இரத்தத்தின் புனிதம்

1ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2“ஆரோன், அவன் புதல்வர், எல்லா இஸ்ரயேல் மக்கள் ஆசியோரிடம் நீ கூறவேண்டிய ஆண்டவரின் வார்த்தை இதுவே:
3“இஸ்ரயேல் குடும்பத்தைச் சேர்ந்த யாரேனும் மாடு, ஆடு, அல்லது வெள்ளாடு இவற்றைச் சந்திப்புக்கூடார வாயிலான ஆண்டவர் உறையும் இடத்தில் அவரது திருமுன் ஆண்டவருக்குச் செலுத்தும்படி கொண்டு வராமல்,
4குடியிருப்பிலோ, குடியிருப்பு எல்லைக்கு வெளியிலோ கொலை செய்தால், அது அவருக்குப் பழியாகும். குருதி சிந்தச் செய்ததால், அவர் தமது இனத்தினின்று அழிக்கப்படுவார்.
5எனவே, இஸ்ரயேல் மக்கள், வயல் வெளியில் பலியிடுகிற தங்கள் பலிகளைச் சந்திப்புக் கூடாரவாயிலுக்கு ஆண்டவர் திருமுன் கொண்டுவந்து, அங்கே அவருக்கு நல்லுறவுப் பலிகளாகச் செலுத்துவார்கள்.
6அங்குக் குரு அந்த இரத்தத்தைச் சந்திப்புக் கூடாரவாயிலில் இருக்கும் ஆண்டவரின் பலிபீடத்தின்மேல் தெளித்து, கொழுப்பை ஆண்டவருக்கு உகந்த நறுமணமாக எரிப்பார்.
7அவர்கள் கள்ளத்தனமாய்ப் பின்பற்றிவந்த பேய்களுக்கு இனித் தங்கள் பலிகளைச் செலுத்தக்கூடாது. இது அவர்களுக்கு என்றுமுள நியமம் ஆகும்.
8எனவே, நீ அவர்களிடம் கூறவேண்டியது: இஸ்ரயேல் வீட்டாரிலோ, அவர்களோடு தங்கும் அந்நியர்களிலோ யாரேனும் எரிபலி செலுத்தினால்,
9அதனைச் சந்திப்புக் கூடார வாயிலில் ஆண்டவருக்குச் செலுத்தும்படி கொண்டு வராவிடில், அவர் அவரது இனத்தவருள் இராமல் அழிக்கப்படுவார்.
10இஸ்ரயேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்கும் அந்நியரிலும் ஒருவர் குருதியை அருந்தினால், குருதி அருந்தியவருக்கு எதிராக நான் என்முகத்தைத் திருப்பி, அந்த மக்களிடையே அவர் இராதபடி அழிப்பேன்.
11உடலின் உயிர் குருதியில் உள்ளது. அதனை நான் உங்களுக்காகப் பலிபீடத்தின்மேல் உங்கள் உயிருக்கெனப் பாவக்கழுவாய் செய்யும்படி ஆணையிட்டேன். ஏனெனில், அது உயிருக்கான பாவக்கழுவாய் நிறைவேற்றும் குருதி.
12எனவேதான், இஸ்ரயேல் மக்களுக்குச் சொன்னேன்; உங்களில் ஒருவரும் குருதியை அருந்த வேண்டாம். உங்களிடையே தங்கும் அந்நியரும் அருந்த வேண்டாம்.
13இஸ்ரயேல் மக்களிலோ, உங்களிடையே தங்கும் அந்நியரிலோ ஒருவர் உண்ணத்தக்க ஒரு விலங்கை அல்லது பறவையை வேட்டையாடிப்பிடித்தால், அவர் அதன் குருதியைத் தரையில் சிந்தவிட்டு மண்ணால் மூடவேண்டும்.
14ஏனெனில், அனைத்து உடலுக்கும் அதுவே உயிர், அதன் குருதி உயிர் போன்றது. ஆகையால், இஸ்ரயேல் மக்களுக்கு, ‘எந்த உடலையும் குருதியோடு உண்ணாதீர்கள்’ என்று சொன்னேன். ஏனெனில், எல்லா உடலின் உயிரும் குருதியே; அதனை உண்பவர் அழிவார்.
15குடிமக்களிலும் அந்நியரிலும் செத்த உடலை அல்லது பீறிக் கிழிக்கப்பட்டதை உண்பவர் தம் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகுவார். அவர் மாலைமட்டும் தீட்டாயிருப்பார். பின்னர், தூய்மையாவார்.
16அவர் தம் உடைகளைத் துவைக்காமலும் தம் உடலைக் கழுவாமலும் இருந்தால், தம் குற்றத்தைத் தாமே சுமப்பார்”.

17:10 தொநூ 9:4; லேவி 7:26-27; 19:26; இச 12:16-23; 15:23. 17:11 எபி 9:22.