1ஆண்டவரை நோக்கி அபயக்குரல்
எழுப்புகின்றேன்; உரத்த குரலில்
ஆண்டவரின் இரக்கத்திற்காக
வேண்டுகின்றேன்.
2என் மனக்குறைகளை
அவர் முன்னிலையில் கொட்டுகின்றேன்;
அவர் திருமுன்னே என் இன்னலை
எடுத்துரைக்கின்றேன்;
3என் மனம் சோர்வுற்றிருந்தது;
நான் செல்லும் வழியை
அவர் அறிந்தேயிருக்கின்றார்;
நான் செல்லும் வழியில் அவர்கள்
எனக்குக் கண்ணி வைத்துள்ளார்கள்.
4வலப்புறம் கவனித்துப் பார்க்கின்றேன்;
என்னைக் கவனிப்பார் எவருமிலர்;
எனக்குப் புகலிடம் இல்லாமற் போயிற்று;
என் நலத்தில் அக்கறை கொள்வார்
எவருமிலர்.
5ஆண்டவரே! உம்மை நோக்கிக்
கதறுகின்றேன்;
‛நீரே என் அடைக்கலம்;
உயிர் வாழ்வோர் நாட்டில்
நீரே என் பங்கு’.
6என் வேண்டுதலைக் கவனித்துக் கேளும்;
ஏனெனில், நான் மிகவும்
தாழ்த்தப்பட்டுள்ளேன்;
என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து
எனக்கு விடுதலை அளித்தருளும்;
ஏனெனில், அவர்கள் என்னைவிட
வலிமைமிக்கோர்.
7சிறையினின்று என்னை விடுவித்தருளும்;
உமது பெயருக்கு
நான் நன்றி செலுத்துவேன்;
நீதிமான்கள் என்னைச்
சூழ்ந்து நிற்பார்கள்;
ஏனெனில், நீர் எனக்குப்
பெரும் நன்மை செய்கின்றீர்.