இறைப்பற்று இல்லார்
(பாடகர் தலைவர்க்கு: தாவீதுக்கு உரியது)
(திபா 53)

1‛கடவுள் இல்லை’ என அறிவிலிகள்

தம் உள்ளத்தில்

சொல்லிக் கொள்கின்றனர்;

அவர்கள் சீர்கெட்டு அருவருப்பான

செயல்களில் ஈடுபடுகின்றனர்.

நல்லது செய்வோர் எவருமே இல்லை.

2ஆண்டவர் விண்ணகத்தினின்று

மானிடரை உற்றுநோக்குகின்றார்;

மதிநுட்பமுள்ளோர், கடவுளை நாடுவோர்

எவராவது உண்டோ எனப் பார்க்கின்றார்.

3எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்;

ஒருமிக்கக் கெட்டுப்போயினர்;

நல்லது செய்வார் யாரும் இல்லை;

ஒருவர்கூட இல்லை.

4தீங்கிழைக்கும் யாவரும்

அறிவை இழந்துவிட்டார்களோ?

உணவை விழுங்குவதுபோல்

என் மக்களை விழுங்கப்பார்க்கிறார்களே!

அவர்கள் ஆண்டவரை நோக்கி

மன்றாடுவதுமில்லை.

5அவர்கள் அஞ்சி நடுங்குவர்;

ஏனெனில், கடவுள் நேர்மையாளரின்

வழிமரபோடு இருக்கின்றார்.

6எளியோரின் திட்டத்தை அவர்கள்

தோல்வியுறச் செய்கின்றார்கள்;

ஆனால், ஆண்டவர் எளியோர்க்கு

அடைக்கலமாய் இருக்கின்றார்.

7சீயோனிலிருந்து இஸ்ரயேலருக்கு

மீட்பு வருவதாக!

ஆண்டவர் தம் மக்களுக்கு

மீண்டும் வளமான வாழ்வை அருளும்போது,

யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக!

இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக!


14:1-3 உரோ 3:10-12.