எளியோரை ஒடுக்குவோருக்கு வரும் தண்டனை

1தங்கள் படுக்கைகளின்மேல் சாய்ந்து

தீச்செயல் புரியத் திட்டமிட்டுக்

கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு

ஐயோ கேடு!

பொழுது புலர்ந்தவுடன்

தங்கள் கைவலிமையினால்

அவர்கள் அதைச்

செய்து முடிக்கின்றார்கள்.

2வயல் வெளிகள்மீது ஆசை கொண்டு,

அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள்;

வீடுகள்மேல் இச்சை கொண்டு

அவற்றைக்

கைப்பற்றிக் கொள்கின்றார்கள்;

ஆண்களை ஒடுக்கி,

அவர்கள் வீட்டையும்

உரிமைச் சொத்தையும்

பறிமுதல் செய்கின்றார்கள்.

3ஆதலால், ஆண்டவர் கூறுவது இதுவே:

“இந்த இனத்தாருக்கு எதிராகத்

தீமை செய்யத் திட்டமிடுகிறேன்;

அதனினின்று

உங்கள் தலையை விடுவிக்க

உங்களால் இயலாது;

நீங்கள் ஆணவம் கொண்டு

நடக்கமாட்டீர்கள்;

ஏனெனில், காலம் தீயதாய் இருக்கும்.

4அந்நாளில் மக்கள் உங்களைப் பற்றி

இரங்கற்பா இயற்றி,

‘அந்தோ! நாங்கள் அழிந்து ஒழிந்தோமே;

ஆண்டவருடைய மக்களின்

உரிமைச்சொத்து கைமாறிவிட்டதே!

நம்முடைய நிலங்களைப் பிடுங்கிக்

கொள்ளைக்காரர்களுக்குப்

பகிர்ந்தளிக்கின்றாரே!’ என்று

ஒப்பாரி வைத்துப் புலம்புவார்கள்.

5ஆதலால், நூல்பிடித்துப்

பாகம் பிரித்து

உங்களுக்குத் தருபவன் எவனும்

ஆண்டவரின் சபையில் இரான்.

6அவர்கள் பிதற்றுவது:

‘சொற்பொழிவுகளை நிறுத்துங்கள்;

அவற்றைக் குறித்துப் பேசவேண்டாம்;

மானக்கேடு நம்மை அணுகாது.

7யாக்கோபின் குடும்பத்தாரே,

ஆண்டவர் பொறுமையிழந்து விட்டாரோ?

இவற்றைச் செய்பவர் அவர்தாமோ?

நேர்மையாய் நடப்போரிடம்

அவர் பரிவுடன் பேசமாட்டாரோ?’

8ஆனால், நீங்கள்தாம் என் மக்களைப்

பகைவரைப்போல் தாக்குகின்றீர்கள்!

போரில் நாட்டம் கொள்ளாமல்,

அமைதியை நாடுவோரின்

மேலாடையைப் பறிக்கின்றீர்கள்;

இதனால், அவர்களின்

மன அமைதியைக் கெடுக்கின்றீர்கள்;

9என் மக்களின் கூட்டத்திலுள்ள

பெண்களை

அவர்களுடைய அழகிய வீடுகளிலிருந்து

விரட்டுகின்றீர்கள்;

அவர்களுடைய பச்சிளம் குழந்தைகளிடம்

என் மாட்சி என்றும் விளங்காதவாறு

செய்துவிடுகின்றீர்கள்.

10எழுந்து அகன்றுபோங்கள்;

இது இளைப்பாறும் இடம் அல்ல;

நாட்டில் தீட்டு ஏற்பட்டுவிட்டது;

அது அழிவைக் கொண்டுவரும்.

அது மிகக்கொடிய பேரழிவாய் இருக்கும்.

11‘திராட்சை இரசத்தையும்

மதுவையும்பற்றி

உங்களுக்கு உரையாற்றுவேன்’

என்று கூறி,

வீண் சொற்களையும்

பொய்களையும் பிதற்றுகிறவன்தான்

இம்மக்களுக்கு ஏற்ற உரையாளன்!

12யாக்கோபே!

நான் உங்கள் அனைவரையும்

ஒன்றாகக் கூட்டுவேன்;

இஸ்ரயேலில் எஞ்சியோரை

ஒன்றாகத் திரட்டுவேன்;

இரைச்சலிடும் அந்தக் கூட்டத்தை

ஆடுகளைக் கிடையில்

மடக்குவது போலவும்;

மந்தையை மேய்ச்சல் நிலத்தில்

வளைப்பது போலவும்

ஒன்றாகச் சேர்ப்பேன்.

13அவர்களின் வழிகாட்டிகள்

தடைகளைத் தகர்த்தெறிந்து

வெளியேறுவார்கள்;

அவர்களின் அரசர்

அவர்களுக்கு முன்னால்

கடந்து செல்வார்;

ஆண்டவரே அவர்களை

வழிநடத்திப் போவார்.”