பாவக் கழுவாய் நிறைவேற்றும் நாள்

1ஆரோனின் புதல்வர் இருவர் ஆண்டவரது திருமுன்னிலையை நெருங்கியதால் சாவுக்குள்ளானபின், ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2“ஆரோனிடம் நீ கூற வேண்டியது; அவன் சாகாது இருக்க வேண்டுமெனில், தூயகத்தில் தொங்குதிரைக்கு உள்ளே இருக்கும் இரக்கத்தின் இருக்கையின் மூடிக்கு முன்பாக, அவன் விரும்பும் போதெல்லாம் வரக்கூடாது; வந்தால் சாவுக்குள்ளாவான். ஏனெனில், இரக்கத்தின் இருக்கையின்மேல் மேகத்தில் நான் தோன்றுவேன்.
3ஒரு காளையைப் பாவம் போக்கும் பலியாகவும் ஓர் ஆட்டுக்கிடாயை எரிபலியாகவும் செலுத்தி ஆரோன் தூயகத்திற்குள் நுழையலாம்.
4அவன் புனித நார்ப்பட்டு மேற்சட்டை அணியவேண்டும். நார்ப்பட்டாலான உள்ளாடை, கச்சை, தலைப்பாகை அணிய வேண்டும். இந்தப் புனித ஆடைகளை நீராடிய பின்னரே அவன் அணியலாம்.
5இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு பாவம்போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக் கிடாய்கள் இரண்டையும் எரி பலிக்காக ஆட்டுக்கிடாய் ஒன்றையும் கொண்டுவர வேண்டும்.
6ஆரோன், பாவம் போக்கும் பலிக்குரிய காளையைத் தனக்காகவும் தன் குடும்பத்தினருக்காகவும் பலியிட்டுப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான்.
7வெள்ளாட்டுக் கிடாய்கள் இரண்டையும் சந்திப்புக் கூடார வாயிலில், ஆண்டவர் திருமுன் நிறுத்த வேண்டும்.
8ஆண்டவருக்கென ஒன்றும் போக்கு ஆடாக விடப்படுவதற்கென ஒன்றுமாக அந்தக் கிடாய்கள்மேல் சீட்டு இடப்படும்.
9ஆண்டவருக்கெனச் சீட்டு விழுந்த ஆட்டுக்கிடாயைப் பாவம் போக்கும் பலியாகச் செலுத்த வேண்டும்.
10போக்கு ஆடாக விடப்படுவதற்கெனச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கிடாய், பாவக்கழுவாய்க்கெனப் பாலை நிலத்திற்கு அனுப்பப்படுமாறு, ஆண்டவர் திருமுன் உயிருடன் நிறுத்தி வைக்கப்படும்.
11ஆரோன் பாவம்போக்கும் பலிக்குரிய காளையைத் தன் குடும்பத்தாருக்காகவும் பலியிட்டுப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான்.
12ஆரோன் கலசத்தை ஆண்டவர் திருமுன் இருக்கும் பலிபீடத்து நெருப்புத்தணலால் நிரப்பிக்கொண்டு, பொடியாக்கப்பட்ட நறுமணமிக்க சாம்பிராணியும் எடுத்துக் கொண்டு, தொங்குதிரைக்கு உள்ளே வருவான்.
13அவன் சாகாதிருக்க, உடன்படிக்கைப் பேழையின்மேல் இருக்கும் இரக்கத்தின் இருக்கையைப் புனிதப்புகை மூடுமளவிற்கு ஆண்டவர் திருமுன் நெருப்பில் சாம்பிராணி போடுவான்.
14மேலும், அவன் கீழே நின்று கொண்டு, காளையின் இரத்தத்தில் சிறிது எடுத்து இரக்கத்தின் இருக்கைமீது தன் விரலால் தெளிப்பான். மீண்டும் சிறிது எடுத்து இரக்கத்தின் இருக்கை முன்னர் ஏழுமுறை தெளிப்பான்.
15மக்களின் பாவம்போக்கும் பலியான வெள்ளாட்டுக்கிடாயை அவன் அடித்து, அதன் இரத்தத்தைத் தொங்குதிரைக்கு உள்ளே கொண்டு செல்வான், காளையின் இரத்தத்தைக் தெளித்தது போலவே, இதனையும் இரக்கத்தின் இருக்கையின்மேலும், அதன் முன்னிலையிலும் தெளிப்பான்.
16இஸ்ரயேல் மக்களின் தீட்டுகளை முன்னிட்டும் அவர்களின் பாவங்களால் விளைந்த குற்றங்களை முன்னிட்டும் தீட்டுப்பட்ட தூயகத்திற்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான்; அவர்களின் தூய்மையற்ற நிலைக்குள் அமைந்துள்ள சந்திப்புக் கூடாரத்துக்காகவும் அவன் அப்படியே செய்வான்.
17அவன் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் சபை மக்கள் அனைவருக்காகவும் பாவக்கழுவாய் நிறைவேற்றும்படி தூயகத்திற்குள் சென்று, பாவக்கழுவாய் நிறைவேற்றிவிட்டு வெளியே வரும் வரை சந்திப்புக்கூடாரத்தில் எவரும் இருத்தல் கூடாது.
18அவன் ஆண்டவர் திருமுன் இருக்கிற பலிபீடத்திற்கு அருகில் வந்து அதற்குப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான். காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக் கிடாயின் இரத்தத்திலும் சிறிது எடுத்துப் பலிபீடக் கொம்புகளில் பூசுவான்.
19தன் விரலினால் அந்த இரத்தத்தை எடுத்து, ஏழு முறை அதன் மேல் தெளித்து, இஸ்ரயேல் மக்களின் தீட்டுகள் நீங்க அர்ப்பணிப்பான்.

