மருத்துவர்

1உன் தேவைக்கு ஏற்ப

மருத்துவர்களுக்கு

உரிய மதிப்பு வழங்கு;

ஆண்டவரே

அவர்களைப் படைத்தார்;

2உன்னத இறைவனே

நலம் அருள்கிறார்;

மன்னர் அவர்களுக்குப்

பரிசு வழங்குகிறார்.

3மருத்துவரின் அறிவாற்றல்

அவர்களைத் தலை நிமிர்ந்து

நடக்கச் செய்கிறது;

பெரியோர்கள் முன்னிலையில்

அவர்கள் வியந்து

பாராட்டப் பெறுவார்கள்.

4ஆண்டவர் நிலத்திலிருந்து

மருந்துவகைகளைப் படைத்தார்;

அறிவுத்திறன் கொண்டோர்

அவற்றைப் புறக்கணிப்பதில்லை.

5மரத்துண்டினால் தண்ணீர்

இனிமை பெறவில்லையா?

இவ்வாறு ஆண்டவருடைய

ஆற்றல் வெளிப்படவில்லையா?

6அவரே மனிதருக்கு

அறிவாற்றலைக் கொடுத்தார்.

இதனால் தம் வியத்தகு

செயல்களில் மாட்சி பெற்றார்.

7இவற்றைக் கொண்டு

மருத்துவர் நலம் அளிக்கிறார்;

வலியை நீக்குகிறார்.

மருந்து செய்வோர் இவற்றால்

கலவை செய்கின்றனர்.

8இவ்வாறு ஆண்டவரின்

வேலை முடிவு பெறாது;

அவரிடமிருந்தே உடல்நலம்

உலகெல்லாம் நிலவுகிறது.

9குழந்தாய்,

நீ நோயுற்றிருக்கும்போது

கவலையின்றி இராதே;

ஆண்டவரிடம் மன்றாடு.

அவர் உனக்கு நலம் அருள்வார்.

10குற்றங்களை அகற்று;

நேர்மையானவற்றைச் செய்;

எல்லாப் பாவங்களினின்றும்

உன் உள்ளத்தைத் தூய்மைப்படுத்து.

11நறுமணப் பலியையும்,

நினைவாகச் செலுத்தப்படும்

மாவுப் படையலையும்

ஒப்புக்கொடு;

உன்னால் முடியும் அளவுக்குப்

பலியின்மீது எண்ணெய் ஊற்று.

12மருத்துவருக்கும் அவருக்குரிய

இடத்தைக் கொடு;

ஏனெனில், ஆண்டவரே

அவரைப் படைத்தார்.

அவர் உன்னைவிட்டு

விலகாதிருக்கட்டும்;

ஏனெனில், அவர் உனக்குத் தேவை.

13நலம் பெறுதல் சில வேளைகளில்

மருத்துவர்கள் கையில் உள்ளது

எனக் கூறக்கூடிய நேரமும் உண்டு.

14ஏனெனில், வலி நீக்கி,

நலமாக்கி, உயிரைக் காப்பாற்றும்

அருளைத் தரவேண்டும் என

அவர்களும் ஆண்டவரை

மன்றாடுவார்கள்.

15தம்மைப் படைத்தவர் முன்னிலையில்

பாவம் செய்வோர்

மருத்துவரின் கைகளில் விழட்டும்.

இறந்தோருக்காகத் துயரம் கொண்டாடுதல்

16குழந்தாய், இறந்தவர்களுக்காகக்

கண்ணீர் சிந்து;

பெருந் துன்பங்களில் உழல்வோர்

போலப் புலம்பத் தொடங்கு.

இறந்தோருடைய உடலைத்

தகுந்த முறையில் மூடிவை;

அவர்களுடைய அடக்கத்திற்குச்

செல்லத் தவறாதே.

17மனம் வெதும்பி அழு;

உணர்வு பொங்கப் புலம்பு;

இழிவுப் பேச்சைத்

தவிர்க்கும்பொருட்டு

இறந்தவருடைய தகுதிக்கு ஏற்ப

ஒரு நாளோ இரு நாளோ

துயரம் கொண்டாடு.

பின்பு துன்பத்தில் ஆறுதல் பெறு.

18துன்பம் சாவை வருவிக்கிறது;

துயர்மிக்க உள்ளம்

வலிமையைக் குலைக்கிறது.

19பேரிடர் நிகழும் போது

துன்பம் நீடிக்கிறது;

ஏழையின் வாழ்க்கை

உள்ளத்தை வருத்துகிறது.

20உன் உள்ளத்தைத்

துன்பத்திற்கு ஒப்புவித்து விடாதே;

அதைத் துரத்திவிடு;

முடிவை நினைத்துக்கொள்.

21மறந்துவிடாதே;

இறந்தோர் திரும்பி வருவதில்லை.

அவர்களுக்கு நீ நன்மை

செய்ய முடியாது.

உனக்கு நீயே

தீங்கிழைத்துக்கொள்வாய்.

22“என்னுடைய நிலையை

நினைவில் கொள்;

உன்னுடையதும் இதைப் போன்றதே.

நேற்று எனக்கு, இன்று உனக்கு.”

