1ஆண்டவரே!
நீர் என்னை
ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!
2நான் அமர்வதையும் எழுவதையும்
நீர் அறிந்திருக்கின்றீர்;
என் நினைவுகளை எல்லாம்
தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.
3நான் நடப்பதையும் படுப்பதையும்
நீர் அறிந்துள்ளீர்;
என் வழிகள் எல்லாம்
உமக்குத் தெரிந்தவையே.
4ஆண்டவரே! என் வாயில்
சொல் உருவாகு முன்பே,
அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர்.
5எனக்கு முன்னும் பின்னும்
என்னைச் சூழ்ந்து இருக்கின்றீர்;
உமது கையால் என்னைப்
பற்றிப்பிடிக்கின்றீர்.
6என்னைப்பற்றிய உம் அறிவு
எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது;
அது உன்னதமானது;
என் அறிவுக்கு எட்டாதது.
7உமது ஆற்றலைவிட்டு
நான் எங்கே செல்லக்கூடும்?
உமது திருமுன்னிலிருந்து
நான் எங்கே தப்பியோட முடியும்?
8நான் வானத்திற்கு
ஏறிச் சென்றாலும்
நீர் அங்கே இருக்கின்றீர்!
பாதாளத்தில் படுக்கையை
அமைத்துக் கொண்டாலும்
நீர் அங்கேயும் இருக்கின்றீர்!
9நான் *கதிரவனின் இடத்திற்கும்*
பறந்து சென்றாலும்
மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும்,
10அங்கேயும் உமது கை
என்னை நடத்திச் செல்லும்;
உமது வலக்கை என்னைப்
பற்றிக் கொள்ளும்.
11‘உண்மையில் இருள் என்னை
மூடிக்கொள்ளாதோ?
ஒளி சூழ்வதென இரவும்
என்னைச் சூழ்ந்து கொள்ளாதோ?’
என்று நான் சொன்னாலும்,
12இருள்கூட உமக்கு இருட்டாய் இல்லை;
இரவும் பகலைப்போல
ஒளியாய் இருக்கின்றது;
இருளும் உமக்கு ஒளிபோல் இருக்கும்.
13ஏனெனில், என் உள் உறுப்புகளை
உண்டாக்கியவர் நீரே!
என் தாயின் கருவில்
எனக்கு உருதந்தவர் நீரே!
14அஞ்சத்தகு, வியத்தகு முறையில்
நீர் என்னைப் படைத்ததால்,
நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்;
உம் செயல்கள்
வியக்கத்தக்கவை என்பதை
என் மனம் முற்றிலும் அறியும்.
15என் எலும்பு உமக்கு மறைவானதன்று;
மறைவான முறையில்
நான் உருவானதையும்
பூவுலகின் ஆழ்பகுதிகளில்
நான் உருப்பெற்றதையும்
நீர் அறிந்திருந்தீர்.
16உம் கண்கள் கருமுளையில்
என் உறுப்புகளைக் கண்டன;
நீர் எனக்குக் குறித்து வைத்துள்ள
நாள்கள் எல்லாம்
எனக்கு வாழ்நாள் எதுவுமே
இல்லாத காலத்திலேயே
உமது நூலில் எழுதப்பட்டுள்ளன.
17இறைவா! உம்முடைய நினைவுகளை
நான் அறிந்துகொள்வது
எத்துணைக் கடினம்!
அவற்றின் எண்ணிக்கை
எத்துணைப் பெரிது!
18அவற்றைக் கணக்கிட
நான் முற்பட்டால்,
அவை கடல் மணலிலும்
மிகுதியாய் உள்ளன;
அவற்றை எண்ணி முடிக்க வேண்டுமானால்,
நீர் உள்ளளவும் நான் வாழ வேண்டும்.
19கடவுளே! நீர் தீயோரைக் கொன்றுவிட்டால்,
எவ்வளவு நலம்! இரத்தப்பழிகாரர்
என்னிடமிருந்து அகன்றால்,
எத்துணை நன்று!
20ஏனெனில், அவர்கள் தீயமனத்துடன்
உமக்கு எதிராய்ப் பேசுகின்றார்கள்;
அவர்கள் தலைதூக்கி
உமக்கு எதிராய்ச் சதி செய்கின்றார்கள்.
21ஆண்டவரே! உம்மை வெறுப்போரை
நானும் வெறுக்காதிருப்பேனோ?
உம்மை எதிர்க்க எழுவோரை
நானும் வெறுக்கின்றேன் அன்றோ?
22நான் அவர்களை
அடியோடு வெறுக்கின்றேன்;
அவர்கள் எனக்கும் எதிரிகள் ஆனார்கள்.
23இறைவா! நீர் என் உள்ளத்தை
ஆய்ந்து அறியும்;
என் எண்ணங்களை அறியுமாறு
என்னைச் சோதித்துப் பாரும்.
24உம்மை வருத்தும் வழியில்
நான் செல்கின்றேனோ என்று பாரும்;
என்றுமுள வழியில் என்னை நடத்தியருளும்.