படைப்பில் கடவுளின் மாட்சி
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)

1வானங்கள் இறைவனின்

மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன;

வான்வெளி அவர்தம் கைகளின்

வேலைப்பாட்டை விவரிக்கின்றது.

2ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு

அச்செய்தியை அறிவிக்கின்றது;

ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு

அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது.

3அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை;

அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.

4ஆயினும், அவற்றின் அறிக்கை

உலகெங்கும் சென்றடைகின்றது;
அவை கூறும் செய்தி

உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது,

இறைவன் அங்கே கதிரவனுக்கு

ஒரு கூடாரம் அமைத்துள்ளார்.

5மணவறையிலிருந்து புறப்படும்

மணமகளைப் போல அது வருகின்றது;

பந்தயத்தில் ஓடும் வீரரைப்போல மகிழ்வோடு

அது தன் பாதையில் ஓடுகின்றது.

6அது வானத்தின் ஒரு முனையிலிருந்து

புறப்படுகின்றது; அதன் பாதை

மறுமுனைவரையிலும் செல்கின்றது;

அதன் வெப்பத்திற்கு

மறைவானது ஒன்றுமில்லை.

ஆண்டவரின் திருச்சட்டம்

7ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது;

அது புத்துயிர் அளிக்கின்றது.

ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது;

எளியவருக்கு அது
ஞானம் அளிக்கின்றது.

8ஆண்டவரின் நியமங்கள் சரியானவை;

அவை இதயத்தை மகிழ்விக்கின்றன.

ஆண்டவரின் கட்டளைகள்

ஒளிமயமானவை;

அவை கண்களை ஒளிர்விக்கின்றன.

9ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது;

அது எந்நாளும் நிலைத்திருக்கும்.

ஆண்டவரின் நீதிநெறிகள்

உண்மையானவை;
அவை முற்றிலும் நீதியானவை.

10அவை பொன்னினும்,

பசும் பொன்னினும் மேலாக

விலைமிக்கவை; தேனினும்,

தேனடையினின்று சிந்தும்

தெளி தேனினும் இனிமையானவை.

11அவற்றால் அடியேன்

எச்சரிக்கப்படுகின்றேன்;

அவற்றைக் கடைப்பிடிப்போர்க்கு

மிகுந்த பரிசுண்டு.

12தம் தவறுகளை

உணர்ந்து கொள்பவர் யார்தாம்?

என் அறியாப் பிழைக்காக

என்னை மன்னியும்.

13மேலும், ஆணவமிக்கோரிடமிருந்து

உம் அடியானைக் காத்தருளும்.

அவர்கள் என்னை

ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்;

அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்;

பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன்.

14என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே!

என் வாயின் சொற்கள்

உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்;

என் உள்ளத்தின் எண்ணங்கள்

உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும்.


19:4 உரோ 10:18.