1“இறுதி நாள்களில் ஆண்டவரின்
கோவில் அமைந்துள்ள மலை;
மலைகளுக்கெல்லாம் உயர்ந்ததாய்
நிலைநிறுத்தப்படும்;
குன்றுகளுக்கெல்லாம் மேலாய்
உயர்த்தப்படும்;
மக்களினங்கள் அதை நோக்கிச்
சாரைசாரையாய் வருவார்கள்.
2வேற்றினத்தார் பலர்
அங்கு வந்து சேர்ந்து,
‘புறப்படுங்கள்,
ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்;
யாக்கோபின் கடவுளது
கோவிலுக்குப் போவோம்;
அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்;
நாமும் அவர் நெறிகளில் நடப்போம்’
என்பார்கள்;
ஏனெனில் சீயோனிலிருந்து
திருச்சட்டம் வெளிப்படும்;
எருசலேமிலிருந்து
ஆண்டவரின் வாக்கு புறப்படும்.
3அவரே பல மக்களினங்களுக்கு
இடையே உள்ள வழக்குகளைத்
தீர்த்துவைப்பார்;
தொலைநாடுகளிலும்
வலிமைமிக்க வேற்றினத்தார்க்கு
நீதி வழங்குவார்;
அவர்களோ தங்கள் வாள்களைக்
கலப்பைக் கொழுக்களாகவும்
தங்கள் ஈட்டிகளைக்
கருக்கரிவாள்களாகவும்
அடித்துக் கொள்வார்கள்;
ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம்
வாள் எடுக்காது;
அவர்கள் இனி ஒருபோதும்
போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள்.
4அவர்களுள் ஒவ்வொருவரும்
தம் திராட்சைத் தோட்டத்தின் நடுவிலும்,
அத்தி மரத்தின் அடியிலும்
அமர்ந்திருப்பர்;
அவர்களை அச்சுறுத்துவார்
எவருமில்லை;
ஏனெனில்,
படைகளின் ஆண்டவரது
திருவாய் இதை மொழிந்தது.
5மக்களினங்கள் யாவும்
தம் தெய்வத்தின் பெயரை வழிபடும்.
நாமோ, நம் கடவுளாகிய
ஆண்டவரின் பெயருக்கு
என்றென்றும் பணிந்திருப்போம்.
6அந்நாளில், “நான்
முடமாக்கப்பட்டோரை ஒன்று சேர்ப்பேன்;
விரட்டியடிக்கப்பட்டோரையும்
என்னால் தண்டிக்கப்பட்டோரையும்
ஒன்றுகூட்டுவேன்”
என்கிறார் ஆண்டவர்.
7முடமாக்கப்பட்டோரை
எஞ்சியோராய் ஆக்குவேன்;
விரட்டியடிக்கப்பட்டோரை
வலியதோர் இனமாக உருவாக்குவேன்;
அன்றுமுதல் என்றென்றும்
ஆண்டவராகிய நானே
சீயோன் மலைமேலிருந்து
அவர்கள்மேல் ஆட்சிபுரிவேன்.
8மந்தையின் காவல் மாடமே!
மகள் சீயோனின் குன்றே!
முன்னைய அரசுரிமை
உன்னை வந்துசேரும்;
மகள் எருசலேமின் அரசு
உன்னை வந்தடையும்.
9இப்போது நீ கூக்குரலிட்டுக்
கதறுவானேன்?
பேறுகாலப் பெண்ணைப்போல்
ஏன் வேதனைப்படுகின்றாய்?
அரசன் உன்னிடத்தில்
இல்லாமற் போனானோ?
உனக்கு அறிவு புகட்டுபவன்
அழிந்தொழிந்தானோ?
10மகளே சீயோன்!
பேறுகாலப் பெண்ணைப்போல
நீயும் புழுவாய்த் துடித்து வேதனைப்படு;
ஏனெனில், இப்பொழுதே
நீ நகரைவிட்டு வெளியேறுவாய்;
வயல்வெளிகளில் குடியிருப்பாய்;
பாபிலோனுக்குப் போவாய்;
அங்கிருந்து நீ விடுவிக்கப்படுவாய்;
உன் பகைவர் கையினின்றும்
ஆண்டவர் உன்னை மீட்டருள்வார்.
11இப்பொழுது, வேற்றினத்தார் பலர்
உனக்கு எதிராய்
ஒன்று கூடியிருக்கின்றார்கள்;
‘சீயோன் தீட்டுப்படட்டும்;
அதன் வீழ்ச்சியை
நம் கண்கள் காணட்டும்’
என்று சொல்லுகின்றார்கள்.
12ஆனால் அவர்கள் ஆண்டவரின்
எண்ணங்களை அறியவில்லை.
அவரது திட்டத்தையும்
புரிந்து கொள்ளவில்லை.
ஏனெனில் புணையடிக்கும் களத்தில்
அரிக்கட்டுகளைச் சேர்ப்பதுபோல்
அவர் அவர்களைச்
சேர்த்து வைத்திருக்கின்றார்.
13மகள் சீயோனே, நீ எழுந்து புணையடி;
நான் உன் கொம்பை இரும்பாக மாற்றுவேன்;
உன்னுடைய குளம்புகளை
வெண்கலம் ஆக்குவேன்;
மக்களினங்கள் பலவற்றை
நீ நொறுக்கிப்போடுவாய்;
அவர்களிடம் கொள்ளையடித்தவற்றை
ஆண்டவருக்கு அர்ப்பணிப்பாய்;
அவர்களது செல்வங்களை
அனைத்துலகின் ஆண்டவரிடம்
ஒப்படைப்பாய்.”