இஸ்ரயேல் தலைவர்களுக்கு எதிரான மீக்காவின் கண்டனக் குரல்

1அப்பொழுது நான் கூறியது:

“யாக்கோபின் தலைவர்களே!

இஸ்ரயேலின் குடும்பத்தை

ஆள்பவர்களே,

நீதியை அறிவிப்பது

உங்கள் கடமை அன்றோ!

2நீங்களோ நன்மையை வெறுத்துத்

தீமையை நாடுகின்றீர்கள்;

என் மக்களின் தோலை

உயிரோடே உரித்து,

அவர்கள் எலும்புகளிலிருந்து

சதையைக் கிழித்தெடுக்கின்றீர்கள்;

3என் மக்களின் சதையைத்

தின்கின்றீர்கள்;

அவர்களின் தோலை

உரிக்கின்றீர்கள்;

அவர்களின் எலும்புகளை முறித்து,

சட்டியில் போடப்படும்

இறைச்சி போலவும்,

கொப்பரையில் கொட்டப்படும்

மாமிசம் போலவும்

துண்டு துண்டாக்குகின்றீர்கள்.

4அப்பொழுது நீங்கள்

ஆண்டவரை நோக்கிக்

கூக்குரலிடுவீர்கள்;

ஆனால் உங்களுக்கு அவர்

செவிசாய்க்கமாட்டார்.

அந்த நேரத்தில் அவர் தம் முகத்தை

உங்களிடம் இருந்து

மறைத்துக்கொள்வார்;

ஏனெனில், உங்களின் செயல்கள்

தீயனவாய் இருக்கின்றன.”

5இறைவாக்கினர்களைக் குறித்து

ஆண்டவர் கூறுவது இதுவே:

“அவர்கள் என் மக்களைத்

தவறான வழியில்

நடத்திச் செல்கின்றார்கள்.

வயிறார உண்ணக் கொடுத்தவரிடம்

‘அமைதி உண்டாகுக!’ என

உரக்கச் சொல்கின்றார்கள்;

வாய்க்குத் தீனி போடாதவரிடம்

‘புனிதப் போர் வரும்’ எனக்

கூறுகின்றார்கள்.”

6ஆதலால் “இறைவாக்கினரே,

திருக்காட்சி உங்களுக்குக்

கிடைக்காது;

முன்னுரைத்தல் இராது;

காரிருள் உங்களைக்

கவ்விக் கொள்ளும்;

இனி உங்கள்மேல்

கதிரவன் ஒளி படராது;

பகலும் உங்களுக்கு

இருளாய் இருக்கும்.”

7காட்சி காண்பவர்கள்

மானக்கேடு அடைவார்கள்;

முன்னுரைப்பவர்கள்

நாணிப்போவார்கள்;

அவர்கள் அனைவரும்

தங்கள் வாயைப்

பொத்திக் கொள்வார்கள்;

ஏனெனில் கடவுளிடமிருந்து

மறுமொழி ஏதும் வராது.

8ஆனால், நான் யாக்கோபுக்கு

அவன் குற்றத்தையும்,

இஸ்ரயேலுக்கு அவன் பாவத்தையும்

அறிவிக்க,

வல்லமையாலும்

ஆண்டவரின் ஆவியாலும்,

நீதியாலும் ஆற்றலாலும்

நிரப்பப்பட்டுள்ளேன்.

9யாக்கோபு குடும்பத்தாரின்

தலைவர்களே,

இஸ்ரயேல் குடும்பத்தை ஆள்பவர்களே,

இதைக் கேளுங்கள்;

நீங்கள் நீதியை அருவருக்கிறீர்கள்;

நேர்மையானவற்றைக்

கோணலாக்குகின்றீர்கள்.

10இரத்தப்பழியால் சீயோனையும்,

அநீதியால் எருசலேமையும்

கட்டியெழுப்புகின்றீர்கள்.

11அந்த நகரின் தலைவர்கள்

கையூட்டு வாங்கிக்கொண்டு

தீர்ப்பு வழங்குகிறார்கள்;

அதன் குருக்கள்

கூலிக்காகப் போதிக்கின்றனர்;

இறைவாக்கினர்

பணத்துக்காக முன்னுரைக்கின்றனர்;

ஆயினும் ஆண்டவரது துணையை நம்பி,

‘ஆண்டவர் நம் நடுவில்

இருக்கின்றார் அல்லவா?

எனவே தீமை நம்மை அணுகாது’ என்று

சொல்லிக்கொள்கின்றார்கள்.

12ஆதலால், உங்களை முன்னிட்டுச்

சீயோன் வயல்வெளியைப்போல்

உழப்படும்;

எருசலேம் பாழடைந்த

மண் மேடாக மாறும்;

கோவில் உள்ள மலையோ

அடர்ந்த காடாகும்.”


3:12 எரே 26:18.