வடநாட்டிற்கு எதிரான எச்சரிக்கை

1எப்ராயிமின் குடிவெறியரின் மாண்பு

மிகு மணிமுடிக்கு ஐயோ கேடு!

வாடுகின்ற மலராய், அதன் மேன்மை மிகு

எழில் குலைகின்றதே!

பள்ளத்தாக்கில் அது அமைந்துள்ளதே!

நறுமணம் பூசிய தலைவர்கள்

மது மயக்கத்தால்

வீழ்ந்து கிடக்கின்றனரே!

2இதோ ஆற்றலும் வலிமையும் மிக்கோன்

என் தலைவரிடம் உள்ளான்;

அவன் கல்மழையென,

அழிக்கும் புயலென,

கரை புரண்டோடும்

பெருவெள்ளமென வந்து,

தன் கைவன்மையால்

அதைத் தரையில் வீழ்த்துவான்.

3எப்ராயிம் குடிவெறியரின்

மாண்புமிகு மணிமுடி

கால்களால் மிதிக்கப்படும்.

4வாடுகின்ற மலராய் அதன்

மேன்மை மிகு எழில் குலைகின்றது;

நறுமணம் பூசிய தலைவர்கள்

வீழ்ந்து கிடக்கின்றனர்;

இது கோடைக்காலம் வரும் முன்

பழுத்த அத்திப்பழம் போலாகும்;

அதைக் காண்பவன்

தன் கைக்கு எட்டியதும்

அதை விழுங்கி விடுவான்.

5அந்நாளில் படைகளின் ஆண்டவரே,

தம் மக்களுள் எஞ்சியோருக்கு

எழில்மிகு மணிமுடியாகவும்

மாண்புமிகு மகுடமாகவும் இருப்பார்.

6நீதி வழங்க அமர்வோனுக்கு

நீதியின் உணர்வாகவும்

நகரவாயிலைத் தாக்குவோர்

புறமுதுகிடுமாறு போராடுவோர்க்கு

ஆற்றலாகவும் அவர் இருப்பார்.

எசாயாவும் யூதாவின் குடிகார இறைவாக்கினரும்

7குருக்களும் இறைவாக்கினரும்

திராட்சை இரசத்தால் தடுமாறுகின்றனர்;

மதுவால் தள்ளாடுகின்றனர்;

அவர்கள் மதுவால் மதி மயங்குகின்றனர்;

திராட்சை மதுவுக்கு அடிமையாகின்றனர்;

மதுவால் மயங்குகின்றனர்;

காட்சி காணுகையில் மருள்கின்றனர்;

நீதி வழங்குகையில் தடுமாறுகின்றனர்!

8மேசைகள் எல்லாம்

வாந்தியால் நிறைந்துள்ளன;

அழுக்குப் படியாத இடமே இல்லை!

9“இவன் யாருக்கு அறிவு புகட்டுவான்?

யாருக்குச் செய்தியைப்

புரியுமாறு எடுத்துரைப்பான்?

பால்குடி மறந்தோர்க்கா?

தாய்ப்பாலை விட்டு அகன்றோர்க்கா?

10ஏனெனில் கட்டளை மேல் கட்டளை,

கட்டளை மேல் கட்டளை;

அளவு நூலுக்குமேல் அளவுநூல்,

அளவு நூலுக்கு மேல் அளவுநூல்;

இங்கே கொஞ்சம்,

அங்கே கொஞ்சம்” என்கின்றனர்.

11ஆனால் குழறிய பேச்சும்

புரியாத மொழியும் கொண்டோர் மூலம்

ஆண்டவர் இம்மக்களுக்குப்

பாடம் கற்பிப்பார்.

12“இதோ உள்ளது இளைப்பாற்றி;

களைத்தவன் இளைப்பாறட்டும்;

இதோ உள்ளது இளைப்பாற்றி” என்று

அவர்களுக்குச் சொன்னாலும்

செவி கொடுக்க மாட்டார்கள்.

13ஆதலால் ஆண்டவரின் வார்த்தை

அவர்களுக்குக்

கட்டளைமேல் கட்டளையாகவும்

அளவுநூல்மேல் அளவு நூலாகவும்

இங்கே கொஞ்சம்

அங்கே கொஞ்சமாகவும் இருக்கும்;

அவர்கள் புறப்பட்டுச்செல்கையில்

நிலை தடுமாறி வீழ்வர்;

நொறுக்கப்படுவர்;

கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவர்.

சீயோனின் மூலைக்கல்

14ஆதலால், எருசலேமிலுள்ள

இம்மக்களை ஆள்வோரே! இகழ்வோரே!

ஆண்டவரின்

வார்த்தையைக் கேளுங்கள்.

15“நாங்கள் சாவோடு ஓர்

உடன்படிக்கை செய்துள்ளோம்;

பாதாளத்துடன் ஓர்

உடன்பாடு ஏற்படுத்தியுள்ளோம்.

பகைவன் பெருவெள்ளமெனப்

பாய்ந்துவந்தாலும்

அவனால் எங்களை அணுக இயலாது.

ஏனெனில், பொய்மையை நாங்கள்

எங்கள் புகலிடமாய்க் கொண்டுள்ளோம்;

வஞ்சகத்தை எங்களுக்கு

மறைவிடமாய் ஆக்கியுள்ளோம்”

என்று சொன்னீர்கள்.

16ஆதலால், ஆண்டவராகிய

என் தலைவர் கூறுவது இதுவே;

இதோ! சீயோனில் நான்

ஓர் அடிக்கல் நாட்டுகின்றேன்;

அது பரிசோதிக்கப்பட்ட கல்;

விலையுயர்ந்த மூலைக்கல்;

உறுதியான அடித்தளமாய் அமையும் கல்;

“நம்பிக்கை கொண்டோன்

பதற்றமடையான்.”

17நீதியை அளவு நூலாகவும்,

நேர்மையைத் தூக்கு நூலாகவும்

அமைப்பேன்.

பொய்மை எனும் புகலிடத்தைக்

கல்மழை அழிக்கும்;

மறைவிடத்தைப்

பெருவெள்ளம் அடித்துச் செல்லும்.

18சாவுடன் நீங்கள் செய்த உடன்படிக்கை

முறிந்து போகும்;

பாதாளத்துடன் நீங்கள் செய்த உடன்பாடு

நிலைத்து நிற்காது;

பகைவன் பெருவெள்ளமெனப்

பாய்ந்து வரும்போது

நீங்கள் அவனால்

நசுக்கப்படுவீர்கள்.

19பகை உங்களைக்

கடக்கும் பொழுதெல்லாம்

உங்களை வாரிக்கொண்டு போகும்;

அது காலைதோறும்,

பகலும் இரவும், பாய்ந்து வரும்;

அச்செய்தியை உணர்வதே

மிகவும் திகிலூட்டும்.

20கால் நீட்டப் படுக்கையின்

நீளம் போதாது;

போர்த்திக் கொள்ளப்

போர்வையின் அகலம் பற்றாது.

21ஆண்டவர் பெராசிம் மலைமேல்

கிளர்ந்தெழுந்ததுபோல் எழுவார்!

கிபயோன் பள்ளத்தாக்கில் செய்ததுபோல்

செயலாற்றக் கொதித்தெழுவார்!

தம் பணியை நிறைவேற்றுவார்!

விந்தையானது அவர் தம் செயல்!

புதிரானது அவர்தம் பணி!

22உங்கள் தளைகள் கடினமாகாதபடி

இகழ்வதை விட்டுவிடுங்கள்;

ஏனெனில் நாடு முழுவதையும்

அழித்தொழிக்குமாறு

படைகளின் ஆண்டவராகிய

என் தலைவர் இட்ட ஆணையை

நான் கேட்டேன்.

23செவி கொடுங்கள்;

நான் கூறுவதைக் கேளுங்கள்;

செவிசாய்த்து நான் சொல்வதைக்

கவனியுங்கள்;

24விதைப்பதற்கென உழுபவர்கள்

நாள்தோறும் உழுது கொண்டிருப்பார்களா?

நிலத்தை நாள்தோறும் கிளறிப்

பரம்படிப்பார்களா?

25அதன் மேற்பரப்பைச் சமமாக்கியபின்

உளுந்தைத் தூவிச் சீரகத்தை

விதைப்பார்களன்றோ?

வாற்கோதுமையைக் கோதுமைப்

பாத்திகளிலும்,

தானியங்களை ஓரங்களில்

உரிய இடத்திலும் விதைப்பார்களன்றோ?

26இந்த நடைமுறையை அவர்கள்

கற்றுக் கொள்கின்றார்கள்;

அவர்களின் கடவுள் அவர்களுக்குக்

கற்றுத் தருகின்றார்;

27உளுந்து இருப்புக் கோலால்

அடிக்கப்படுவதில்லை;

சீரகத்தின் மேல் வண்டி உருளை

உருட்டப்படுவதில்லை;

ஆனால் உளுந்து கோலாலும்

சீரகம் தடியாலும் தட்டியடிக்கப்படும்.

28உணவுக்கான தானியத்தை யாரும்

நொறுக்குவார்களா? இல்லை;

அதை அவர்கள் இடைவிடாது

போரடிப்பதில்லை.

வண்டி உருளையையும் குதிரையையும்

அதன்மேல் ஓட்டும்போது,

அதை அவர்கள் நொறுக்குவதில்லை.

29படைகளின் ஆண்டவரிடமிருந்து

இந்த அறிவு வருகின்றது;

அவர் திட்டமிடுவதில் வியப்புக்குரியவர்;

செயற்படுத்தும் அறிவில் சிறப்புக்குரியவர்.


28:11-12 1 கொரி 14:21. 28:16 திபா 118:22-23; உரோ 9:33; 10:11; 1 பேது 2:6. 28:21 யோசு 10:10-12; 2 சாமு 5:20; 1 குறி 14:11.