரசரே இறைவா! திசைமாறியவர்களின் வாழ்வு, தடம் புறலாமல், மீண்டும் அவர்கள் உம்மிடம் திரும்பி வந்து, பயணிக்க, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.