1‟என் இளமை முதற்கொண்டே
என்னைப் பெரிதும்
துன்புறுத்தினார்கள்” –
இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக!
2‟என் இளமை முதற்கொண்டே
என்னைப் பெரிதும்
துன்புறுத்தினார்கள்;
எனினும், அவர்கள்
என்மீது வெற்றி பெறவில்லை.
3உழவர் என் முதுகின்மீது உழுது
நீண்ட படைச்சால்களை உண்டாக்கினர்.”
4ஆண்டவர் நீதியுள்ளவர்; எனவே,
பொல்லார் கட்டிய கயிறுகளை
அவர் அறுத்தெறிந்தார்.
5சீயோனைப் பகைக்கும் அனைவரும்
அவமானப்பட்டுப் புறமுதுகிடுவராக!
6கூரைமேல் முளைக்கும் புல்லுக்கு
அவர்கள் ஒப்பாவார்கள்;
வளருமுன் அது உலர்ந்துபோகும்.
7அதை அறுப்போரின் கைக்கு,
ஒரு பிடி கூடக் கிடைக்காது;
அரிகளைச் சேர்த்தால்
ஒரு சுமைகூடத் தேறாது.
8வழிப்போக்கரும் அவர்களைப் பார்த்து,
‛ஆண்டவர் உங்களுக்கு ஆசி
வழங்குவாராக!’ என்றோ
‛ஆண்டவரின் பெயரால்
ஆசி வழங்குகிறோம்’ என்றோ சொல்லார்.