‘பில்தாத்தின் சொற்கள் வீணே’

1அதற்கு யோபு கூறிய பதில்:

2என்போன்ற வலிமையற்றவர்க்கு

எத்துணைப் துணைபுரிந்தீர்!

ஆற்றலற்ற தோளுக்கு

எவ்வளவு துணைநின்றீர்!

3என் போன்ற அறிவற்றவர்க்கு

எவ்வளவு அறிவுரை கூறினீர்!

நன்னெறிகளை நிறையக் காட்டீனீர்!

4எவர் துணைகொண்டு

இயம்பினீர் இம்மொழிகளை?

எவர்தம் ஏவுதல்

உம்மிடமிருந்து வெளிப்பட்டது?

5கீழ்உலகின் ஆவிகள் நடுங்குகின்றன;

நீர்த் திரள்களும் அவற்றில் வாழ்வனவும்

அஞ்சுகின்றன.

6பாதாளம் கடவுள்முன் திறந்து கிடக்கிறது;

படுகுழி அவர்முன் மூடப்படவில்லை.

7வெற்றிடத்தில் வடபுறத்தை அவர் விரித்தார்;

காற்றிடையே உலகைத் தொங்கவிட்டார்.

8நீரினை மேகத்துள் பொதித்துள்ளார்;

அதன் நிறைவால் முகிலும் கிழிவதில்லை.

9தம் அரியணையின் முகத்தை மூடுகின்றார்;

முகிலை அதன்மேல் பரப்புகின்றார்.

10நீர்ப்பரப்பின் மீது வட்டம் வரைந்து,

இருளுக்கும் ஒளிக்குமிடையில்

எல்லை அமைத்தார்.

11விண்ணின் தூண்கள் அதிர்கின்றன;

அவர் அதட்டலில் அதிர்ச்சியடைகின்றன.

12ஆழியைத் தம் ஆற்றலால் அடக்கினார்;

இராகாபை அழித்தார் அறிவுக்கூர்மையால்.

13தம் மூச்சால் வான்வெளியை ஒளிர்வித்தார்;

தம் கையால் விரைந்தோடும் பாம்பை

ஊடுருவக் குத்தினார்.

14ஓ! இவையாவும்

அவர்தம் செயல்களின் விளிம்புகளே!

எத்துணை மென்குரல் அவற்றில் கேட்கின்றது.

அவர்தம் வல்லமையின் இடிமுழக்கத்தை அறிய

யாரால் இயலும்?