6. மீண்டும் யூதர்களின் துன்பம்

கோவில் தூய்மைப்பாடு

1மக்கபேயையும் அவருடைய ஆள்களையும் ஆண்டவர் வழி நடத்திச் செல்லவே அவர்கள் எருசலேம் கோவிலையும் நகரையும் மீட்டுக் கொண்டார்கள்;
2அயல்நாட்டார் பொது இடங்களில் அமைத்திருந்த சிலைவழிபாட்டுக்குரிய பலிபீடங்களையும் கோவில்களையும் இடித்துத் தள்ளினார்கள்;
3எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்தியபின் புதியதொரு பலிபீடம் எழுப்பினார்கள்; கற்களிலிருந்து நெருப்பு உண்டாக்கி, இரண்டு ஆண்டு இடைவெளிக்குப்பின் பலிகள் ஒப்புக் கொடுத்தார்கள்; நறுமணப்புகை எழுப்பி விளக்கு ஏற்றி காணிக்கை அப்பங்களைப் படைத்தார்கள்.
4இவை யாவும் செய்தபின் அவர்கள் குப்புற விழுந்து, இனி ஒருபோதும் இத்தகைய கேடுகள் தங்களுக்கு நேராதவாறு ஆண்டவரை வேண்டினார்கள்; இனிமேல் எப்போதாவது அவர்கள் பாவம் செய்ய நேரிட்டால், அவரால் பரிவோடு தண்டிக்கப்படவும், கடவுளைப் பழிக்கின்ற, பண்பாடு குன்றிய பிற இனத்தாரிடம் கையளிக்கப்படாதிருக்கவும் மன்றாடினார்கள்.
5அயல்நாட்டார் கோவிலைத் தீட்டுப்படுத்தியதன் ஆண்டு நிறைவு நாளிலேயே, அதாவது, கிஸ்லேவ் மாதம் இருபத்தைந்தாம் நாளிலேயே கோவில் தூய்மைப்பாட்டு விழா நடைபெற்றது.
6சில நாள்களுக்கு முன் அவர்கள் மலைகளிலும் குகைகளிலும் காட்டு விலங்குகளைப்போல் அலைந்து திரிந்துகொண்டிருந்தபோது கொண்டாடிய கூடாரத் திருவிழாவை நினைவு கூர்ந்து, இவ்விழாவையும் அதைப்போன்றே எட்டு நாளாக மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்;
7எனவே தழைகளால் அழகுசெய்யப்பட்ட கழிகளையும் பசுங்கிளைகளையும் குருத்தோலைகளையும் ஏந்தியவர்களாய், தமது திருவிடத்தை வெற்றிகரமாகத் தூய்மைப்படுத்தும்படி செய்த கடவுளுக்குப் புகழ்ப்பாக்கள்பாடி நன்றி செலுத்தினார்கள்;
8யூத இனத்தார் அனைவரும் ஆண்டுதோறும் இவ்விழாவைக் கொண்டாடவேண்டும் என்று பொதுவில் சட்டம் இயற்றி முடிவு செய்தார்கள்.

ஐந்தாம் அந்தியோக்கின் ஆட்சித் தொடக்கம்

9எப்பிபான் என்று பெயர்பெற்றிருந்த அந்தியோக்கின் முடிவு இவ்வாறு அமைந்தது.
10அந்தக் கயவனுடைய மகன் அந்தியோக்கு யூப்பாத்தோரின் ஆட்சிக்காலத்தில் நடந்தவற்றையும் போர்களின்போது ஏற்பட்ட பேரிடர்களையும் இப்போது சுருக்கமாகக் காண்போம்.
11யூப்பாத்தோர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது லீசியாவை ஆட்சியாளனாகவும், கூலேசீரியா, பெனிசியா ஆகிய நாடுகளின் தலைமை ஆளுநராகவும், ஏற்படுத்தினான்.
12முன்பு யூதர்களுக்கு இழைக்கப்பட்டிருந்த அநீதியை முன்னிட்டு அவர்களுக்கு நீதி வழங்குவதில் மக்ரோன் என்று அழைக்கப்பெற்ற தாலமி முன்னோடியாகத் திகழ்ந்தான்; அவர்களோடு நல்லுறவை ஏற்படுத்த முயன்றான்;
13இதன் விளைவாக, மன்னனின் நண்பர்களால் யூப்பாத்தோர் முன் அவன் குற்றம்சாட்டப்பட்டான்; பிலமேத்தோர் தன்னிடம் ஒப்படைத்திருந்த சைப்பிரசு நாட்டைக் கைவிட்டதாலும் அந்தியோக்கு எப்பிபானோடு சேர்ந்துகொண்டதாலும் ‘துரோகி’ என்று எல்லாரும் தன்னை அழைப்பதைத் தன் காதால் கேட்டான்; தன் பதவிக்கு ஏற்ற மரியாதையைப் பெற முடியாததால் நஞ்சு உண்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டான்.