23இறந்தோரின் அடக்கத்தோடு

அவர்களுடைய நினைவும்

அடக்கம் பெறட்டும்;

அவர்களுடைய ஆவி

பிரிந்தபின் அவர்களுக்காக

ஆறுதல் பெறு.

கைவினை

24ஓய்வு நேரம்

மறைநூல் அறிஞரின் ஞானத்தை

வளர்க்க வாய்ப்பு அளிக்கிறது.

குறைவான செயல்பாடு

உள்ளோரே ஞானத்தில் வளர்வர்.

25கலப்பையைப் பிடிக்கிறவர்,

தாற்றுக்கோலின் பிடியில்

பெருமை கொள்கிறவர்,

எருதுகளை ஓட்டி அவற்றின்

வேலைகளில் மூழ்கியிருக்கிறவர்,

இளங்காளைகளைப் பற்றியே

பேசிக் கொண்டிருக்கிறவர்

எவ்வாறு ஞானத்தில் வளர்வர்?

26அவர்கள் உழுசால் ஓட்டுவதில்

தங்கள் உள்ளத்தைச்

செலுத்துகிறார்கள்;

இளம் பசுக்களுக்குத் தீனி

வைப்பதில் விழிப்பாய் இருக்கிறார்கள்.

27இவர்களைப்போலவே,

எல்லாத் தொழிலாளரும்

கைவினைஞரும் இரவு பகலாக

வேலை செய்கின்றனர்;

செதுக்கிய முத்திரைகளை

உருவாக்குவோர் வகை வகையான

மாதிரிகளை உருவாக்குவதில்

ஊக்கம் கொண்டிருக்கின்றனர்;

உயிரோட்டமுள்ள உருவங்களைப்

படைப்பதில் மனத்தைச் செலுத்துவோர்

தங்கள் வேலையை முடிப்பதில்

விழிப்பாய் இருக்கின்றனர்.

28இவர்களைப்போலவே,

பட்டறை அருகில் அமர்ந்திருக்கும்

கொல்லர்கள் இரும்பு வேலையில்

குறியாய் இருக்கிறார்கள்.

நெருப்பின் வெப்பம் அவர்களது

சதையைச் சுடுகின்றது.

உலையின் வெப்பத்தில்

அவர்கள் போராடுகிறார்கள்.

சம்மட்டியின் ஒலி அவர்கள்

காதைச் செவிடாக்குகிறது.

செய்யும் கலத்தின் மாதிரிமீது

அவர்களின் கண்கள்

பதிந்திருக்கின்றன.

வேலைகளை முடிப்பதில்

அவர்கள் மனத்தைச்

செலுத்துகிறார்கள்;

அவற்றை அழகு செய்வதில்

விழிப்பாய் இருக்கிறார்கள்.

29இவர்களைப்போலவே,

வேலையில் அமர்ந்திருக்கும்

குயவர்கள் தங்கள்

கால்களால் சக்கரத்தைச்

சுழற்றுகிறார்கள்;

எப்போதும் தங்கள்

வேலையின் மீது ஆழ்ந்த

கவலை கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் முழு வேலையும்

அவர்கள் செய்த

கலன்களின் எண்ணிக்கையைப்

பொறுத்துள்ளது.

30அவர்கள் தங்கள் கையால்

களிமண்ணைப் பிசைகிறார்கள்;

தங்கள் கால்களால் அதனைப்

பதப்படுத்துகிறார்கள்;

கலன்களை மெருகிட்டு

முடிப்பதில் தங்கள்

உள்ளத்தைச் செலுத்துகிறார்கள்;

சூளையைத் தூய்மைப்படுத்துவதில்

விழிப்பாய் இருக்கிறார்கள்.

31இவர்கள் எல்லாரும் தங்கள்

கைகளையே நம்பியுள்ளனர்;

ஒவ்வொருவரும் தம் தொழிலில்

திறமை கொண்டுள்ளனர்.

32இவர்களின்றி நகர்கள்

குடியிருப்பாரற்றுக் கிடக்கும்;

அவற்றில் எவரும் தங்கி

வாழ்வதில்லை; உலாவுவதுமில்லை.

33ஆயினும் இவர்கள்

மக்கள் மன்றத்தில்

தேடப்படுவதில்லை;

மக்கள் சபையில் முதலிடம்

பெறுவதில்லை.

நடுவரின் இருக்கையில்

அமரமாட்டார்கள்;

நீதி மன்றத்தின் தீர்ப்புகளைப்

புரிந்துகொள்ளமாட்டார்கள்.

34நற்பயிற்சியையோ தீர்ப்பையோ

அவர்களால் விளக்கிக்கூற

இயலாது; உவமைகளைக்

கொண்டு பேசுவதைக்

காண முடியாது. ஆனால்,

படைப்பின் அமைப்பைப்

பேணிக் காப்பாற்றுகிறார்கள்;

அவர்களது வேண்டுதல் அவர்களது

தொழிலைப்பற்றியே இருக்கும்.


38:4 2 அர 20:7; எசே 47:12. 38:5 விப 15:23-25. 38:16-23 சீஞா 22:11-12. 38:29-30 சாஞா 15:7; எரே 18:3-4; எசா 45:9.