அரசரின் வெற்றிக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துதல்
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)

1ஆண்டவரே, உமது வல்லமையில்

அரசர் பூரிப்படைகின்றார்;

நீர் அளித்த வெற்றியில்
எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்!

2அவர் உள்ளம் விரும்பியதை

நீர் அவருக்குத் தந்தருளினீர்;

அவர் வாய்விட்டுக் கேட்டதை

நீர் மறுக்கவில்லை. (சேலா)

3உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்தி

நீர் அவரை எதிர்கொண்டீர்;
அவர் தலையில்

பசும்பொன்முடி சூட்டினீர்.

4அவர் உம்மிடம் வாழ்வு வேண்டி நின்றார்;

நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை
அவருக்கு அளித்தீர்.

5நீர் அவருக்கு வெற்றியளித்ததால்

அவரது மாட்சிமை பெரிதாயிற்று;

மேன்மையையும் மாண்பையும்

அவருக்கு அருளினீர்,

6உண்மையாகவே,

எந்நாளும் நிலைத்திருக்கும்

ஆசிகளை அவர் பெற்றுள்ளார்;

உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன்

கண்டு களிக்கச் செய்தீர்.

7ஏனெனில், அரசர் ஆண்டவரில்

நம்பிக்கை வைக்கின்றார்;

உன்னதரின் பேரன்பினால்

அவர் அசைவுறாதிருப்பார்.

8உமது கை உம் எதிரிகளையெல்லாம்

தேடிப்பிடிக்கும்; உமது வலக்கை

உம்மை வெறுப்போரை எட்டிப்பிடிக்கும்.

9நீர் காட்சியளிக்கும்பொழுது,

அவர்களை நெருப்புச்சூளை ஆக்குவீர்;

ஆண்டவர் சினங்கொண்டு

அவர்களை அழிப்பார்;

நெருப்பு அவர்களை விழுங்கிவிடும்.

10அவர்கள் தலைமுறையைப்

பூவுலகினின்று ஒழித்துவிடுவீர்;

அவர்கள் வழிமரபை

மனு மக்களிடமிருந்து எடுத்து விடுவீர்.

11உமக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும்,

சதித்திட்டம் தீட்டினாலும்,

அவர்களால் வெற்றி பெற இயலாது.

12நீரோ அம்புகளை நாணேற்றி

அவர்களது முகத்தில் எய்வீர்;

அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வீர்.

13ஆண்டவரே, உமது வலிமையோடு

எழுந்து வாரும்;

நாங்கள் உமது வல்லமையைப்

புகழ்ந்து பாடுவோம்.