நல்லார், பொல்லாரின் முடிவு

1நீதி மான்களின் ஆன்மாக்கள்

கடவுளின் கையில் உள்ளன.

கடுந்தொல்லை எதுவும்

அவர்களைத் தீண்டாது.

2அறிவிலிகளின் கண்களில்

இறந்தவர்களைப்போல்

அவர்கள் தோன்றினார்கள்.

நீதிமான்களின் பிரிவு

பெருந்துன்பமாகக் கருதப்பட்டது.

3அவர்கள் நம்மைவிட்டுப்

பிரிந்து சென்றது

பேரழிவாகக் கருதப்பட்டது.

அவர்களோ

அமைதியாக இளைப்பாறுகிறார்கள்.

4மனிதர் பார்வையில்

அவர்கள் தண்டிக்கப்பட்டாலும்,

இறவாமையில் அவர்கள்

உறுதியான நம்பிக்கை

கொண்டுள்ளார்கள்.

5சிறிதளவு அவர்கள்

க‌ண்டித்துத் திருத்தப்பட்டபின்,

பேரளவு கைம்மாறு பெறுவார்கள்.

கடவுள் அவர்களைச்

சோதித்தறிந்தபின்,

அவர்களைத் தமக்குத்

தகுதியுள்ளவர்கள் என்று கண்டார்.

6பொன்னை உலையிலிட்டுப்

புடமிடுவதுபோல்

அவர் அவர்களைப் புடமிட்டார்;

எரிபலிபோல் அவர்களை

ஏற்றுக்கொண்டார்.

7கடவுள் அவர்களைச்

சந்திக்கவரும்போது

அவர்கள் ஒளி வீசுவார்கள்;

அரிதாள் நடுவே தீப்பொறிபோலப்

பரந்து சுடர்விடுவார்கள்;

8நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள்;

மக்கள்மீது ஆட்சிசெலுத்துவார்கள்.

ஆண்டவரோ அவர்கள்மீது

என்றென்றும் அரசாள்வார்.

9அவரை நம்புவோர்

உண்மையை அறிந்துகொள்வர்;

அன்பில் நம்பிக்கை கொள்வோர்

அவரோடு நிலைத்திருப்பர்.*

அருளும் இரக்கமும் அவர்

தேர்ந்து கொண்டோர் மீது இருக்கும்.**

10ஆனால் இறைப்பற்றில்லாதவர்கள்

தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப

தண்டிக்கப்படுவார்கள்;

ஏனெனில் அவர்கள்

நீதிமான்களைப் புறக்கணித்து,

ஆண்டவரை எதிர்த்தார்கள்.

11ஞானத்தையும் நற்பயிற்சியையும்

இகழ்பவர்கள்

இரங்கத்தக்கவர்கள்.

அவர்களது நம்பிக்கை வீணானது;

அவர்கள் உழைப்பு வெறுமையானது;

அவர்களின் செயல்கள் பயனற்றவை.

12அவர்களுடைய மனைவியர்

அறிவற்றவர்கள்;

அவர்களின் பிள்ளைகள் தீயவர்கள்;

அவர்களுடைய வழிமரபினர்

சபிக்கப்பட்டவர்கள்.

13தூய்மை இழக்காத,

தவறான உடலுறவு கொள்ளாத

மலடி பேறுபெற்றவர்;

மனிதரைக் கடவுள்

சந்திக்க வரும்போது

அப்பெண் கனி தருவார்.

14நெறிகெட்ட செயல்களைச் செய்யாத,

ஆண்டவருக்கு எதிராகத்

தீயவற்றைத் திட்டமிடாத

அண்ணகர்களும் பேறுபெற்றோர்.

அவர்களது பற்றுறுதிக்குச்

சிறப்புக் கைம்மாறு வழங்கப்படும்;

ஆண்டவரின் கோவிலில் அவர்களுக்கு

இனிமைமிக்க பங்கு அளிக்கப்படும்.

15நல்ல உழைப்பின் பயன்

புகழ்ச்சிக்குரியது.

அறிவுத்திறனின் ஆணிவேர்

அசைவுறாதது.

16விபசாரிகளின் மக்கள்

முதிர்ச்சி அடையமாட்டார்கள்;

தவறான உடலுறவால் பிறப்பவர்கள்

வேரோடு அழிவார்கள்.

17அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தாலும்

அவர்களை யாரும்

பொருட்படுத்த மாட்டார்கள்;

முதுமையின் இறுதிக் கட்டத்திலும்

அவர்கள் மதிப்புப் பெறமாட்டார்கள்.

18அவர்கள் இளமையில் இறந்தால்

அவர்களுக்கு நம்பிக்கை இராது;

தீர்ப்புநாளில் ஆறுதல் கிடைக்காது.

19நேர்மையற்ற தலைமுறையின் முடிவு

மிகக் கொடியது.


3:3 எசா 57:1-2. 3:5-6 2 கொரி 4:17; உரோ 8:18. 3:8 சீஞா 4:15.
3:9 ‘அவர் மீது நம்பிக்கைக் கொள்வோர் அவரோடு அன்பில் நிலைத்திருப்பர்’ என்றும் மொழிபெயர்க்கலாம். 3:9 ‘தம் தூயவர்களைச் சந்தித்து மீட்கிறார்’ என்னும் பாடம் சில சுவடிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. (காண் 4:15).