பெண்கள்

1உன் காதல் மனையாளைப்

பார்த்துப் பொறாமைப்படாதே;

உனக்கே தீங்கு விளைவிக்கும்

தீய பழக்கங்களை அவளுக்குச்

சொல்லிக்கொடாதே.

2ஒரு பெண்ணுக்கு நீ அடிமையாகாதே;

இல்லையேல், அவள்

உன்னையே அடக்கியாள நேரிடும்.

3நெறிகெட்டவளை அணுகிச் செல்லாதே;

அவளது வலைக்குள் வீழ்ந்திடுவாய்.

4பாடகியுடன் உனக்குத்

தொடர்பு வேண்டாம்.

அவளது மயக்கும்

வலையில் சிக்கிக்கொள்வாய்.

5கன்னிப்பெண்ணை

உற்று நோக்காதே;

நீ தடுமாறி அவளால்

தண்டனைக்கு ஆளாவாய்.

6விலைமாதரிடம் உன் உள்ளத்தைப்

பறிகொடாதே;

உன் உரிமைச் சொத்தை

நீ இழக்க நேரிடும்.

7நகரின் தெருக்களில்

அங்குமிங்கும் பராக்குப் பார்க்காதே;

ஆள்நடமாட்டமற்ற இடங்களில்

சுற்றித்திரியாதே.

8அழகான பெண்ணிடமிருந்து

உன் கண்களைத் திருப்பிக்கொள்;

பிறன் மனைவியின் அழகை

உற்றுநோக்காதே.

பெண்களின் அழகால்

பலர் நெறி பிறழ்ந்துள்ளனர்;

இதனால் காமம் தீயெனப் பற்றியெரியும்.

9அடுத்தவருடைய மனைவியுடன்

அமர்ந்து விருந்துண்ணாதே;

அவளுடன் மது அருந்திக் களிக்காதே;

உன் மனம் அவளிடம் மயங்கிவிடும்;

முடிவில் உன் வாழ்வே வீழ்ச்சியுறும்.

மற்றவர்களுடன் உறவு

10உன் பழைய நண்பர்களைக்

கைவிடாதே;

புதிய நண்பர்கள் அவர்களுக்கு

இணையாகமாட்டார்கள்;

புதிய நண்பர்கள் புதிய மதுவைப்

போன்றவர்கள்.

நாள் ஆக ஆகத்தான்

அதை நீ சுவைத்துக் களிப்பாய்.

11பாவிகளின் பெருமை கண்டு

பொறாமை கொள்ளாதே;

அவர்களுக்கு வரவிருக்கும்

கேடு உனக்குத் தெரியாது.

12இறைப்பற்றில்லாதவர்களுக்குப்

பிடித்தமானவற்றில் இன்பம்

கொள்ளாதே;

அவர்கள் தங்கள்

வாழ்நாளிலேயே தண்டனை

பெறுவார்கள் என்பதை

நினைவில் இருத்து.

13கொலை செய்ய அதிகாரம்

கொண்டவர்களை விட்டுத்

தொலைவில் இரு;

அப்பொழுது சாவுபற்றிய

அச்சத்தால் நீ

அலைக்கழிக்கப்படமாட்டாய்;

அவர்களிடம் நீ சென்றால்

தவறு ஏதும் செய்யாதே;

செய்தால் உன் உயிரை

அவர்கள் வாங்கிவிடுவார்கள்.

கண்ணிகள் நடுவே நீ நடக்கிறாய்

என்றும் நகரின் கோட்டை

கொத்தளங்களூடே செல்கிறாய்

என்றும் அறிந்துகொள்.

14அடுத்திருப்பவரை அறிய

முடிந்தவரை முயற்சி செய்;

ஞானிகளைக் கலந்து

ஆலோசனை செய்.

15அறிவுக்கூர்மை படைத்தவர்களோடு

உரையாடு;

உன் பேச்செல்லாம் உன்னத

இறைவனின் திருச்சட்டம்

பற்றி அமையட்டும்.

16நீதிமான்கள் உன்னுடன்

விருந்தாடட்டும்;

ஆண்டவரிடம் கொள்ளும்

அச்சமே உனது

பெருமையாக இருக்கட்டும்.

17கைவினைஞரின் திறமையைக்

கொண்டே பொருள்கள்

மதிப்புப் பெறுகின்றன;

மக்கள் தலைவர் தம்

பேச்சைக் கொண்டே

ஞானியாய் மதிக்கப்படுகிறார்.

18வாயாடியைக் கண்டு அவர்களின்

நகரத்தார் அஞ்சுவர்;

உளறு வாயரை ஊரார் வெறுப்பர்.


9:3 நீமொ 7:10-23. 9:5 இச 22:28-29. 9:8 2 சாமு 11:2-4; மத் 5:28. 9:10 நீமொ 27:10. 9:12 நீமொ 11:21. 9:14 தோபி 4:18.