யோபின் முன்னைய இன்பநிலை

1யோபு இன்னும் தொடர்ந்து

பேசிய உரை:

2காண்பேனா முன்னைய திங்கள்களை;

கடவுள் என்னைக் கண்காணித்த நாள்களை!

3அப்போது அவர் விளக்கு

என் தலைமீது ஒளிவீசிற்று;

அவரது ஒளியால் இருளில் நான் நடந்தேன்.

4அப்போது என் இளமையின் நாள்களில்

நான் இருந்தேன்; கடவுளின் கருணை

என் குடிசை மீது இருந்தது.

5அன்று வல்லவர் என்னோடு இருந்தார்;

என் மக்கள் என்னைச் சூழ்ந்திருந்தனர்.

6அப்போது என் காலடிகள் நெய்யில் குளித்தன;

பாறையிலிருந்து எனக்கு எண்ணெய் ஆறாய்ப் பாய்ந்தது.

7நகர வாயிலுக்கு நான் செல்கையிலும்,

பொது மன்றத்தில்

என் இருக்கையில் அமர்கையிலும்,

8என்னைக் கண்டதும்

இளைஞர் ஒதுங்கிக்கொள்வர்;

முதிர்ந்த வயதினர் எழுந்து நிற்பர்.

9உயர்குடி மக்கள் தம் பேச்சை நிறுத்துவர்;

கைகட்டி, வாய்பொத்தி வாளாவிருப்பர்.

10தலைவர்தம் குரல் அடங்கிப்போம்;

அவர் நா அண்ணத்தோடு ஒட்டிக்கொள்ளும்.

11என்னைக் கேட்ட செவி,

என்னை வாழ்த்தியது;

என்னைப் பார்த்த கண்

எனக்குச் சான்று பகர்ந்தது.

12ஏனெனில், கதறிய ஏழைகளை

நான் காப்பாற்றினேன்;

தந்தை இல்லார்க்கு உதவினேன்.

13அழிய இருந்தோர் எனக்கு ஆசி வழங்கினர்;

கைம்பெண்டிர்தம் உள்ளத்தைக்

களிப்பால் பாடச் செய்தேன்.

14அறத்தை அணிந்தேன்;

அது என் ஆடையாயிற்று.

நீதி எனக்கு மேலாடையும் பாகையும் ஆயிற்று.

15பார்வையற்றோர்க்குக் கண் ஆனேன்;

காலூனமுற்றோர்க்குக் கால் ஆனேன்.

16ஏழைகளுக்கு நான் தந்தையாக இருந்தேன்;

அறிமுகமற்றோரின் வழக்குகளுக்காக

வாதிட்டேன்.

17கொடியவரின் பற்களை உடைத்தேன்;

அவரின் பற்களுக்கு இரையானவரை

விடுவித்தேன்.

18நான் எண்ணினேன்;

‘மணல் மணியைப்போல்

நிறைந்த நாள் உடையவனாய்

என் இல்லத்தில் சாவேன்.

19என் வேர் நீர்வரை ஓடிப் பரவும்;

இரவெல்லாம் என் கிளையில் பனி இறங்கும்.

20என் புகழ் என்றும் ஓங்கும்;

என் வில் வளைதிறன் கொண்டது.’

21எனக்குச் செவிகொடுக்க

மக்கள் காத்திருந்தனர்;

என் அறிவுரைக்காக அமைதி காத்தனர்.

22என் சொல்லுக்கு மறுசொல்

அவர்கள் கூறவில்லை;

என் மொழிகள் அவர்களில் தங்கின.

23மழைக்கென அவர்கள்

எனக்காய்க் காத்திருந்தனர்;

மாரிக்கெனத் தங்கள் வாயைத் திறந்தனர்.

24நம்பிக்கை இழந்தோரை

என் புன்முறவல் தேற்றியது;

என் முகப்பொலிவு உரமூட்டியது.

25நானே அவர்களுக்கு வழியைக் காட்டினேன்;

தலைவனாய்த் திகழ்ந்தேன்;

வீரர் நடுவே வேந்தனைப்போல் வாழ்ந்தேன்;

அழுகின்றவர்க்கு

ஆறுதல் அளிப்பவன் போல் இருந்தேன்.