நன்றிப் பாடல்
(தாவீதுக்கு உரியது)

1ஆண்டவரே!

என் முழுமனத்துடன்

உமக்கு நன்றி செலுத்துவேன்;

தெய்வங்கள் முன்னிலையில்

உம்மைப் புகழ்வேன்.

2உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி

உம்மைத் தாள் பணிவேன்;

உம் பேரன்பையும்

உண்மையையும் முன்னிட்டு

உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்;

ஏனெனில், அனைத்திற்கும் மேலாக

உம் பெயரையும் உம் வாக்கையும்

மேன்மையுறச் செய்துள்ளீர்.

3நான் மன்றாடிய நாளில்

எனக்குச் செவிசாய்த்தீர்;

என் மனத்திற்கு வலிமை அளித்தீர்.

4ஆண்டவரே! நீர்

திருவாய் மலர்ந்த சொற்களைப்

பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு

உம்மைப் போற்றுவர்.

5ஆண்டவரே! உம் வழிகளை

அவர்கள் புகழ்ந்து பாடுவர்;

ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது!

6ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்;

எனினும் நலிந்தோரைக்

கண்ணோக்குகின்றீர்;

ஆனால், செருக்குற்றோரைத்

தொலையிலிருந்தே அறிந்து கொள்கின்றீர்.

7நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும்,

என் உயிரைக் காக்கின்றீர்;

என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக

உமது கையை நீட்டுகின்றீர்;

உமது வலக்கையால்

என்னைக் காப்பாற்றுகின்றீர்.

8நீர் வாக்களித்த அனைத்தையும்

எனக்கெனச் செய்து முடிப்பீர்;

ஆண்டவரே! என்றும் உள்ளது

உமது பேரன்பு;

உம் கைவினைப் பொருளைக்

கைவிடாதேயும்.