1‛கடவுள் இல்லை’ என அறிவிலிகள்
தம் உள்ளத்தில்
சொல்லிக் கொள்கின்றனர்;
அவர்கள் சீர்கெட்டு அருவருப்பான
செயல்களில் ஈடுபடுகின்றனர்.
நல்லது செய்வோர் எவருமே இல்லை.
2ஆண்டவர் விண்ணகத்தினின்று
மானிடரை உற்றுநோக்குகின்றார்;
மதிநுட்பமுள்ளோர், கடவுளை நாடுவோர்
எவராவது உண்டோ எனப் பார்க்கின்றார்.
3எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்;
ஒருமிக்கக் கெட்டுப்போயினர்;
நல்லது செய்வார் யாரும் இல்லை;
ஒருவர்கூட இல்லை.
4தீங்கிழைக்கும் யாவரும்
அறிவை இழந்துவிட்டார்களோ?
உணவை விழுங்குவதுபோல்
என் மக்களை விழுங்கப்பார்க்கிறார்களே!
அவர்கள் ஆண்டவரை நோக்கி
மன்றாடுவதுமில்லை.
5அவர்கள் அஞ்சி நடுங்குவர்;
ஏனெனில், கடவுள் நேர்மையாளரின்
வழிமரபோடு இருக்கின்றார்.
6எளியோரின் திட்டத்தை அவர்கள்
தோல்வியுறச் செய்கின்றார்கள்;
ஆனால், ஆண்டவர் எளியோர்க்கு
அடைக்கலமாய் இருக்கின்றார்.
7சீயோனிலிருந்து இஸ்ரயேலருக்கு
மீட்பு வருவதாக!
ஆண்டவர் தம் மக்களுக்கு
மீண்டும் வளமான வாழ்வை அருளும்போது,
யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக!
இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக!