1ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;
பூவுலகம் மகிழ்வதாக!
திரளான தீவு நாடுகள்
களிகூர்வனவாக!
2மேகமும் காரிருளும்
அவரைச் சூழ்ந்துள்ளன;
நீதியும் நேர்மையும்
அவரது அரியணையின் அடித்தளம்.
3நெருப்பு அவர்முன் செல்கின்றது;
சுற்றிலுமுள்ள அவர்தம் எதிரிகளைச்
சுட்டெரிக்கின்றது.
4அவர்தம் மின்னல்கள்
பூவுலகை ஒளிர்விக்கின்றன;
மண்ணுலகம் அதைக் கண்டு
நடுங்குகின்றது.
5ஆண்டவர் முன்னிலையில்,
அனைத்துலகின் தலைவர் முன்னிலையில்,
மலைகள் மெழுகென உருகுகின்றன.
6வானங்கள் அவரது நீதியை
அறிவிக்கின்றன;
அனைத்து மக்களினங்களும்
அவரது மாட்சியைக் காண்கின்றன.
7உருவங்களை வழிபடுவோரும்
சிலைகள் பற்றிப்
பெருமையடித்துக் கொள்வோரும்
வெட்கத்துக்கு உள்ளாவர்;
அனைத்துத் தெய்வங்களே!
அவரைத் தாழ்ந்து பணியுங்கள்.
8ஆண்டவரே! உம் நீதித்தீர்ப்புகளை
சீயோன் கேட்டு மகிழ்கின்றது;
யூதாவின் நகர்கள் களிகூர்கின்றன.
9ஏனெனில், ஆண்டவரே!
உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்;
தெய்வங்கள் அனைத்திற்கும்
மேலானவர் நீரே!
10தீமையை வெறுப்போர்மீது
ஆண்டவர் அன்புகூர்கின்றார்.
அவர்தம் பற்றுமிகு அடியார்களின்
உயிரைப் பாதுகாக்கின்றார்;
பொல்லாரின் கையினின்று
அவர்களை விடுவிக்கின்றார்.
11நேர்மையாளருக்கென ஒளியும்
நேரிய உள்ளத்தோர்க்கென
மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.
12நேர்மையாளர்களே!
ஆண்டவரில் களிகூருங்கள்;
அவரது தூய்மையை நினைந்து
அவரைப் புகழுங்கள்.