அனைத்து உலகின் அரசர்
(1 குறி 16:23-33)

1ஆண்டவருக்குப் புதியதொரு

பாடல் பாடுங்கள்;

உலகெங்கும் வாழ்வோரே,

ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;

2ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;

அவர் பெயரை வாழ்த்துங்கள்;

அவர் தரும் மீட்பை

நாள்தோறும் அறிவியுங்கள்.

3பிற இனத்தார்க்கு

அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்;

அனைத்து மக்களினங்களுக்கும்

அவர்தம் வியத்தகு செயல்களை
அறிவியுங்கள்.

4ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்;

பெரிதும் போற்றத் தக்கவர்;

தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக

அஞ்சுதற்கு உரியவர் அவரே.

5மக்களினங்களின் தெய்வங்கள்

அனைத்தும் வெறும் சிலைகளே;

ஆண்டவரோ

விண்ணுலகைப் படைத்தவர்.

6மாட்சியும் புகழ்ச்சியும்

அவர் திருமுன் உள்ளன;

ஆற்றலும் எழிலும்

அவரது திருத்தலத்தில் உள்ளன;

7மக்களினங்களின் குடும்பங்களே,

ஆண்டவருக்குச் சாற்றுங்கள்;

மாட்சியையும் ஆற்றலையும்

ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.

8ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை

அவருக்குச் சாற்றுங்கள்;

உணவுப்படையல் ஏந்தி அவர்தம்

கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள்.

9தூய கோலத்துடன்

ஆண்டவரை வழிபடுங்கள்;

உலகெங்கும் வாழ்வோரே,

அவர் திருமுன் நடுங்குங்கள்.

10வேற்றினத்தாரிடையே கூறுங்கள்;

‛ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்;

பூவுலகு உறுதியாக

நிலைநிறுத்தப்பட்டுள்ளது;

அது அசைவுறாது;

அவர் மக்களினங்களை

நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.

11விண்ணுலகம் மகிழ்வதாக;

மண்ணுலகம் களிகூர்வதாக;

கடலும் அதில் நிறைந்துள்ளனவும்

முழங்கட்டும்.

12வயல்வெளியும் அதில் உள்ள

அனைத்தும் களிகூரட்டும்;

அப்பொழுது, காட்டில் உள்ள

அனைத்து மரங்களும்

அவர் திருமுன் களிப்புடன் பாடும்.

13ஏனெனில் அவர் வருகின்றார்;

மண்ணுலகிற்கு

நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்;

நிலவுலகை நீதியுடனும்

மக்களினங்களை உண்மையுடனும்

அவர் தீர்ப்பிடுவார்.


96:7-9 திபா 29:1-2.