1ஆண்டவரே! ஆழ்ந்த
துயரத்தில் இருக்கும் நான்
உம்மை நோக்கி
மன்றாடுகிறேன்;
2ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச்
செவிசாய்த்தருளும்;
என் விண்ணப்பக் குரலை
உம்முடைய செவிகள்
கவனத்துடன் கேட்கட்டும்.
3ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை
மனத்தில் கொண்டிருந்தால்,
யார்தான் நிலைத்து நிற்க முடியும்?
4நீரோ மன்னிப்பு அளிப்பவர்;
மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.
5ஆண்டவருக்காக ஆவலுடன் நான்
காத்திருக்கின்றேன்;
என் நெஞ்சம் காத்திருக்கின்றது;
அவரது சொற்களுக்காக
ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
6விடியலுக்காய்க் காத்திருக்கும்
காவலரைவிட,
ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும்
காவலரைவிட,
என் நெஞ்சம் என் தலைவருக்காய்
ஆவலுடன் காத்திருக்கின்றது.
7இஸ்ரயேலே!
ஆண்டவரையே நம்பியிரு;
பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது;
மிகுதியான மீட்பு
அவரிடமே உண்டு.
8எல்லாத் தீவினைகளினின்றும்
இஸ்ரயேலரை மீட்பவர் அவரே!