துயர்மிகு புலம்பல்
(பாடகர் தலைவர்க்கு: ‘காலைப் பெண்மான்’ என்ற மெட்டு; தாவீதின் புகழ்ப்பா)

1என் இறைவா, என் இறைவா,

ஏன் என்னைக் கைவிட்டீர்?

என்னைக் காப்பாற்றாமலும்,

நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும்

ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?

2என் கடவுளே,

நான் பகலில் மன்றாடுகின்றேன்;

நீர் பதில் அளிப்பதில்லை,

இரவிலும் மன்றாடுகின்றேன்;

எனக்கு அமைதி கிடைப்பதில்லை.

3நீரோ தூயவராய் விளங்குகின்றீர்;

இஸ்ரயேலின் புகழ்ச்சிக்கு உரியவராய்

வீற்றிருக்கின்றீர்;

4எங்கள் மூதாதையர்

உம்மில் நம்பிக்கை வைத்தனர்;

அவர்கள் நம்பியதால்

நீர் அவர்களை விடுவித்தீர்.

5உம்மை அவர்கள் வேண்டினார்கள்;

விடுவிக்கப்பட்டார்கள்;

உம்மை அவர்கள் நம்பினார்கள்;

ஏமாற்றமடையவில்லை.

6நானோ ஒரு புழு, மனிதனில்லை;

மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்;

மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்.

7என்னைப் பார்ப்போர் எல்லாரும்

ஏளனம் செய்கின்றனர்;

உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து,

8‛ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே!

அவர் இவனை மீட்கட்டும்;

தாம் அன்பு கூர்ந்த அவனை

அவர் விடுவிக்கட்டும்’ என்கின்றனர்.

9என்னைக் கருப்பையினின்று

வெளிக்கொணர்ந்தவர் நீரே;

என் தாயிடம் பால்குடிக்கையிலேயே

என்னைப் பாதுகாத்தவரும் நீரே!

10கருப்பையிலிருந்தே

உம்மைச் சார்ந்திருந்தேன்;

நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல்

என் இறைவன் நீரே!

11என்னைவிட்டுத் தொலையில் போய்விடாதேயும்;

ஏனெனில், ஆபத்து நெருங்கிவிட்டது;

மேலும், உதவி செய்வார் யாருமில்லை.

12காளைகள் பல என்னைச்

சூழ்ந்து கொண்டுள்ளன;

பாசானின் கொழுத்த எருதுகள்

என்னை வளைத்துக் கொண்டன.

13அவர்கள் என்னை விழுங்கத்

தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்;

இரைதேடிச் சீறி முழங்கும்

சிங்கம்போல் பாய்கின்றார்கள்.

14நான் கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன்;

என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின;

என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று;

என் உள்ளுறுப்புகளின் நடுவே

உருகிப்போயிற்று.

15என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது;

என் நாவு மேலண்ணத்தோடு

ஒட்டிக்கொண்டது; என்னைச்

சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர்.

16தீமை செய்வோரின் கூட்டம்

என்னை வளைத்துக் கொண்டது;

நாய்கள் என அவர்கள் என்னைச்

சூழ்ந்து கொண்டார்கள்; என் கைகளையும்,

கால்களையும் துளைத்தார்கள்.

17என் எலும்புகளை எல்லாம்

நான் எண்ணிவிடலாம்; அவர்கள்

என்னை முறைத்துப் பார்க்கின்றார்கள்.

18என் ஆடைகளைத் தங்களிடையே

பங்கிட்டுக் கொள்கின்றனர்;

என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்.

19நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத்

தொலைவில் போய்விடாதேயும்;

என் வலிமையே! எனக்குத் துணை செய்ய

விரைந்து வாரும்.

20வாளுக்கு இரையாகாதபடி

என் உயிரைக் காத்தருளும்;

இந்த நாய்களின் வெறியினின்று

என் ஆருயிரைக் காப்பாற்றும்;

21இந்தச் சிங்கங்களின் வாயிலிருந்து

என்னைக் காப்பாற்றும்;

காட்டெருமைகளின் கொம்புகளில்

சிக்கியுள்ள என்னைக் காத்தருளும்.

புகழ்ச்சிப் பாடல்

22உமது பெயரை

என் சகோதரருக்கு அறிவிப்பேன்;

சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

23ஆண்டவருக்கு அஞ்சுவோரே;

அவரைப் புகழுங்கள்;

யாக்கோபின் மரபினரே,

அனைவரும் அவரை

மாட்சிமைப்படுத்துங்கள்;

இஸ்ரயேல் மரபினரே,

அனைவரும் அவரைப் பணியுங்கள்.

24ஏனெனில், எளியோரின் சிறுமையை

அவர் அற்பமாக எண்ணவில்லை;

அதைக் கவனியாமல் இருந்துவிடவில்லை;

தமது முகத்தை அவர்களுக்கு

மறைக்கவுமில்லை;
தம்மை நோக்கி அவர்கள் மன்றாடுகையில்

அவர்களுக்குச் செவிசாய்த்தார்.

25மாபெரும் சபையில் நான் செலுத்தும் புகழ்

உம்மிடமிருந்து எழுவதாக!

உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில்

என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.

26எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்;

ஆண்டவரை நாடுவோர்

அவரைப் புகழ்வராக!

அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக!

27பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர்

அனைவரும் இதை உணர்ந்து

ஆண்டவர் பக்கம் திரும்புவர்;

பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும்

அவர் முன்னிலையில் விழுந்து பணிவர்.

28ஏனெனில் அரசு ஆண்டவருடையது;

பிற இனத்தார்மீதும்

அவர் ஆட்சி புரிகின்றார்.

29மண்ணின் செல்வர் யாவரும்

அவரைப் பணிவர்;*

புழுதிக்குள் இறங்குவோர் யாவரும்

தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும்

அவரை வணங்குவர்.

30வருங்காலத் தலைமுறையினர்

அவரைத் தொழுவர்;

இனிவரும் தலைமுறையினருக்கு

ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும்.

31அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்;

இனி பிறக்கப்போகும் மக்களுக்கு

‛இதை அவரே செய்தார்’ என்பர்.


22:1 மத் 27:46; மாற் 15:34. 22:18 மத் 27:35; மாற் 15:24; லூக் 23;34; யோவா 19:24. 22:22 எபி 2:12.
22:29 * ‘உணவுண்டு அவரைப் பணிவர்’ என்பது எபிரேய பாடம்.