அந்தியோக்கின் முடிவு

1அக்காலத்தில் அந்தியோக்கு பாரசீகப் பகுதிகளிலிருந்து இழிவுற்ற நிலையில் பின்வாங்கினான்;
2ஏனெனில் பெர்சப்பொலி என்னும் நகரில் புகுந்து கோவில்களைக் கொள்ளையடிக்கவும் நகரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் முயன்றிருந்தான். உடனே மக்கள் படைக்கலங்களோடு தங்களைக் காத்துகொள்ள விரைந்தார்கள்; அவனையும் அவனுடைய ஆள்களையும் தோற்கடித்தார்கள். இதனால் அந்தியோக்கு அப்பகுதி மக்களால் துரத்தியடிக்கப்பட்டு, வெட்கத்தோடு பின்வாங்க நேரிட்டது.
3அவன் எக்பத்தானாவுக்குச் சென்றபோது நிக்கானோருக்கும் திமொத்தேயுவின் படைக்கும் நிகழ்த்தவை பற்றி அறியவந்தான்;
4உடனே சீற்றங் கொண்டான்; தன்னைத் துரத்தியடித்தவர்களால் தனக்கு நேர்ந்த தீங்குகளை யூதர்கள்மேல் திருப்பிவிட எண்ணினான்; ஆகவே, தன் பயணம் முடியும்வரை எந்த இடத்திலும் நிறுத்தாமல் ஓட்டும்படி தன் தேரோட்டிக்குக் கட்டளையிட்டான். ஆனால் விண்ணக இறைவனின் தீர்ப்பு அவனைத் தொடர்ந்தது. ஏனெனில்,‘நான் எருசலேம் சென்றவுடன் அதனை யூதர்களின் கல்லறையாக மாற்றுவேன்’ என்று அவன் இறுமாப்புடன் கூறியிருந்தான்.
5அனைத்தையும் காணும் ஆண்டவரும் இஸ்ரயேலின் கடவுளுமானவர் கண்ணுக்குப் புலப்படாத, தீராத நோயால் அவனை வதைத்தார். அவன் மேற்சொன்னவாறு பேசி முடித்தவுடனே, அவனது குடலில் தாங்க முடியாத வலியும் உள்ளுறுப்புகளில் பொறுக்க முடியாத நோவும் ஏற்பட்டன.
6கேட்டிராத பற்பல கொடுமைகளால் பிறருடைய குடல்களை வதைத்திருந்த அவனுக்கு இவ்வாறு நேர்ந்தது முறையே.
7இருப்பினும் அவனுடைய திமிர் எவ்வகையிலும் அடங்கவேயில்லை. அவன் மேலும் இறுமாப்புற்றான். யூதர்களுக்கு எதிராக அவனது சீற்றக் கனல் பற்றியெரிந்தது. எனவே இன்னும் விரைவாகத் தேரை ஓட்டுமாறு கட்டளையிட்டான். ஆனால் மிக விரைவாகப் பாய்ந்து சென்றுகொண்டிருந்த தேரிலிருந்து கீழே வீழ்ந்தான்; அந்தப் படுவீழ்ச்சியால் அவனது உடலின் ஒவ்வோர் உறுப்பும் துன்பத்துக்கு உள்ளாயிற்று
8இவ்வாறு இயல்புக்கு மீறிய இறுமாப்பால் தூண்டப்பட்டு, கடல் அலைகளுக்குத் தன்னால் கட்டளையிட முடியும் என்று நினைத்தவன், உயர்ந்த மலைகளைத் துலாக்கோலில் வைத்துத் தன்னால் நிறுத்தமுடியும் என்று கற்பனை செய்தவன், அந்தோ தரையில் வீழ்த்தப்பட்டான்! கடவுளின் ஆற்றல் அனைவருக்கும் வெளிப்படும் வகையில் ஒரு தூக்குக் கட்டிலில் வைத்துத் தூக்கிச் செல்லப்பட்டான்.
9அக்கொடியவனின் உடலிலிருந்து புழுக்கள் ஒன்றாய்த் திரண்டு எழுந்தன. அவன் கடுந்துன்ப துயரோடு வாட, குற்றுயிராய்க் கிடந்தபடியே அவனது சதை அழுகி விழுந்தது; அதனின்று எழுந்த கொடிய நாற்றத்தால் அவனுடைய படை முழுவதும் அருவருப்பு அடைந்தது.
10விண்மீன்களைத் தன்னால் தொடமுடியும் என்று சற்றுமுன் எண்ணிக்கொண்டிருந்த அவனை, பொறுக்க முடியாத நாற்றத்தின் பொருட்டு அப்போது எவனும் தூக்கிச் செல்ல இயலவில்லை.
11இறுதியில் மனமுடைந்தவனாய்த் தனது இறுமாப்பைக் கைவிடத்தொடங்கினான்; கடவுளால் தண்டிக்கப்பட்ட நிலையில் அறிவு தெளிந்தான்; ஏனெனில், தொடர்ந்து பெருந்துன்பத்திற்கு உள்ளானான்.
12தன் நாற்றத்தைத் தானே தாங்கமுடியாதபோது அவன், “கடவுளுக்கு அடங்கியிருப்பதே முறை; அழிவுக்குரிய மனிதன் தன்னைக் கடவுளுக்கு இணையாக எண்ணுவது தவறு” என்று கூறினான்.
13அக்கயவன் ஆண்டவருக்கு ஒரு பொருத்தனை செய்தான்; ஆனால் அவர் அவனுக்கு இரக்கம் காட்டுவதாக இல்லை.
