1[*]

2தீய நாட்டங்களின் பிடியில்

சிக்கிக்கொள்ளாதே;

இல்லையேல்,

காளையிடம் சிக்கியவன்

போலக் கீறிக் குதறப்படுவாய்.

3உன் இலைகள் விழுங்கப்படும்;

கனிகள் அழிக்கப்படும்;

பட்ட மரம்போல நீ விடப்படுவாய்.

4தீய நாட்டங்களுக்கு

ஒருவர் இடம் கொடுத்தால்

அவையே அவரை அழித்துவிடும்;

அவர் பகைவரின்

நகைப்புக்கும் ஆளாவார்.

நட்பு

5இன்சொல் நண்பர்

தொகையைப் பெருக்கும்;

பண்பான பேச்சு

உன் மதிப்பை உயர்த்தும்.

6அனைவரோடும் நட்புடன் பழகு;

ஆனால் ஆயிரத்தில்

ஒருவரே உனக்கு

ஆலோசகராய் இருக்கட்டும்.

7ஆய்ந்து நட்புக்கொள்;

நண்பரையும் விரைவில்

நம்பிவிடாதே.

8தன்னலம் தேடும்

நண்பர்களும் உண்டு;

அவர்கள் உன் நெருக்கடியான

வேளையில் உன்னோடு

இருக்கமாட்டார்கள்.

9பகைவர்களாய் மாறும்

நண்பர்களும் உண்டு;

அவர்கள் உங்கள் பிணக்கை

மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி,

உனக்கு இழிவைக்

கொண்டு வருவார்கள்.

10உன்னுடன் விருந்துண்ணும்

நண்பர்களும் உண்டு;

அவர்கள் உன் நெருக்கடியான

வேளையில் உன்னோடு

இருக்கமாட்டார்கள்.

11நீ நல்ல நிலையில்

இருக்கும்போது,

அவர்கள் உன் உயிருக்கு உயிரான

நண்பர்களாய் இருப்பார்கள்;

உன் பணியாளர்களை

ஆட்டிப் படைப்பார்கள்;

12நீ தாழ்ந்துவிட்டால்

உனக்கு எதிராய்

அவர்கள் மாறுவார்கள்;

உன் முகத்தில் விழிக்கமாட்டார்கள்.

13உன் பகைவர்களிடமிருந்து

விலகி நில்;

உன் நண்பர்களிடம்

எச்சரிக்கையாய் இரு.

14நம்பிக்கைக்குரிய நண்பர்கள்

பாதுகாப்பான புகலிடம்

போன்றவர்கள்;

இத்தகைய நண்பர்களைக்

கண்டவர்கள்

புதையலைக் கண்டவரைப்

போன்றவர்கள்.

15நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு

ஈடான செல்வம் எதுவுமில்லை;

அவர்களது தகைமைக்கு

அளவுகோல் இல்லை.

16நம்பிக்கைக்குரிய நண்பர்கள்

நலம் அளிக்கும் மருந்து

போன்றவர்கள்;

ஆண்டவருக்கு அஞ்சுவோரே

இத்தகைய நண்பர்களைக்

கண்டடைவர்.

17ஆண்டவருக்கு அஞ்சுவோரே

முறையான நட்புப் பேணுவோர்.

அவர்களை அடுத்தவர்களும்

அவர்களைப்போலவே இருப்பார்கள்.

ஞானத்தை அடையப் பயிற்சி

18குழந்தாய், இளமைமுதல்

நற்பயிற்சியைத் தேர்ந்துகொள்;

முதுமையிலும் ஞானம் பெறுவாய்.

19உழுது, விதைத்து,

பின் நல்ல விளைச்சலுக்காகக்

காத்திருக்கும் உழவர்போன்று

ஞானத்தை அணுகு.

ஞானத்துக்காக உழைப்போர்

சிறிதளவே களைப்படைவர்;

விரைவிலேயே அதன் கனிகளை உண்பர்.

