‘ஞானத்தின் மேன்மை’

1வெள்ளிக்கு விளைநிலம் உண்டு;

பொன்னுக்குப் புடமிடும் இடமுண்டு.

2மண்ணிலிருந்து இரும்பு எடுக்கப்படுகின்றது;

கல்லிலிருந்து செம்பு உருக்கப்படுகின்றது.

3மனிதர் இருளுக்கு இறுதி கண்டு,

எட்டின மட்டும் தோண்டி,

இருட்டிலும் சாவின் இருளிலும்

கனிமப் பொருளைத் தேடுகின்றனர்.

4மக்கள் குடியிருப்புக்குத் தொலையில்

சுரங்கத்தைத் தோண்டுவர்;

வழிநடப்போரால் அவர்கள் மறக்கப்படுவர்;

மனிதரிடமிருந்து கீழே இறங்கி

ஊசலாடி வேலை செய்வர்.

5மேலே நிலத்தில் உணவு விளைகின்றது;

கீழே அது நெருப்புக் குழம்பாய் மாறுகின்றது.

6நீலமணிகள் அதன் கற்களில் கிட்டும்;

பொன்துகளும் அதில் கிடைக்கும்.

7அதற்குச் செல்லும் பாதையை,

ஊன் உண்ணும் பறவையும் அறியாது;

கழுகின் கண்களும் அதைக் கண்டதில்லை.

8வீறுகொண்ட விலங்குகள்

அதன் மேல் சென்றதில்லை;

சிங்கமும் அவ்வழி நடந்து கடந்ததில்லை.

9கடின பாறையிலும் அவர்கள் கைவைப்பர்;

மலைகளின் அடித்தளத்தையே

பெயர்த்துப் புரட்டிடுவர்.

10பாறைகள் நடுவே

சுரங்க வழிகளை வெட்டுகின்றனர்;

விலையுயர் பொருளையே

அவர்களது கண் தேடும்.

11ஒழுகும் ஊற்றுகளைத்

தடுத்து நிறுத்துகின்றனர்;

மறைவாய் இருப்பதை

ஒளிக்குக் கொணர்கின்றனர்.

12ஆனால், ஞானம்

எங்கே கண்டெடுக்கப்படும்?

அறிவின் உறைவிடம் எங்கேயுள்ளது?

13மனிதர் அதன் மதிப்பை உணரார்;

வாழ்வோர் உலகிலும் அது காணப்படாது.

14‘என்னுள் இல்லை’ என உரைக்கும் ஆழ்கடல்;

‘என்னிடம் இல்லை’ என இயம்பும் பெருங்கடல்.

15தங்கத்தைக் கொடுத்து

அதைப் பெறமுடியாது; வெள்ளியால்

அதன் விலையை நிறுக்க இயலாது.

16ஓபீர்த் தங்கமும் கோமேதகமும்

அரிய நீலமணியும் அதற்கு மதிப்பாகா!

17பொன்னும் பளிங்கும் அதற்கு நிகராகா;

பசும்பொன் கலன்களும் பண்டமாற்றாகா.

18மணியும் பவளமும் அதற்கு இணையில்லை;

மதிப்பினில் முத்தினை ஞானம் விஞ்சும்.

19எத்தியோப்பிய புட்பராகம்

அதற்கு இணையல்ல;

பத்தரை மாற்றுத் தங்கமும் அதற்கு நிகரல்ல.

20அவ்வாறாயின், எங்கிருந்து வருகிறது ஞானம்?

எங்குள்ளது அறிவின் உறைவிடம்?

21வாழ்வோர் அனைவர்தம் கண்களுக்கும்

ஒளிந்துள்ளது;

வானத்துப் பறவைகளுக்கும்

மறைவாய் உள்ளது.

22படுகுழியும் சாவும் பகர்கின்றன;

அதைப்பற்றிய பேச்சு காதில் விழுந்தது;

23அதன் வழியைத் தெரிந்தவர் கடவுள்;

அதன் இடத்தை அறிந்தவரும் அவரே!

24ஏனெனில், வையகத்தின் எல்லை வரை

அவர் காண்கின்றார்;

வானத்தின்கீழ் உள்ளவற்றைப் பார்க்கின்றார்.

25காற்றுக்கு எடையைக் கடவுள் கணித்தபோது,

நீரினை அளவையால் அளந்தபோது,

26மழைக்கு அவர் கட்டளை இட்டபொழுது,

இடி மின்னலுக்கு வழியை வகுத்த பொழுது,

27அவர் ஞானத்தைக் கண்டார்;

அதைப்பற்றி அறிவித்தார்;

அதை நிலைநாட்டினார்;

இன்னும் அதை ஆய்ந்தறிந்தார்.

28அவர் மானிடர்க்குக் கூறினார்;

ஆண்டவர்க்கு அஞ்சுங்கள்; அதுவே ஞானம்;

தீமையை விட்டு விலகுங்கள்; அதுவே அறிவு.


28:28 திபா 111:10; நீமொ 1:7; 9:10.