இதுமேயரின் வீழ்ச்சி

14கோர்கியா அப்பகுதிக்கு ஆளுநனானபோது, கூலிப்படையை அமர்த்தி, வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் யூதர்களைத் தாக்கி வந்தான்.
15மேலும் முக்கிய கோட்டைகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இதுமேயரும் யூதர்களுக்குத் தொல்லை கொடுத்துவந்தனர்; எருசலேமிருந்து துரத்தியடிக்கப்பட்டவர்களையும் ஏற்றுக்கொண்டு போரைத் தொடர்ந்து நடத்த முயன்றனர்.
16ஆனால் மக்கபேயும் அவருடைய ஆள்களும் பொதுவில் வேண்டுதல் செய்து, கடவுள் தங்கள் சார்பாகப் போரிடுமாறு மன்றாடியபின் இதுமேயருடைய கோட்டைகளை நோக்கி விரைந்தார்கள்;
17விறுவிறுப்போடு அந்த இடங்களைத் தாக்கிக் கைப்பற்றினார்கள்; மதில்மேல் நின்று போராடிய அனைவரையும் துரத்தியடித்தார்கள்; தங்களை எதிர்த்து வந்தவர்களுள் இருபதாயிரம் பேரையாவது வெட்டிக் கொன்றார்கள்.
18முற்றுகையைச் சமாளிப்பதற்குத் தேவையானவையெல்லாம் கொண்ட வலிமைவாய்ந்த இரு கோட்டைகளில் குறைந்தது ஒன்பதாயிரம்பேர் அடைக்கலம் புகுந்தார்கள்.
19அப்போது மக்கபே, அவற்றை முற்றகையிடப் போதுமான ஒருபடையை, அதாவது சீமோன், யோசேப்பு ஆகியோருடன் சக்கேயுவையும் அவருடைய ஆள்களையும் விட்டுவிட்டு, தமது உதவி மிகவும் தேவைப்பட்ட இடங்களுக்குச் சென்றார்.
20ஆனால் சீமோனுடைய ஆள்களுள் பணத்தாசை கொண்டவர்கள் கோட்டைகளில் இருந்த சிலரிடமிருந்து இருநூற்றுப் பத்து கிலோ* வெள்ளியைக் கையூட்டாகப் பெற்றுக்கொண்டு அவர்களுள் சிலரைத் தப்பியோட விட்டுவிட்டார்கள்.
21நடந்தது பற்றி மக்கபேயுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர் மக்களின் தலைவர்களைக் கூட்டினார்; தங்களுக்கு எதிராக மீண்டும் போரிடும்பொருட்டுப் பகைவர்களை விட்டுவிட்டதன் மூலம் பணத்திற்காகத் தங்கள் உறவின்முறையினையே விற்றுவிட்டார்கள் என்று அவர்கள்மேல் குற்றம் சாட்டினார்;
22இவ்வாறு காட்டிக்கொடுத்த அந்த ஆள்களைக் கொன்றார்; இரு கோட்டைகளையும் உடனடியாகக் கைப்பற்றினார்.
23தம் படைவலியால் தம் முயற்சிகளிலெல்லம் வெற்றி கண்ட அவர் அந்த இரண்டு கோட்டைகளிலும் இருந்தவர்களுள் இருபதாயிரத்திற்கும் மிகுதியானவர்களைக் கொன்றார்.

