மாசற்றவனின் மன்றாட்டு
(தாவீதின் மன்றாட்டு)

1ஆண்டவரே, என் வழக்கின்

நியாயத்தைக் கேட்டருளும்;

என் வேண்டுதலை உற்றுக் கேளும்;

வஞ்சகமற்ற உதட்டினின்று எழும்

என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.

2உம் முன்னிலையினின்று

எனக்கு நீதி கிடைக்கட்டும்;

உம் கண்கள் நேரியன காணட்டும்.

3என் உள்ளத்தை ஆய்ந்தறியும்;

இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்;

என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்;

தீமை எதையும் என்னிடம் காணமாட்டீர்;

என் வாய் பிழை செய்யக்கூடாதென

உறுதி கொண்டேன்.

4பிற மானிடர் செய்வது போல் அல்லாமல்,

நீர் உரைத்த வாக்கிற்கிணங்க,

வன்முறையாளரின் வழிகளை விட்டு

விலகியுள்ளேன்.

5என் நடத்தை

உம் பாதைகளில் அமைந்துள்ளது;

என் காலடிகள்

உம் வழியினின்று பிறழவில்லை.

6இறைவா, நான் உம்மை நோக்கிக்

கூப்பிடுகின்றேன்; ஏனெனில்,
நீர் எனக்குப் பதில் அளிப்பீர்.

என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்;

என் விண்ணப்பத்திற்குச்
செவிசாய்த்தருளும்.

7உமது வியத்தகு பேரன்பைக்

காண்பித்தருளும்;

உம்மிடம் அடைக்கலம் புகுவோரை

அவர்களுடைய எதிரிகளிடமிருந்து

உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே!

8உமது கண்ணின் மணியென

என்னைக் காத்தருளும்;

உம்முடைய சிறகுகளின் நிழலில்

என்னை மூடிக்கொள்ளும்.

9என்னை ஒழிக்கத் தேடும்

பொல்லாரிடமிருந்தும்

என்னைச் சூழ்ந்து கொண்ட

எதிரிகளிடமிருந்தும்

என்னை மறைத்துக் கொள்ளும்.

10அவர்கள் ஈவு இரக்கமற்ற கல்நெஞ்சர்கள்;

தங்கள் வாயினால்

இறுமாப்புடன் பேசுபவர்கள்.

11அவர்கள் என்னைப் பின்தொடர்கின்றனர்;

இதோ! என்னை
வளைத்துக் கொண்டனர்;

அவர்கள் என்னைத் தரையில் வீழ்த்துவதற்கு,

வைத்த கண் வாங்காது
காத்திருக்கின்றனர்.

12பீறிப்போடத் துடிக்கும்

சிங்கத்திற்கு அவர்கள் ஒப்பாவர்;

மறைவிடத்தில் பதுங்கியிருக்கும்

இளஞ்சிங்கத்திற்கு நிகராவர்.

13ஆண்டவரே, எழுந்து வாரும்;

அவர்களை நேருக்குநேர்

எதிர்த்து முறியடியும்;

பொல்லாரிடமிருந்து உமது வாளால்

என்னைக் காத்தருளும்.

14ஆண்டவரே, மாயும் மனிதரிடமிருந்து –

இவ்வுலகமே தங்கள் கதியென

வாழ்ந்து மாயும் மனிதரிடமிருந்து –

உமது கைவலிமையினால்

என்னைக் காப்பாற்றும். அவர்களுக்கென

நீர் ஒதுக்கி வைத்துள்ளவற்றால்

அவர்கள் வயிற்றை நிரப்பும்;

அவர்களின் மைந்தர்

வேண்டிய மட்டும் நிறைவு பெறட்டும்;

எஞ்சியிருப்பதைத் தங்கள் பிள்ளைகளுக்கு

விட்டுச்செல்லட்டும்;

15நானோ நேர்மையில் நிலைத்திருந்து

உமது முகம் காண்பேன்;

விழித்தெழும்போது,

உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன்.