வெற்றிக்கு நன்றி
(தாவீதுக்கு உரியது)

1என் பாறையாகிய ஆண்டவர்

போற்றி! போற்றி!

போரிட என் கைகளுக்குப்

பயிற்சி அளிப்பவர் அவரே!

போர்புரிய என் விரல்களைப்

பழக்குபவரும் அவரே!

2என் கற்பாறையும்* கோட்டையும் அவரே!

எனக்குப் பாதுகாப்பாளரும்

மீட்பரும் அவரே!

என் கேடயமும் புகலிடமும் அவரே!

மக்களினத்தாரை எனக்குக்

கீழ்ப்படுத்துபவர் அவரே!

3ஆண்டவரே! மனிதரை நீர் கவனிக்க

அவர்கள் யார்?

மானிடரை நீர் கருத்தில் கொள்ள

அவர்கள் யார்?

4மனிதர் சிறுமூச்சுக்கு ஒப்பானவர்;

அவர்களின் வாழ்நாள்கள்

மறையும் நிழலுக்கு நிகரானவை.

5ஆண்டவரே! உம் வான்வெளியை

வளைத்து இறங்கிவாரும்;

மலைகளைத் தொடும்;

அவை புகை கக்கும்.

6மின்னலை மின்னச் செய்து,

அவர்களைச் சிதறடியும்;

உம் அம்புகளை எய்து,

அவர்களைக் கலங்கடியும்.

7வானின்று உமது கையை நீட்டி

எனக்கு விடுதலை வழங்கும்;

பெருவெள்ளம் போல் எழும்

வேற்றினத்தார் கையினின்று

என்னை விடுவித்தருளும்.

8அவர்களது வாய் பேசுவது பொய்!

அவர்களது வலக்கை

வஞ்சமிகு வலக்கை!

9இறைவா, நான் உமக்குப்

புதியதொரு பாடல் பாடுவேன்;

பதின் நரம்பு வீணையால்

உமக்குப் புகழ் பாடுவேன்.

10அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே!

உம் ஊழியர் தாவீதைக்

கொடிய வாளினின்று

தப்புவித்தவரும் நீரே!

11எனக்கு விடுதலை வழங்கும்;

வேற்றினத்தார் கையினின்று

என்னை விடுவித்தருளும்;

அவர்களது வாய் பேசுவது பொய்!

அவர்களது வலக்கை வஞ்சமிகு வலக்கை!

12எம் புதல்வர்கள்

இளமையில் செழித்து வளரும்

செடிகள்போல் இருப்பார்களாக!

எம் புதல்வியர்

அரண்மனைக்கு அழகூட்டும்

செதுக்கிய சிலைகள்போல்

இருப்பார்களாக!

13எம் களஞ்சியங்கள் நிறைந்திருப்பனவாக!

வகைவகையான தானியங்களால்

நிறைந்திருப்பனவாக!

எங்கள் வயல்களில் ஆடுகள் ஆயிரம்,

பல்லாயிரம் மடங்கு பலுகட்டும்!

14எங்கள் மாடுகள் சுமைசுமப்பனவாக!

எவ்விதச் சிதைவோ இழப்போ

இல்லாதிருக்கட்டும்!

எங்கள் தெருக்களில்

அழுகுரல் இல்லாதிருக்கட்டும்.

15இவற்றை உண்மையாகவே அடையும்

மக்கள் பேறுபெற்றோர்!

ஆண்டவரைத் தம் கடவுளாகக் கொண்ட

மக்கள் பேறுபெற்றோர்.


144:3 யோபு 7:17-18; திபா 8:4.
144:2 ‘பேரன்பும்’ என்றும் பொருள்படும்.