1எங்களுக்கன்று, ஆண்டவரே!
எங்களுக்கன்று;
மாட்சியை உம் பெயருக்கே
உரித்தாக்கும்;
உம் பேரன்பையும்
உண்மையையும் முன்னிட்டு
அதை உமக்கே உரியதாக்கும்.
2‘அவர்களுடைய கடவுள் எங்கே’ எனப்
பிற இனத்தார் வினவுவது ஏன்?
3நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்;
தம் திருவுளப்படி
அனைத்தையும் செய்கின்றார்.
4அவர்களுடைய தெய்வச்சிலைகள்
வெறும் வெள்ளியும் பொன்னுமே,
வெறும் மனிதக் கைவேலையே!
5அவற்றுக்கு வாய்கள் உண்டு;
ஆனால் அவை பேசுவதில்லை;
கண்கள் உண்டு;
ஆனால் அவை பார்ப்பதில்லை;
6செவிகள் உண்டு;
ஆனால் அவை கேட்பதில்லை;
மூக்குகள் உண்டு;
ஆனால் அவை முகர்வதில்லை.
7கைகள் உண்டு;
ஆனால் அவை தொட்டுணர்வதில்லை;
கால்கள் உண்டு;
ஆனால் அவை நடப்பதில்லை;
தொண்டைகள் உண்டு;
ஆனால் அவை குரல் எழுப்புவதில்லை.
8அவற்றைச் செய்கின்றோரும்
அவற்றில் நம்பிக்கை கொள்ளும்
அனைவரும் அவற்றைப்போல் ஆவர்.
9இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது
நம்பிக்கைக் கொள்ளுங்கள்;
அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
10ஆரோனின் குலத்தாரே!
ஆண்டவர்மீது
நம்பிக்கைக் கொள்ளுங்கள்;
அவரே உங்களுக்குத்
துணையும் கேடயமும் ஆவார்.
11ஆண்டவருக்கு அஞ்சி நடப்போரே!
அவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்;
அவரே உங்களுக்குத்
துணையும் கேடயமும் ஆவார்.
12ஆண்டவர்
நம்மை நினைவு கூர்ந்துள்ளார்;
நமக்குத் தம் ஆசியை அளிப்பார்.
இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு
ஆசி வழங்குவார்;
ஆரோனின் குடும்பத்தாருக்கு
ஆசி வழங்குவார்;
13தமக்கு அஞ்சிநடப்போர்க்கு
ஆண்டவர் ஆசி வழங்குவார்;
சிறியோர்க்கும் பெரியோர்க்கும்
ஆசி வழங்குவார்.
14ஆண்டவர் உங்கள் இனத்தைப்
பெருகச் செய்வார்;
உங்களையும் உங்கள் பிள்ளைகளையும்
வளரச் செய்வார்.
15நீங்கள் ஆண்டவரிடமிருந்து
ஆசி பெறுவீர்களாக!
விண்ணையும் மண்ணையும்
உருவாக்கியவர் அவரே.
16விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது;
மண்ணகத்தையோ
அவர் மானிடர்க்கு வழங்கியுள்ளார்.
17இறந்தோர் ஆண்டவரைப் புகழ்வதில்லை;
மௌன உலகிற்குள் இறங்குவோர்
எவருமே அவரைப் புகழ்வதில்லை;
18நாமோ ஆண்டவரை வாழ்த்துகின்றோம்;
இப்பொழுதும் எப்பொழுதும்
வாழ்த்துகின்றோம்.