திமொத்தேயுவின் வீழ்ச்சி

24முன்பு யூதர்களால் தோற்கடிக்கப்பட்ட திமொத்தேயு எண்ணற்ற அயல் நாட்டவரைக் கொண்ட கூலிப்படையைத் திரட்டினான்; ஆசியாவிலிருந்து மாபெரும் குதிரைப்படையையும் சேர்த்துக்கொண்டு யூதேயாநாட்டைப் படைவலியால் கைப்பற்றும் எண்ணத்தோடு வந்தான்.
25அவன் நெருங்கி வந்தபோது மக்கபேயும் அவருடைய ஆள்களும் தங்கள் தலைமேல் புழுதியைத் தூவிக்கொண்டும் தங்கள் இடையில் சாக்கு உடை உடுத்திக் கொண்டும் கடவுளிடம் கெஞ்சி மன்றாடினார்கள்;
26பலிப்பீடத்தின்முன் இருந்த படி மீது குப்புற விழுந்து தங்கள் மீது இரக்கம் காட்டவும் திருச்சட்டம் கூறுவது போலத் தங்கள் எதிரிகளுக்கு எதிரிகளாகவும் பகைவர்களாகவும் இருக்கவும் அவரை வேண்டினார்கள்.
27வேண்டலுக்குப்பின் தங்கள் படைக்கலங்களை எடுத்துக்கொண்டு அவர்கள் நகரிலிருந்து நெடுந்தொலை சென்றார்கள்; எதிரிகள் இருந்த இடத்திற்கு அருகில் வந்ததும் அங்குத் தங்கினார்கள்.
28பொழுது புலர்ந்ததும் இரு படையினரும் போர்தொடுத்தனர். யூதர்கள் தங்கள் வெற்றிக்கும் புகழுக்கும் தங்கள் வலிமையை மட்டும் நம்பவில்லை; ஆண்டவர்மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். மற்றவர்களுக்கு அவர்களது சீற்றமே படைத்தலைவனாய் அமைந்தது.
29போர் கடுமையானபோது ஒளி பொருந்திய ஐந்து மனிதர்கள் பொற் கடிவாளம் பூட்டிய குதிரைகள் மேல் அமர்ந்து யூதர்களை நடத்துவது போன்று பகைவர்களுக்கு விண்ணிலிருந்து தோன்றினார்கள்.
30அந்த ஐவரும் மக்கபேயைச் சூழ்ந்துகொண்டு தங்கள் படைக்கலங்களால் அவருக்குப் பாதுகாப்புக் கொடுத்து, காயப்படாதவாறு அவரைக் காப்பாற்றினார்; பகைவர்கள்மீது அம்புகளையும் தீக்கணைகளையும் வீசினர். அதனால் பகைவர்கள் பார்வை இழந்து குழப்பம் அடைந்து சிதறண்டு ஓட, யூதர்கள் அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள்.
31இருபதாயிரத்து ஐந்நூறு காலாட்படை வீரர்களும் அறுநூறு குதிரை வீரர்களும் கொல்லப்பட்டார்கள்
.
32கைரயா என்ற படைத்தலைவனுடைய நன்கு அரண் செய்யப்பட்ட கசாரா என்ற கோட்டைக்குத் திமொத்தேயு தப்பியோடினான்.
33அப்போது மக்கபேயும் அவருடைய ஆள்களும் எழுச்சியுற்றுக் கோட்டையை நான்கு நாளாய் முற்றுகையிட்டார்கள்.
34கோட்டைக்கு உள்ளே இருந்தவர்கள் அதன் வலிமையில் நம்பிக்கை கொண்டு, இழி சொற்களால் இறைவனைப் பழித்துக்கொண்டிருந்தார்கள்.
35ஐந்தாம் நாள் விடிந்தபோது மக்கபேயின் படையைச் சேர்ந்த இருபது இளைஞர்கள் இத்தகைய இறைப்பழிப்பைக் கேட்டுச் சீற்றங்கொண்டு, துணிவுடன் மதிலைத் தாக்கிக் காட்டு விலங்கு போலச் சீறிப் பாய்ந்து தாங்கள் எதிர்கொண்டவர்கள் அனைவரையும் வெட்டி வீழ்த்தினார்கள்.
36மற்றவர்கள் மேலே ஏறிச்சென்று எதிரிகளைச் சுற்றி வளைத்துக்கொண்டு, கோட்டைகளுக்குத் தீ வைத்தார்கள்; அத்தீயைக் கிளறி விட்டு இறைவனைப் பழித்தவர்களை உயிருடன் எரித்தார்கள். மற்றும் சிலர் கதவுகளை உடைத்து எஞ்சியிருந்த படைவீரர்களை உள்ளே நுழையவிட, அவர்கள் நகரைக் கைப்பற்றினார்கள்.
37ஒரு கிணற்றில் ஒளிந்துகொண்டிருந்த திமொத்தேயுவையும் அவனுடைய சகோதரனான கைரயாவையும் அப்பொல்லோபானையும் அவர்கள் கொன்றார்கள்.
38இவற்றையெல்லாம் அவர்கள் செய்து முடித்தபின், இஸ்ரயேல் மீது பேரிரக்கம் காட்டுபவரும் அதற்கு வெற்றியை வழங்குபவருமாகிய ஆண்டவரைப் புகழ்ப்பாக்களாலும் நன்றிப் பாடல்களாலும் போற்றினார்கள்.

10:1-8 1 மக் 4:36-61. 10:14-23 1 மக் 5:1-8. 10:26 விப 23:22.
10:20 ‘எழுபதாயிரம் திராக்மா’ என்பது கிரேக்க பாடம்.