1அரண்சூழ் நகரில் வாழும் மக்களே!

உங்கள் மதில்களுக்குப் பின்னால்

ஒளிந்து கொள்ளுங்கள்;

உங்களுக்கு எதிராக

முற்றுகையிடப்பட்டுள்ளது;

இஸ்ரயேலின் ஆளுநன்

கோலால் கன்னத்தில் அடி பெறுவான்.

ஆட்சி செலுத்துபவர் பெத்லெகேமிலிருந்து தோன்றுவார்

2நீயோ, எப்ராத்தா எனப்படும்

பெத்லகேமே!

யூதாவின் குடும்பங்களுள்

மிகச் சிறியதாய் இருக்கின்றாய்!

ஆயினும், இஸ்ரயேலை

என் சார்பாக ஆளப் போகின்றவர்

உன்னிடமிருந்தே தோன்றுவார்;

அவர் தோன்றும் வழி மரபோ

ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்.

3ஆதலால்,

பேறுகால வேதனையில் இருப்பவள்

பிள்ளை பெறும்வரை

அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்;

அதன் பின்னர்

அவருடைய இனத்தாருள்

எஞ்சியிருப்போர்

இஸ்ரயேல் மக்களிடம்

திரும்பி வருவார்கள்.

4அவர் வரும்போது,

ஆண்டவரின் வலிமையோடும்

தம் கடவுளாகிய ஆண்டவரது

பெயரின் மாட்சியோடும் விளங்கித்

தம் மந்தையை மேய்ப்பார்;

அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்;

ஏனெனில், உலகின்

இறுதி எல்லைகள்வரை

அப்போது அவர்

மேன்மை பொருந்தியவராய்

விளங்குவார்;

5அவரே அமைதியை அருள்வார்.

விடுதலையும் தண்டனைத் தீர்ப்பும்

5அசீரியர் நம் நாட்டிற்குள்

படையெடுத்து வரும்போதும்,

நம் அரண்களை

அழித்தொழிக்கும்போதும்

அவர்களுக்கு எதிராக

மேய்ப்பர் எழுவரையும்

மக்கள் தலைவர் எண்மரையும்

நாம் கிளர்ந்தெழச் செய்வோம்.

6அவர்கள் அசீரியா நாடு முழுவதையும்

நிம்ரோது நாட்டை

அதன் நுழைவாயில்கள் வரையிலும்

தங்கள் வாளுக்கு

இரையாக்குவார்கள்;

அசீரியர் நம் நாட்டிற்குள்

படையெடுத்து வரும் போதும்,

நம் எல்லைகளைக் கடந்து வரும்போதும்,

நம்மை அவர்களிடமிருந்து

விடுவிப்பார்கள்.

7அப்போது யாக்கோபில் எஞ்சியிருப்போர்

ஆண்டவரிடமிருந்து வரும்

பனியைப் போலவும்

மனிதருக்காகக் காத்திராமலும்

மானிடர்க்காகத் தாமதிக்காமலும்,

புல்மேல் பெய்கின்ற

மழைத்துளிகள் போலவும்,

பல மக்களினங்களிடையே இருப்பார்கள்.

8மேலும், யாக்கோபிலே எஞ்சியிருப்போர்

காட்டு விலங்குகளிடையே இருக்கும்

சிங்கம் போலவும்,

ஆட்டு மந்தைக்குள் நுழைந்து

யாரும் விடுவிக்க இயலாத நிலையில்

அவற்றை மிதித்துத்

துண்டு துண்டாய்க் கிழித்துப் போடும்

சிங்கக் குட்டி போலவும்,

பல மக்களினங்களிடையே இருப்பார்கள்.

9உனது கை

உன்னுடைய பகைவர்களுக்கு மேலாக

உயர்த்தப்படும்;

உன்னுடைய எதிரிகள் அனைவரும்

அழிந்தொழிவார்கள்.

10அந்நாளில், “நான் உன்னிடமுள்ள

உன் குதிரைகளை வெட்டி வீழ்த்துவேன்;

உன் தேர்ப்படையை அழித்தொழிப்பேன்”

என்கிறார் ஆண்டவர்.

11“உன் நாட்டிலுள்ள நகர்களைத்

தகர்த்தெறிவேன்;

உன் அரண்கள் அனைத்தையும்

தரைமட்டமாக்குவேன்.

12உன்னுடைய மாயவித்தைக்காரர்களை

ஒழித்துக்கட்டுவேன்;

குறிசொல்லுவோர்

உன்னிடம் இல்லாதொழிவர்.

13நீ செய்து வைத்திருக்கும்

சிலைகளையும் படிமங்களையும்

உடைத்தெறிவேன்;

உன் கைவினைப் பொருள்கள்முன்

இனி நீ தலைவணங்கி நிற்கமாட்டாய்.

14நீ நிறுத்தியிருக்கும் கம்பங்களைப்

பிடுங்கி எறிவேன்;

உன் நகரங்களை அழித்தொழிப்பேன்.

15எனக்குச் செவி கொடாத

வேற்றினத்தார்மேல்

சினத்துடனும் கடும் சீற்றத்துடனும்

பழிதீர்த்துக் கொள்வேன்.”


5:2 மத் 2:6; யோவா 7:42. 5:6 தொநூ 10:8-11.