1ஒருவருக்கு மகப்பேறு இல்லாவிடினும்,
நற்பண்பு இருந்தால் அதுவே சிறந்தது;
நற்பண்பின் நினைவு
என்றும் அழியாதது;
அது கடவுளாலும் மனிதராலும்
கண்டுணரப்படும்.
2அந்நினைவு
பசுமையாய் இருக்கும்பொழுது
மாந்தர் அதனைப் பின்பற்றி நடப்பர்;
அது நீங்கியதும் அதற்காக ஏங்குவர்.
மாசற்ற பரிசுகளுக்காக
நற்பண்பு போராடி,
வெற்றி வாகை சூடி,
காலமெல்லாம் பீடுநடை போடுகிறது.
3இறைப்பற்றில்லாதவர்கள்
எண்ணற்ற பிள்ளைகளை
ஈன்றபோதிலும்
அவர்கள் தளிர்ப்பதில்லை;
மணவாழ்க்கைக்குப்
புறம்பே பிறந்த வழிமரபு
ஆழமாய் வேரூன்றுவதில்லை;
உறுதியாய் நிற்பதுமில்லை.
4சிறிது காலம் அவர்கள்
கிளைவிட்டுச் செழித்தாலும்,
உறுதியற்றவர்களாய்க்
காற்றினால்
அலைக்கழிக்கப்படுவார்கள்;
காற்றின் சீற்றத்தால்
வேரோடு களைந்தெறியப்படுவார்கள்.
5அவர்களுடைய கிளைகள்
வளர்ச்சி அடையுமுன்பே
முறிக்கப்படும்.
அவர்களுடைய கனிகள் பயனற்றவை;
உண்பதற்கு ஏற்ற அளவு
பழுக்காமையால்
அவை பாழாய்ப் போகும்.
6முறைகேடாகப் பிறந்த பிள்ளைகளே
தீர்ப்பு நாளில்
தங்கள் பெற்றோரின்
கூடா ஒழுக்கத்திற்குச்
சாட்சிகளாய் இருப்பார்கள்.
7நீதிமான்கள்
உரிய காலத்துக்கு முன் இறந்தாலும்,
இளைப்பாற்றி அடைவார்கள்.
8முதுமையின் மதிப்பு
நீடிய வாழ்வினால் வருவதன்று;
ஆண்டுகளின் எண்ணிக்கை
அதற்கு அளவுகோலன்று.
9ஞானமே மனிதர்க்கு
உண்மையான நரைதிரை;
குற்றமற்ற வாழ்க்கையே
உண்மையான பழுத்த முதுமை.
10நீதிமான் ஒருவர்
இறைவனுக்கு ஏற்புடையவராகி,
அவருடைய அன்பைப் பெற்றார்;
பாவிகள் நடுவில்
வாழ்ந்து கொண்டிருந்தபொழுதே
அவரால் எடுத்துக் கொள்ளப்பெற்றார்.
11தீமை அவரது அறிவுக்கூர்மையைத்
திசைதிருப்பாமல் இருக்கவும்,
வஞ்சகம் அவரது உள்ளத்தை
மாசுபடுத்தாமல் இருக்கவுமே
அவர் எடுத்துக்கொள்ளப்பெற்றார்.
12தீமையின் கவர்ச்சி
நன்மையானவற்றை
மறைத்துவிடுகிறது;
அலைக்கழிக்கும் இச்சை
மாசற்ற மனத்தைக்
கெடுத்துவிடுகிறது.
13அந்த நீதிமான் குறுகிய காலத்தில்
நிறைவு எய்தினார்;
நீண்டவாழ்வின் பயனை அடைந்தார்.
14அவரது ஆன்மா ஆண்டவருக்கு
ஏற்புடையதாய் இருந்தது.
தீமை நடுவினின் று
ஆண்டவர் அவரை
விரைவில் எடுத்துக்கொண்டார்.
15மக்கள் இதைப் பார்த்தார்கள்;
ஆனால் புரிந்துகொள்ளவில்லை.
ஆண்டவர்
தாம் தேர்ந்துகொண்டோர்மீது
அருளும் இரக்கமும் காட்டுகின்றார்;
தம் தூயவர்களைச் சந்தித்து
மீட்கிறார் என்பதை
அவர்கள் மனத்தில் ஏற்கவுமில்லை.
16இறந்துபோன நீதிமான்கள்
உயிர் வாழ்கின்ற
இறைப்பற்றில்லாதவர்களைக்
கண்டனம் செய்வார்கள்;
விரைவில் பக்குவம் அடைந்த
இளைஞர்கள்
நீண்ட நாள் வாழும்
தீய முதியவர்களைக்
கண்டனம் செய்வார்கள்.
17இறைப்பற்றில்லாதவர்கள்
ஞானிகளின் முடிவைக் காண்பார்கள்;
ஆனால், ஆண்டவர் அவர்களுக்காக
எத்தகைய திட்டம்
வகுத்துள்ளார் என்றும்
எந்த நோக்கத்திற்காக
அவர்களுக்குப் பாதுகாப்பு
அளித்துள்ளார் என்றும்
அறிந்துகொள்ளமாட்டார்கள்.
18அவர்கள் ஞானிகளை கண்டு
ஏளனம் செய்வார்கள்.
ஆண்டவரோ அவர்களைப் பார்த்து
எள்ளி நகையாடுவார்.
19ஏனெனில் இனி அவர்கள்
இழிந்த பிணம் ஆவார்கள்;
இறந்தோர் நடுவில் என்றென்றும்
அருவருப்புக்குரியோர் ஆவார்கள்.
ஆண்டவர் அவர்களைப்
பேச்சற்றுக் கீழே விழச் செய்வார்;
அடியோடு கலங்கவைப்பார்.
அவர்கள் முழுவதும்
அழித்தொழிக்கப்படுவார்கள்;
ஆழ்துயரில் மூழ்கடிக்கப்படுவார்கள்.
அவர்களின் நினைவுகூட
மறைந்துவிடும்.
20இறைப்பற்றில்லாதவர்களின்
பாவங்களைக் கணக்கிடும்போது,
அவர்கள் நடுங்கிக்கொண்டு
வருவார்கள்;
அவர்களுடைய நெறிகெட்ட செயல்கள்
அவர்களுக்கு எதிராக நின்று
குற்றம்சாட்டும்.