1ஆண்டவரே! நான் உம்மை
நோக்கிக் கதறுகின்றேன்;
விரைவாய் எனக்குத் துணைசெய்யும்.
உம்மை நோக்கி நான்
வேண்டுதல் செய்யும்போது
என் குரலுக்குச் செவிசாய்த்தருளும்.
2தூபம்போல் என் மன்றாட்டு
உம் திருமுன் ஏற்றுக்கொள்ளப்படுவதாக!
மாலைப் பலிபோல் என் கைகள்
உம்மை நோக்கி உயர்வனவாக!
3ஆண்டவரே! என் நாவுக்குக்
காவல் வைத்தருளும்;
என் இதழ்களின் வாயிலில்
காவலாளியை வைத்தருளும்.
4என் இதயம் தீயது எதையும்
நாடவிடாதேயும்;
தீச்செயல்களை நான் செய்யவிடாதேயும்;
தீச்செயல் செய்யும் மனிதரோடு
என்னைச் சேரவிடாதேயும்;
அவர்களோடு இனிய விருந்தினை
நான் உண்ணவிடாதேயும்.
5நீதிமான் என்னைக் கனிவோடு
தண்டிக்கட்டும்; அது என் தலைக்கு
எண்ணெய்போல் ஆகும்;
ஆனால், தீயவரின் எண்ணெய்
என்றுமே என் தலையில்
படாமல் இருக்கட்டும்;
ஏனெனில், அவர்கள் செய்யும்
தீமைகளுக்கு எதிராய்
நான் என்றும் வேண்டுதல் செய்வேன்.
6அவர்கள் நீதிபதிகளிடம்
தண்டனைக்கென
ஒப்புவிக்கப்படும் பொழுது, நான் சொன்னது
எவ்வளவு உண்மையானது என்று
ஏற்றுக் கொள்வார்கள்;
7‛ஒருவரால் பாறை பிளந்து
சிதறடிக்கப்படுவது போல்,
எங்கள் எலும்புகளும்
பாதாளத்தின் வாயிலில்
சிதறடிக்கப்படும்’ என்பார்கள்.
8ஏனெனில், என் தலைவராகிய
ஆண்டவரே! என் கண்கள்
உம்மை நோக்கியே இருக்கின்றன;
உம்மிடம் அடைக்கலம் புகுகின்றேன்;
என் உயிரை அழியவிடாதேயும்.
9அவர்கள் எனக்கு வைத்த
கண்ணிகளிலிருந்து
என்னைக் காத்தருளும்;
தீமை செய்வோரின் சுருக்குகளிலிருந்து
என்னைப் பாதுகாத்தருளும்.
10தீயோர் தாங்கள் வைத்த கண்ணிகளில்
ஒருங்கே வந்து விழுவார்களாக!
நானோ தடையின்றிக்
கடந்து செல்வேனாக!