உதவிக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)

1ஆண்டவரே, எத்தனை நாள்

என்னை மறந்திருப்பீர்?

இறுதிவரை மறந்துவிடுவீரோ?

இன்னும் எத்தனை நாள்

உமது முகத்தை எனக்கு மறைப்பீர்?

2எத்தனை நாள் வேதனையுற்று

எனக்குள் போராடுவேன்?

நாள் முழுதும் என் இதயம் துயருறுகின்றது;

எத்தனை நாள் என் எதிரி

எனக்கெதிராய் மேலோங்கி நிற்பான்?

3என் கடவுளாகிய ஆண்டவரே,

என்னைக் கண்ணோக்கி

எனக்குப் பதில் அளித்தருளும்;

என் விழிகளுக்கு ஒளியூட்டும்.

4அப்பொழுது, நான் சாவின் உறக்கத்தில்

ஆழ்ந்து விடமாட்டேன்; என் எதிரி,

‛நான் அவனை வீழ்த்திவிட்டேன்’

என்று சொல்லமாட்டான்;

நான் வீழ்ச்சியுற்றேன் என்று

என் பகைவர் அக்களிக்கவுமாட்டார்.

5நான் உமது பேரன்பில் நம்பிக்கை

வைத்திருக்கின்றேன்;

நீர் அளிக்கும் விடுதலையால்

என் இதயம் களிகூரும்.

6நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்;

ஏனெனில், அவர் எனக்கு

நன்மை பல செய்துள்ளார்.