20நற்பயிற்சி இல்லாதவர்களிடம்

ஞானம் மிகக் கடுமையாக

நடந்துகொள்ளும்;

அறிவிலிகள் அதனோடு

நிலைத்திருக்கமுடியாது.

21அது அவர்களைச் சோதிக்கும்

பாறாங்கல்லாய் இருக்கும்;

அவர்கள் அதைத் தள்ளிவிடக்

காலம் தாழ்த்தமாட்டார்கள்.

22ஞானம் பெயர்ப் பொருத்தம்

உடையது;

பலருக்கு அது புலப்படுவதில்லை.

23குழந்தாய், உற்றுக்கேள்;

என் தீர்ப்புகளை ஏற்றுக்கொள்;

என் அறிவுரைகளைப் புறக்கணியாதே.

24ஞானத்தின் விலங்குகளில்

உன் கால்களைப் பிணைத்துக்கொள்;

அதன் சங்கிலியில் உன் கழுத்தைப்

புகுத்திக்கொள்.

25குனிந்து அதனைத் தோளில்

தூக்கிச் சுமந்து செல்;

அதன் தளைகளைக் கண்டு

எரிந்து விழாதே.

26உன் முழு உள்ளத்தோடும்

அதனை அணுகு;

உன் முழு வலிமையோடும்

அதன் வழியில் நடந்து செல்.

27அதனை நீ நாடித் தேடு;

அது உனக்குப் புலப்படும்.

அதனைச் சிக்கெனப் பிடி;

நழுவவிடாதே.

28முடிவில் அது அளிக்கும்

ஓய்வைப் பெறுவாய்;

அதுவே உனக்கு

மகிழ்ச்சியாய் மாறும்.

29அதன் விலங்குகள் உனக்கு

வலிமையான பாதுகாப்பு ஆகும்;

அதன் தளைகள் மாட்சிமிகு

ஆடையாக மாறும்.

30அதன் மீது பொன் அணிகலன்

உள்ளது;

அதன் தளைகள் நீல மணிவடமாகும்.

31ஞானத்தை மாட்சிமிகு

ஆடையாக அணிந்துகொள்;

மகிழ்ச்சிதரும் மணிமுடியாகச்

சூடிக்கொள்.

32சூழந்தாய், நீ விரும்பினால்

நற்பயிற்சி பெற முடியும்;

உன் கருத்தைச் செலுத்தினால்

திறமையுடன் திகழ முடியும்.

33கேட்டறிய ஆர்வம் கொண்டால்

அறிவு பெறுவாய்;

பிறருக்குச் செவிசாய்த்தால்

ஞானியாவாய்;

34மூப்பர்களின் தோழமையை நாடு;

ஞானிகள் யார் எனக் கண்டு

அவர்களைச் சார்ந்து நில்.

35கடவுளைப் பற்றிய எல்லா

உரைகளுக்கும் செவிசாய்ப்பதில்

ஆர்வம் காட்டு;

அறிவுக்கூர்மை கொண்ட

பழமொழிகளைக் கேட்காமல்

விட்டுவிடாதே.

36அறிவுக்கூர்மை படைத்தோரை

நீ கண்டுவிட்டால்,

விரைந்து அவர்களிடம் செல்;

உன் காலடி பட்டு அவர்களின்

வீட்டு வாயிற்படிகள் தேயட்டும்.

37ஆண்டவரின் நெறிமுறைகளை

எண்ணிப்பார்;

அவருடைய கட்டளைகளை

எப்போதும் உள்ளத்தில் இருத்து.

அவரே உன் உள்ளத்திற்குத்

தெளிவூட்டுவார்;

நீ விரும்பும் ஞானத்தை

உனக்கு அருள்வார்.


6:6 சஉ 7:28. 6:24 நீமொ 1:9. 6:27 நீமொ 4:13. 6:36 நீமொ 8:34. 6:37 திபா 1:2; யோசு 1:8.
6:1 5:15இ-ஈ, 6:1ஆகக் கொள்ளப் படுகிறது.