அரசரின் வெற்றிப்பாடல்
(பாடகர் தலைவர்க்கு: ஆண்டவரின் அடியாராகிய தாவீது, தம் எதிரிகள் கையினின்றும் சவுலின் கையினின்றும் அவர் தம்மை விடுவித்த நாளில் அவரை நோக்கிப் பாடியது)

1அவர் உரைத்தது:

என் ஆற்றலாகிய ஆண்டவரே!

உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.

2ஆண்டவர் என் கற்பாறை;

என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்;

நான் புகலிடம் தேடும் மலை அவரே;

என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும்

வல்லமை, என் அரண்.

3போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி

நான் மன்றாடினேன்;

என் எதிரிகளிடமிருந்து நான்

மீட்கப்பட்டேன்.

4சாவின் கயிறுகள் என்னை இறுக்கின;

அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன.

5பாதாளக் கயிறுகள் என்னைச்

சுற்றி இறுக்கின;

சாவின் கண்ணிகள் என்னைச்

சிக்க வைத்தன.

6என் நெருக்கடி வேளையில்

நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்;

என் கடவுளை நோக்கிக் கதறினேன்;

தமது கோவிலினின்று

அவர் என் குரலைக் கேட்டார்;

என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது.

7அப்பொழுது, மண்ணுலகம்

அசைந்து அதிர்ந்தது;

மலைகளின் அடித்தளங்கள் கிடுகிடுத்தன;

அவர்தம் கடுஞ்சினத்தால்

அவை நடுநடுங்கின.

8அவரது நாசியினின்று புகை கிளம்பிற்று;

அவரது வாயினின்று

எரித்தழிக்கும் தீ மூண்டது;

அவரிடமிருந்து நெருப்புக்கனல்
வெளிப்பட்டது.

9வானைத் தாழ்த்தி அவர் கீழிறங்கினார்;

கார் முகில் அவரது காலடியில் இருந்தது.

10கெருபுமீது அவர் ஏறிப் பறந்து வந்தார்;

காற்றை இறக்கைகளாகக் கொண்டு

விரைந்து வந்தார்.

11காரிருளைத் தமக்கு அவர்

மூடுதிரை ஆக்கிக்கொண்டார்;

நீர்கொண்ட முகிலைத் தமக்குக் கூடாரம் ஆக்கிக்கொண்டார்.

12அவர்தம் திருமுன்னின் பேரொளியில்,

மேகங்கள் கல் மழையையும்

நெருப்புக் கனலையும் பொழிந்தன.

13ஆண்டவர் வானங்களில்

இடியென முழங்கினார்;

உன்னதர் தம் குரலை அதிரச் செய்தார்.

கல் மழையையும் நெருப்புக் கனலையும்
பொழிந்தார்.

14தம் அம்புகளை எய்து

அவர் அவர்களைச் சிதறடித்தார்;

பெரும் மின்னல்களைத் தெறித்து

அவர்களைக் கலங்கடித்தார்.

15ஆண்டவரே, உமது கடிந்துரையாலும்

உமது மூச்சுக்காற்றின் வலிமையாலும்

நீர்த்திரளின் அடிப்பரப்பு தென்பட்டது;

நிலவுலகின் அடித்தளம் காணப்பட்டது.

16உயரத்தினின்று அவர் என்னை

எட்டிப் பிடித்துக் கொண்டார்;

வெள்ளப்பெருக்கினின்று

என்னைக் காப்பாற்றினார்.

17என் வலிமைமிகு எதிரியிடமிருந்து

அவர் என்னை விடுவித்தார்;

என்னைவிட வலிமைமிகு பகைவரிடமிருந்து

என்னைப் பாதுகாத்தார்;

18எனக்கு இடுக்கண் வந்த நாளில்

அவர்கள் என்னை எதிர்த்தார்கள்;

ஆண்டவரோ எனக்கு

ஊன்றுகோலாய் இருந்தார்.

19நெருக்கடியற்ற இடத்திற்கு

அவர் என்னைக் கொணர்ந்தார்;

நான் அவர் மனத்திற்கு

உகந்தவனாய் இருந்ததால்,

அவர் என்னை விடுவித்தார்.

20ஆண்டவர் எனது நேர்மைக்கு

உரிய பயனை எனக்களித்தார்;

என் மாசற்ற செயலுக்கு ஏற்ப

கைம்மாறு செய்தார்.

21ஏனெனில், நான் ஆண்டவர் காட்டிய

நெறியைக் கடைப்பிடித்தேன்;

பொல்லாங்கு செய்து

என் கடவுளை விட்டு அகலவில்லை.

22அவர்தம் நீதிநெறிகளை எல்லாம்

என் கண்முன் வைத்திருந்தேன்;

அவர்தம் விதிமுறைகளை நான்

ஒதுக்கித் தள்ளவில்லை.

23அவர் முன்னிலையில்

நான் மாசற்றவனாய் இருந்தேன்;

தீங்கு செய்யாவண்ணம்

என்னைக் காத்துக் கொண்டேன்.

24ஆண்டவர், என் நேர்மைக்கு

உரிய பயனை அளித்தார்;

அவர்தம் பார்வையில்

நான் குற்றம் அற்றவனாய் இருந்தேன்.

