மாலை மன்றாட்டு
(தாவீதின் புகழ்ப்பா)

1ஆண்டவரே! நான் உம்மை

நோக்கிக் கதறுகின்றேன்;

விரைவாய் எனக்குத் துணைசெய்யும்.

உம்மை நோக்கி நான்

வேண்டுதல் செய்யும்போது

என் குரலுக்குச் செவிசாய்த்தருளும்.

2தூபம்போல் என் மன்றாட்டு

உம் திருமுன் ஏற்றுக்கொள்ளப்படுவதாக!

மாலைப் பலிபோல் என் கைகள்

உம்மை நோக்கி உயர்வனவாக!

3ஆண்டவரே! என் நாவுக்குக்

காவல் வைத்தருளும்;

என் இதழ்களின் வாயிலில்

காவலாளியை வைத்தருளும்.

4என் இதயம் தீயது எதையும்

நாடவிடாதேயும்;

தீச்செயல்களை நான் செய்யவிடாதேயும்;

தீச்செயல் செய்யும் மனிதரோடு

என்னைச் சேரவிடாதேயும்;

அவர்களோடு இனிய விருந்தினை

நான் உண்ணவிடாதேயும்.

5நீதிமான் என்னைக் கனிவோடு

தண்டிக்கட்டும்; அது என் தலைக்கு

எண்ணெய்போல் ஆகும்;

ஆனால், தீயவரின் எண்ணெய்

என்றுமே என் தலையில்

படாமல் இருக்கட்டும்;

ஏனெனில், அவர்கள் செய்யும்

தீமைகளுக்கு எதிராய்

நான் என்றும் வேண்டுதல் செய்வேன்.

6அவர்கள் நீதிபதிகளிடம்

தண்டனைக்கென

ஒப்புவிக்கப்படும் பொழுது, நான் சொன்னது

எவ்வளவு உண்மையானது என்று

ஏற்றுக் கொள்வார்கள்;

7‛ஒருவரால் பாறை பிளந்து

சிதறடிக்கப்படுவது போல்,

எங்கள் எலும்புகளும்

பாதாளத்தின் வாயிலில்

சிதறடிக்கப்படும்’ என்பார்கள்.

8ஏனெனில், என் தலைவராகிய

ஆண்டவரே! என் கண்கள்

உம்மை நோக்கியே இருக்கின்றன;

உம்மிடம் அடைக்கலம் புகுகின்றேன்;

என் உயிரை அழியவிடாதேயும்.

9அவர்கள் எனக்கு வைத்த

கண்ணிகளிலிருந்து

என்னைக் காத்தருளும்;

தீமை செய்வோரின் சுருக்குகளிலிருந்து

என்னைப் பாதுகாத்தருளும்.

10தீயோர் தாங்கள் வைத்த கண்ணிகளில்

ஒருங்கே வந்து விழுவார்களாக!

நானோ தடையின்றிக்

கடந்து செல்வேனாக!


141:2 திவெ 5:8.