போக்கு ஆடு

20இவ்வாறு, அவன் தூயகத்திற்கும், சந்திப்புக் கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும் கழுவாய் நிறைவேற்றியபின், உயிரோடிருக்கிற ஆட்டுக்கிடாயைக் கொண்டுவருவான்.
21ஆரோன் இரு கைகளையும் உயிரோடிருக்கும் அந்தக் கிடாயின் மேல் வைத்து, இஸ்ரயேல் மக்களின் எல்லாக் குற்றங்களையும் தவறுகளையும் பாவங்களையும் அறிக்கையிட்டு அதன் தலைமேல் சுமத்தி, அதைப் பாலை நிலத்துக்குக் கொண்டு செல்ல நியமிக்கப்பட்ட ஆள் மூலம் அங்கு அனுப்பிவிடுவான்.
22அந்த வெள்ளாட்டுக் கிடாய் அவர்களின் பாவங்களைச் சுமந்துகொண்டு தனிமையான இடத்திற்குச் செல்லும்; அந்த ஆள் அதைப் பாலைநிலத்தில் விட்டுவிடுவான்.
23ஆரோன் சந்திப்புக் கூடாரத்திற்கு வந்து, தூயகத்தில் உடுத்தியிருந்த நார்ப்பட்டு ஆடைகளை அங்கே களைந்து வைத்துவிடுவான்.
24பின்பு, அவன் தூய்மையான இடத்தில் குளித்துத் தன் ஆடைகளை அணிந்துகொண்டு தன் எரி பலியையும் மக்களின் எரிபலிகளையும் செலுத்தி, தனக்காகவும் மக்களுக்காகவும் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான்.
25பாவம் போக்கும் பலியின் கொழுப்பை அவன் பலிபீடத்தில் எரித்து விடுவான்.
26போகவிட்ட போக்கு ஆடாகிய வெள்ளாட்டுக் கிடாயைக் கொண்டு போய் விட்டவன், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்த பின்னரே பாளையத்துக்குள் வருவான்.
27தூயகத்திற்குள் பாவம் போக்குவதற்கென இரத்தம் எடுக்கப்பட்ட காளையும் கிடாயும், பாளையத்திற்கு வெளியே கொண்டுபோகப்படும்; அவற்றின் தோல், இறைச்சி, சாணம் ஆகியவை நெருப்பில் சுட்டெரிக்கப்படும்.
28அவற்றை எரித்தவன் தன்உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்த பின்னரே பாளையத்திற்குள் வருவான்.

பாவக்கழுவாய் நிறைவேற்றும் நாளுக்கான நெறிமுறைகள்

29ஏழாம் மாதம் பத்தாம் நாள் குடிமக்களும் உங்களோடு வாழும் அன்னியரும் வேலை ஒன்றும் செய்யாமல் நோன்பிருக்க வேண்டும். இது உங்களுக்கு என்றுமுள் நியமம் ஆகும்.
30அந்த நாளில் நீங்கள் தூய்மையாக்கப்படும்படி உங்களுக்கெனப் பாவக்கழுவாய் நிறைவேற்றப்படும்; ஆண்டவர் திருமுன் உங்கள் பாவங்களுக்காகக் கழுவாய் நிறைவேற்றப்பட, நீங்கள் தூய்மையடைவீர்கள்.
31அது உங்களுக்கு நோன்புநாள். அந்த நாள் நீங்கள் முழு ஓய்வெடுக்கும் ‘ஓய்வு நாள்’. இது என்றுமுள நியமம் ஆகும்.
32அருள்பொழிவு செய்யப்பட்டு, தன் தந்தைக்குப் பின்னர் குருவாக நியமனம் பெற்றவனே பாவக்கழுவாய் நிறைவேற்றுவான். அவன் தூய உடைகளான நார்ப்பட்டு ஆடைகளை அணிந்து கொண்டு,
33தூயகத்திற்காகவும், சந்திப்புக் கூடாரத்திற்காகவும் பாவக் கழுவாய் நிறைவேற்றுவான். குருக்களுக்காகவும், சபையின் எல்லா மக்களுக்காகவும் பாவக் கழுவாய் செய்வான்.
34ஆண்டுக்கு ஒரு முறை இஸ்ரயேல் மக்களுக்காகவும் அவர்களுடைய எல்லாப் பாவங்களுக்காகவும் கழுவாய் நிறைவேற்ற வேண்டும். இது என்றுமுள நியமம் ஆகும் என்று சொல்” என்றார். ஆண்டவர் இட்ட ஆணையின்படி மோசே செய்தார்.

16:2 எபி 6:19. 16:3 எபி 9:7. 16:15 எபி 9:12. 16:23 எசே 44:19. 16:27 எபி 13:11. 16:29-34 லேவி 23:26-32; எண் 29:7-11.