25ஆண்டவரே, மாறா அன்பர்க்கு

மாறா அன்பராகவும்

மாசற்றோர்க்கு மாசற்றவராகவும்

நீர் விளங்குவீர்.

26தூயோருக்குத் தூயவராகவும்

வஞ்சகர்க்கு விவேகியாகவும்

உம்மை நீர் காட்டுகின்றீர்.

27எளியோருக்கு நீர் மீட்பளிக்கின்றீர்;

செருக்குற்றோரை ஏளனத்துடன்
நீர் பார்க்கின்றீர்.

28ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு

ஒளியேற்றுகின்றீர்.

என் கடவுளே, நீர் என் இருளை

ஒளிமயமாக்குகின்றீர்.

29உம் துணையுடன் நான்

எப்படையையும் நசுக்குவேன்;

என் கடவுளின் துணையால்

எம்மதிலையும் தாண்டுவேன்.

30இந்த இறைவனின் வழி நிறைவானது;

ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது;

அவரிடம் அடைக்கலம் புகும் அனைவர்க்கும்

அவரே கேடயமாய் இருக்கின்றார்.

31ஏனெனில், ஆண்டவரைத் தவிர

வேறு கடவுள் யார்?

நம் கடவுளைத் தவிர நமக்கு

வேறு கற்பாறை ஏது?

32வலிமையை அரைக்கச்சையாக

அளித்த இறைவன் அவரே;

என் வழியைப் பாதுகாப்பானதாய்ச்

செய்தவரும் அவரே.

33அவர் என் கால்களை மான்களின்

கால்களைப் போல் ஆக்குகின்றார்;

உயர்ந்த இடத்தில்

என்னை நிலைநிறுத்துகின்றார்.

34போருக்கு என்னை அவர் பழக்குகின்றார்;

எனவே, வெண்கல வில்லையும்
என் புயங்கள் வளைக்கும்.

35ஆண்டவரே, பாதுகாக்கும் உம் கேடயத்தை

நீர் எனக்கு வழங்கினீர்;

உமது வலக்கரத்தால்

என்னைத் தாங்கிக் கொண்டீர்;

உமது துணையால்

என்னைப் பெருமைப்படுத்தினீர்.

36நான் நடக்கும் வழியை அகலமாக்கினீர்;

என் கால்கள் தடுமாறவில்லை.

37என் எதிரிகளைத் துரத்திச்சென்று

நான் அவர்களைப் பிடித்தேன்;

அவர்களை அழித்தொழிக்கும் வரையில்

திரும்பவில்லை.

38அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி

அவர்களை நான் வெட்டித்தள்ளினேன்;

அவர்கள் என் காலடியில் வீழ்ந்தார்கள்.

39போரிடும் ஆற்றலை நீர் எனக்கு

அரைக்கச்சையாக அளித்தீர்;

என்னை எதிர்த்தவர்களை

எனக்கு அடிபணியச் செய்தீர்.

40என் எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தீர்;

என்னை வெறுத்தோரை

நான் அழித்துவிட்டேன்.

41உதவி வேண்டி அவர்கள் கதறினார்கள்;

ஆனால், அவர்களுக்கு உதவுவார்

யாருமில்லை. அவர்கள்

ஆண்டவரை நோக்கி மன்றாடினார்கள்;

ஆனால், அவர்களுக்கு

அவர் பதிலளிக்கவில்லை.

42எனவே, நான் அவர்களை நொறுக்கிக்

காற்றடித்துச் செல்லும் புழுதிபோல்

ஆக்கினேன்; தெருச் சேறென

அவர்களைத் தூர எறிந்து விட்டேன்.

43என் மக்களின் கலகத்தினின்று

என்னை விடுவித்தீர்;

பிற இனங்களுக்கு

என்னைத் தலைவன் ஆக்கினீர்;

நான் முன்பின் அறியாத மக்கள்

எனக்குப் பணிவிடை செய்தனர்.

44அவர்கள் என்னைப்பற்றிக்

கேள்விப்பட்டவுடன்

எனக்குப் பணிந்தனர்;

வேற்று நாட்டவர் என்னிடம்

கூனிக் குறுகி வந்தனர்.

45வேற்று நாட்டவர் உள்ளம் தளர்ந்தனர்;

தம் அரண்களிலிருந்து

நடுங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.

46ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்!

என் கற்பாறையாம் அவர்
போற்றப் பெறுவாராக!

என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக!

47எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவர்;

மக்களினங்களை எனக்குக்
கீழ்ப்படுத்தியவரும் அவரே!

48என் பகைவரிடமிருந்து

என்னை விடுவித்தவரும் அவரே!

ஆண்டவரே! என் எதிரிகளுக்கு மேலாக

என்னை உயர்த்தினீர்!

என்னைக் கொடுமைப்படுத்தியவரிடமிருந்து

நீர் என்னைக் காத்தீர்!

49ஆகவே, பிற இனத்தாரிடையே

உம்மைப் போற்றுவேன்;

உம் பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்.

50தாம் ஏற்படுத்திய அரசருக்கு

மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்;

தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும்

அவர்தம் மரபினருக்கும்

என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே.


18:33 அப 3:19. 18:49 உரோ 15:9.