14அப்பொருத்தனைப்படி, திருநகரைத் தரை மட்டமாக்கி, அதைக் கல்லறையாக்க விரைந்து வந்தவன் இப்போது அதற்கு விடுதலை கொடுக்க முடிவுசெய்தான்;
15யூதர்கள் அடக்கம் செய்யப்படுவதற்குக் கூடத் தகுதியற்றவர்கள் என்று கருதி, அவர்களையும் அவர்களுடைய பிள்ளைகளையும் காட்டு விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இரையாக எறிந்துவிடத் திட்டமிட்டிருந்தவன், அவர்கள் எல்லாரையும் ஏதன்சு நகரத்தாருக்கு இணையாக நடத்தவும் எண்ணினான்.
16தான் முன்பு கொள்ளையடித்திருந்த திருக்கோவிலை அழகுமிக்க நேர்ச்சைப் படையல்களால் அணிசெய்வதாகவும், தூய கலன்கள் அனைத்தையும் பன்மடங்காகத் திருப்பிக் கொடுப்பதாகவும், பலிகளுக்கான செலவுகளைத் தன் சொந்த வருவாயிலிருந்து கொடுப்பதாகவும் முடிவு செய்தான்;
17எல்லாவற்றுக்கும் மேலாக, தானே ஒரு யூதனாக மாறுவதாகவும், மக்கள் குடியிருக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று கடவுளுடைய ஆற்றலை அறிக்கையிடுவதாகவும் உறுதி கூறினான்.
18ஆயினும், கடவுளின் முறையான தண்டனைத் தீர்ப்புக்கு அவன் உள்ளானதால், அவனுடைய துன்பங்கள் எவ்வகையிலும் குறையவில்லை. நம்பிக்கை முழுவதும் இழந்தவனாய், கெஞ்சும் மொழியில் ஒரு மடலை யூதர்களுக்கு வரைந்தான். அது வருமாறு:
19“மதிப்புக்குரிய யூத மக்களுக்கு, அவர்களுடைய மன்னரும் படைத்தலைவருமாகிய அந்தியோக்கு, எல்லா நலமும் பெற வாழ்த்தி எழுதுவது:
20நீங்களும் உங்கள் மக்களும் நலமுடன் இருப்பின், உங்கள் விருப்படியே அனைத்தும் சிறப்பாக நடக்குமாயின், எனக்கு மகிழ்ச்சியே. என் நம்பிக்கை விண்ணக இறைவனில் உள்ளதால்,
21நீங்கள் என்மீது கொண்டுள்ள மதிப்பையும் நல்லெண்ணத்தையும் அன்புடன் நினைவு கூர்கிறேன்; பாரசீகத்திலிருந்து நான் திரும்புகையில், ஒரு கொடிய நோயால் பீடிக்கப்பட்டேன்; அதனால் உங்கள் அனைவருடைய பொது நலனுக்கும் ஆவன செய்வது இன்றியமையாதது என்று கண்டேன்.
22என் நிலையைக் குறித்து நான் மனமுடையவில்லை; ஏனெனில் நோயினின்று நலம் பெறுவேன் என்னும் நம்பிக்கை எனக்குப் பெரிதும் உண்டு.
23என் தந்தை மலை நாடுகளில் தம் படையை நடத்திச் சென்ற வேளைகளில் தமக்கு ஒரு பதிலாளை ஏற்படுத்தியதை நான் அறிவேன்.
24இதனால் யாதேனும் எதிர்பாராதது நடப்பினும் அல்லது விரும்பாத செய்திகள் வந்தாலும், அவருடைய ஆட்சிக்குட்பட்ட மக்களுக்குத் தொல்லைகள் நேரா; ஏனெனில் ஆட்சி யாருக்கு உரியது என்பதை அவர்கள் அறிவார்கள்.
25இதுதவிர, அண்டை நாட்டு மன்னர்கள், குறிப்பாக என் அரசின் எல்லை நாட்டு மன்னர்கள் தக்கவாய்ப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் என்ன நடக்கப்போகிறது என கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆகவே நான் என் மகன் அந்தியோக்கை மன்னராக ஏற்படுத்தியிருக்கிறேன். நான் மலைநாடுகளுக்கு விரைந்தபோதெல்லாம் அவரை உங்களுள் பலருடைய பொறுப்பில் ஒப்படைத்துப் பரிந்துரைத்ததும் உண்டு. இங்கு நான் எழுதியள்ளதை அவருக்கும் எழுதியுள்ளேன்.
26ஆகவே, பொதுவாகவும் தனிப்பட்ட முறையிலும் நான் உங்களுக்குச் செய்துள்ள நன்மைகளை நினைவுகூர்ந்து என்மீதும் என் மகன்மீதும் இப்போது கொண்டுள்ள நல்லெண்ணத்தை நீங்கள் ஒவ்வொருவரும் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் எனக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.
27அவர் என் கொள்கைகளைப் பின்பற்றி, உங்களைப் பண்போடும் மனிதநேயத்தோடும் நடத்துவார் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.”
28இவ்வாறு, கொலைகாரனும் இறைபழிப்போனுமான அந்தியோக்கு மற்றவர்களுக்குக் கொடுத்திருந்தவற்றைப் போன்ற கொடிய துன்பங்களைத் தானும் அனுபவித்தபின் அயல்நாட்டின் மலைகளில் மிகவும் இரங்கத்தக்க நிலையில் சாவைச் சந்தித்தான்.
29அந்தியோக்கின் நெருங்கிய நண்பனான பிலிப்பு அவனது உடலை வீட்டுக்கு எடுத்துச்சென்றான்; பின்பு அவனுடைய மகனுக்கு அஞ்சி, எகிப்தில் இருந்த தாலமி பிலமேத்தோரிடம் அடைக்கலம் புகுந்தான்.

9:1-10 1 மக் 6:1-7; 2 மக் 1:11-17. 9:8 2 மக் 5:21. 9:11-17 1 மக் 6:8-17.