1வானங்கள் இறைவனின்
மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன;
வான்வெளி அவர்தம் கைகளின்
வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
2ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு
அச்செய்தியை அறிவிக்கின்றது;
ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு
அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது.
3அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை;
அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
4ஆயினும், அவற்றின் அறிக்கை
உலகெங்கும் சென்றடைகின்றது;
அவை கூறும் செய்தி
உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது,
இறைவன் அங்கே கதிரவனுக்கு
ஒரு கூடாரம் அமைத்துள்ளார்.
5மணவறையிலிருந்து புறப்படும்
மணமகளைப் போல அது வருகின்றது;
பந்தயத்தில் ஓடும் வீரரைப்போல மகிழ்வோடு
அது தன் பாதையில் ஓடுகின்றது.
6அது வானத்தின் ஒரு முனையிலிருந்து
புறப்படுகின்றது; அதன் பாதை
மறுமுனைவரையிலும் செல்கின்றது;
அதன் வெப்பத்திற்கு
மறைவானது ஒன்றுமில்லை.
7ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது;
அது புத்துயிர் அளிக்கின்றது.
ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது;
எளியவருக்கு அது
ஞானம் அளிக்கின்றது.
8ஆண்டவரின் நியமங்கள் சரியானவை;
அவை இதயத்தை மகிழ்விக்கின்றன.
ஆண்டவரின் கட்டளைகள்
ஒளிமயமானவை;
அவை கண்களை ஒளிர்விக்கின்றன.
9ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது;
அது எந்நாளும் நிலைத்திருக்கும்.
ஆண்டவரின் நீதிநெறிகள்
உண்மையானவை;
அவை முற்றிலும் நீதியானவை.
10அவை பொன்னினும்,
பசும் பொன்னினும் மேலாக
விலைமிக்கவை; தேனினும்,
தேனடையினின்று சிந்தும்
தெளி தேனினும் இனிமையானவை.
11அவற்றால் அடியேன்
எச்சரிக்கப்படுகின்றேன்;
அவற்றைக் கடைப்பிடிப்போர்க்கு
மிகுந்த பரிசுண்டு.
12தம் தவறுகளை
உணர்ந்து கொள்பவர் யார்தாம்?
என் அறியாப் பிழைக்காக
என்னை மன்னியும்.
13மேலும், ஆணவமிக்கோரிடமிருந்து
உம் அடியானைக் காத்தருளும்.
அவர்கள் என்னை
ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்;
அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்;
பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன்.
14என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே!
என் வாயின் சொற்கள்
உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்;
என் உள்ளத்தின் எண்ணங்கள்
உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும்.