உதவிக்காக மன்றாடல்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)

1ஆண்டவரே! ஆழ்ந்த

துயரத்தில் இருக்கும் நான்

உம்மை நோக்கி

மன்றாடுகிறேன்;

2ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச்

செவிசாய்த்தருளும்;

என் விண்ணப்பக் குரலை

உம்முடைய செவிகள்

கவனத்துடன் கேட்கட்டும்.

3ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை

மனத்தில் கொண்டிருந்தால்,

யார்தான் நிலைத்து நிற்க முடியும்?

4நீரோ மன்னிப்பு அளிப்பவர்;

மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.

5ஆண்டவருக்காக ஆவலுடன் நான்

காத்திருக்கின்றேன்;

என் நெஞ்சம் காத்திருக்கின்றது;

அவரது சொற்களுக்காக

ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

6விடியலுக்காய்க் காத்திருக்கும்

காவலரைவிட,

ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும்

காவலரைவிட,

என் நெஞ்சம் என் தலைவருக்காய்

ஆவலுடன் காத்திருக்கின்றது.

7இஸ்ரயேலே!

ஆண்டவரையே நம்பியிரு;

பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது;

மிகுதியான மீட்பு

அவரிடமே உண்டு.

8எல்லாத் தீவினைகளினின்றும்

இஸ்ரயேலரை மீட்பவர் அவரே!


130:8 மத் 1:21; தீத் 2:14.