1கடவுளே, எங்கள் காதுகளால்
நாங்களே கேட்டிருக்கின்றோம்;
எங்கள் மூதாதையர்
அவர்கள் காலத்திலும் அதற்கு முன்பும்
நீர் என்னென்ன செய்துள்ளீர் என்று
எங்களுக்கு எடுத்துரைத்தனர்.
2உமது கையால்
வேற்றினத்தாரை விரட்டியடித்து,
எந்தையரை நிலைநாட்டினீர்;
மக்களினங்களை நொறுக்கிவிட்டு
எந்தையரைச் செழிக்கச் செய்தீர்.
3அவர்கள் தங்கள் வாளால்
நாட்டை உடைமையாக்கிக்
கொள்ளவில்லை;
அவர்கள் தங்கள்
புயத்தால் வெற்றி பெறவில்லை.
நீர் அவர்களில் மகிழ்ச்சியுற்றதால்
உமது வலக்கையும் உமது புயமும்
உமது முகத்தின் ஒளியுமே
அவர்களுக்கு வெற்றியளித்தன.
4நீரே என் அரசர்; நீரே என் கடவுள்!
யாக்கோபுக்கு வெற்றி அளிப்பவர் நீரே.
5எங்கள் பகைவர்களை
உமது துணையால் தாக்கி வீழ்த்துவோம்;
எங்களுக்கு எதிராய் எழுந்தோரை
உமது பெயரால் மிதித்துப் போடுவோம்.
6என் வில்லை நான் நம்புவதில்லை;
என் வாள் என்னைக் காப்பாற்றுவதுமில்லை.
7நீரே பகைவரிடமிருந்து
எங்களைக் காப்பாற்றினீர்;
எங்களை வெறுப்போரை
வெட்கமுறச் செய்தீர்.
8எந்நாளும் கடவுளாம் உம்மை நினைத்துப்
பெருமை கொண்டோம்.
என்றென்றும் உமது பெயருக்கு
நன்றி செலுத்தி வந்தோம். (சேலா)
9ஆயினும், இப்போது நீர் எங்களை
ஒதுக்கித் தள்ளிவிட்டீர்;
இழிவுபடுத்திவிட்டீர்.
எங்கள் படைகளுடன்
நீர் செல்லாதிருக்கின்றீர்.
10எங்கள் பகைவருக்கு நாங்கள்
புறங்காட்டி ஓடும்படிச் செய்தீர்.
எங்களைப் பகைப்போர்
எங்களைக் கொள்ளையிட்டனர்.
11உணவுக்காக வெட்டப்படும்
ஆடுகளைப்போல்
எங்களை ஆக்கிவிட்டீர்.
வேற்றினத்தாரிடையே எங்களைச்
சிதறியோடச் செய்தீர்.
12நீர் உம் மக்களை
அற்ப விலைக்கு விற்றுவிட்டீர்;
அவர்கள் மதிப்பை மிகவும் குறைத்துவிட்டீர்.
13எங்களை அடுத்து வாழ்வோரின்
பழிப்புக்கு எங்களை ஆளாக்கினீர்;
எங்கள் சுற்றுப்புறத்தாரின்
ஏளனத்துக்கும் இகழ்ச்சிக்கும்
எங்களை உள்ளாக்கினீர்.
14வேற்றினத்தாரிடையே எங்களை
ஒரு பழிச்சொல்லாக்கினீர்;
ஏனைய மக்கள் எங்களைப் பார்த்துத்
தலையசைத்து நகைக்கின்றனர்.
15எனக்குள்ள மானக்கேடு நாள் முழுதும்
என் கண்முன் நிற்கின்றது;
அவமானம் என் முகத்தை மூடியுள்ளது.
16என்னைப் பழித்துத் தூற்றுவோரின்
குரலை நான் கேட்கும்போதும்,
என் எதிரிகளையும், என்னைப்
பழிவாங்கத் தேடுவோரையும்
நான் பார்க்கும்போதும்
வெட்கிப்போகின்றேன்.
17நாங்கள் உம்மை மறக்காவிடினும்,
உமது உடன்படிக்கையை மீறாவிடினும்,
இவையெல்லாம் எங்களுக்கு நேரிட்டன.
18எங்கள் உள்ளம் பின்வாங்கவில்லை;
எங்கள் காலடிகள்
உம் வழியினின்று பிறழவில்லை.
19ஆயினும், நீர் எங்களை
கொடிய பாம்புகள் உள்ள இடத்தில்
நொறுங்கும்படி விட்டுவிட்டீர்;
சாவின் இருள் எங்களைக்
கவ்விக்கொண்டது.
20நாங்கள் எங்கள் கடவுளின் பெயரை
மறந்துவிட்டு, வேற்றுத் தெய்வத்தைக்
கைகூப்பி வணங்கியிருந்தோமானால்,
21கடவுளாம் நீர் அதைக்
கண்டுபிடித்திருப்பீர் அல்லவா?
ஏனெனில், உள்ளத்தில்
புதைந்திருப்பவற்றை நீர் அறிகின்றீர்.
22உம் பொருட்டு நாள்தோறும்
கொல்லப்படுகின்றோம்;
வெட்டுவதற்கென நிறுத்தப்படும்
ஆடுகளெனக் கருதப்படுகின்றோம்.
23என் தலைவா! கிளர்ந்தெழும்,
ஏன் உறங்குகின்றீர்?
விழித்தெழும்; எங்களை ஒருபோதும்
ஒதுக்கித் தள்ளிவிடாதேயும்.
24நீர் உமது முகத்தை
ஏன் மறைத்துக் கொள்கின்றீர்?
எங்கள் சிறுமையையும் துன்பத்தையும்
ஏன் மறந்து விடுகின்றீர்?
25நாங்கள் தரைமட்டும் தாழ்ந்துவிட்டோம்;
எங்கள் உடல் மண்ணோடு
ஒட்டிக்கொண்டுள்ளது.
26எழுந்து வாரும்;
எங்களுக்குத் துணை புரியும்;
உமது பேரன்பை முன்னிட்டு
எங்களை மீட்டருளும்.