பாதுகாப்புக்காக வேண்டல்
(பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் அறப்பாடல்)

1கடவுளே, எங்கள் காதுகளால்

நாங்களே கேட்டிருக்கின்றோம்;

எங்கள் மூதாதையர்

அவர்கள் காலத்திலும் அதற்கு முன்பும்

நீர் என்னென்ன செய்துள்ளீர் என்று

எங்களுக்கு எடுத்துரைத்தனர்.

2உமது கையால்

வேற்றினத்தாரை விரட்டியடித்து,

எந்தையரை நிலைநாட்டினீர்;

மக்களினங்களை நொறுக்கிவிட்டு

எந்தையரைச் செழிக்கச் செய்தீர்.

3அவர்கள் தங்கள் வாளால்

நாட்டை உடைமையாக்கிக்

கொள்ளவில்லை;

அவர்கள் தங்கள்

புயத்தால் வெற்றி பெறவில்லை.

நீர் அவர்களில் மகிழ்ச்சியுற்றதால்

உமது வலக்கையும் உமது புயமும்

உமது முகத்தின் ஒளியுமே

அவர்களுக்கு வெற்றியளித்தன.

4நீரே என் அரசர்; நீரே என் கடவுள்!

யாக்கோபுக்கு வெற்றி அளிப்பவர் நீரே.

5எங்கள் பகைவர்களை

உமது துணையால் தாக்கி வீழ்த்துவோம்;

எங்களுக்கு எதிராய் எழுந்தோரை

உமது பெயரால் மிதித்துப் போடுவோம்.

6என் வில்லை நான் நம்புவதில்லை;

என் வாள் என்னைக் காப்பாற்றுவதுமில்லை.

7நீரே பகைவரிடமிருந்து

எங்களைக் காப்பாற்றினீர்;

எங்களை வெறுப்போரை

வெட்கமுறச் செய்தீர்.

8எந்நாளும் கடவுளாம் உம்மை நினைத்துப்

பெருமை கொண்டோம்.

என்றென்றும் உமது பெயருக்கு

நன்றி செலுத்தி வந்தோம். (சேலா)

9ஆயினும், இப்போது நீர் எங்களை

ஒதுக்கித் தள்ளிவிட்டீர்;

இழிவுபடுத்திவிட்டீர்.

எங்கள் படைகளுடன்

நீர் செல்லாதிருக்கின்றீர்.

10எங்கள் பகைவருக்கு நாங்கள்

புறங்காட்டி ஓடும்படிச் செய்தீர்.

எங்களைப் பகைப்போர்

எங்களைக் கொள்ளையிட்டனர்.

11உணவுக்காக வெட்டப்படும்

ஆடுகளைப்போல்

எங்களை ஆக்கிவிட்டீர்.

வேற்றினத்தாரிடையே எங்களைச்
சிதறியோடச் செய்தீர்.

12நீர் உம் மக்களை

அற்ப விலைக்கு விற்றுவிட்டீர்;

அவர்கள் மதிப்பை மிகவும் குறைத்துவிட்டீர்.

13எங்களை அடுத்து வாழ்வோரின்

பழிப்புக்கு எங்களை ஆளாக்கினீர்;

எங்கள் சுற்றுப்புறத்தாரின்

ஏளனத்துக்கும் இகழ்ச்சிக்கும்

எங்களை உள்ளாக்கினீர்.

14வேற்றினத்தாரிடையே எங்களை

ஒரு பழிச்சொல்லாக்கினீர்;

ஏனைய மக்கள் எங்களைப் பார்த்துத்

தலையசைத்து நகைக்கின்றனர்.

15எனக்குள்ள மானக்கேடு நாள் முழுதும்

என் கண்முன் நிற்கின்றது;

அவமானம் என் முகத்தை மூடியுள்ளது.

16என்னைப் பழித்துத் தூற்றுவோரின்

குரலை நான் கேட்கும்போதும்,

என் எதிரிகளையும், என்னைப்

பழிவாங்கத் தேடுவோரையும்

நான் பார்க்கும்போதும்

வெட்கிப்போகின்றேன்.

17நாங்கள் உம்மை மறக்காவிடினும்,

உமது உடன்படிக்கையை மீறாவிடினும்,

இவையெல்லாம் எங்களுக்கு நேரிட்டன.

18எங்கள் உள்ளம் பின்வாங்கவில்லை;

எங்கள் காலடிகள்

உம் வழியினின்று பிறழவில்லை.

19ஆயினும், நீர் எங்களை

கொடிய பாம்புகள் உள்ள இடத்தில்
நொறுங்கும்படி விட்டுவிட்டீர்;

சாவின் இருள் எங்களைக்

கவ்விக்கொண்டது.

20நாங்கள் எங்கள் கடவுளின் பெயரை

மறந்துவிட்டு, வேற்றுத் தெய்வத்தைக்

கைகூப்பி வணங்கியிருந்தோமானால்,

21கடவுளாம் நீர் அதைக்

கண்டுபிடித்திருப்பீர் அல்லவா?

ஏனெனில், உள்ளத்தில்

புதைந்திருப்பவற்றை நீர் அறிகின்றீர்.

22உம் பொருட்டு நாள்தோறும்

கொல்லப்படுகின்றோம்;

வெட்டுவதற்கென நிறுத்தப்படும்

ஆடுகளெனக் கருதப்படுகின்றோம்.

23என் தலைவா! கிளர்ந்தெழும்,

ஏன் உறங்குகின்றீர்?

விழித்தெழும்; எங்களை ஒருபோதும்

ஒதுக்கித் தள்ளிவிடாதேயும்.

24நீர் உமது முகத்தை

ஏன் மறைத்துக் கொள்கின்றீர்?

எங்கள் சிறுமையையும் துன்பத்தையும்

ஏன் மறந்து விடுகின்றீர்?

25நாங்கள் தரைமட்டும் தாழ்ந்துவிட்டோம்;

எங்கள் உடல் மண்ணோடு

ஒட்டிக்கொண்டுள்ளது.

26எழுந்து வாரும்;

எங்களுக்குத் துணை புரியும்;

உமது பேரன்பை முன்னிட்டு

எங்களை மீட்டருளும்.


44:22 உரோ 8:36.