உதவிக்காக வேண்டல்
(பாடகர் தலைவர்க்கு: ‘அழிக்காதே’ என்ற மெட்டு; சவுலுக்குத் தப்பியோடிக் குகையில் ஒளிந்து கொண்டிருந்தபொழுது, தாவீது பாடிய கழுவாய்ப்பாடல்)

1கடவுளே! எனக்கு இரங்கும்,

எனக்கு இரங்கும்;

நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்;

இடர் நீங்கும்வரை

உம் இறக்கைகளின் நிழலையே

எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன்.

2உன்னதரான கடவுளை நோக்கி,

எனக்காக யாவையும் செய்து முடிக்கும்

இறைவனை நோக்கியே

நான் மன்றாடுகின்றேன்.

3வானகத்தினின்று அவர்

எனக்கு உதவி அனுப்பி

என்னைக் காத்தருள்வார்;

என்னை நசுக்குவோரை

இழிவுப்படுத்துவார். (சேலா)

கடவுள் தம் பேரன்பையும்

வாக்குப் பிறழாமையையும்

வெளிப்படுத்துவார்.

4மனிதரை வெறியோடு விழுங்கும்

சிங்கங்கள் போன்றவரிடையே

நான் கிடக்கின்றேன்;

அவர்களின் பற்கள்

ஈட்டியும் அம்பும் போன்றவை;

அவர்களின் நா

கூர்மையான வாள் போன்றது.

5கடவுளே! வானங்களுக்கு மேலாக

நீர் உயர்த்தப்பெறுவீராக!

பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக!

6நான் நடக்கும் வழியில்

எனக்குக் கண்ணி வைக்கின்றனர்;

நான் மனம் ஒடிந்து போனேன்;

என் பாதையில் குழி வெட்டினர்;

அவர்களே அதில் விழுந்தனர். (சேலா)

7என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது;

கடவுளே! என் உள்ளம்

உறுதியாயிருக்கின்றது;

நான் பாடுவேன்;

உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

8என் நெஞ்சே, விழித்தெழு!

வீணையே, யாழே, விழித்தெழுங்கள்;

வைகறையை நான்

விழித்தெழச் செய்வேன்.

9என் தலைவரே!

மக்களினங்களிடையே

உமக்கு நன்றி செலுத்துவேன்;

எல்லா இனத்தாரிடையேயும்

உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

10ஆண்டவரே! உமது பேரன்பு

வானளவு உயர்ந்துள்ளது!

உமது வாக்குப்பிறழாமை

முகில்களைத் தொடுகின்றது!

11கடவுளே! வானங்களுக்கு மேலாக

நீர் உயர்வு பெறுவீராக;

பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக.