கொலோசையர் முன்னுரை


விவிலியத்தில் கிறிஸ்தியல் விளக்கம் மிகுதியாய்க் கொண்ட நூல் கொலோசையர் திருமுகமாகும். கிறிஸ்து இல்லாமல் கிறிஸ்தவர்களாக வாழ இயலாது என இத்திருமுகம் வலியுறுத்திக் கூறுகிறது.

ஆசிரியர்

இத்திருமுகத்திலேயே பவுல்தான் இதன் ஆசிரியர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது (1:1,23; 4:18). 19ஆம் நூற்றாண்டு வரை இதனை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அண்மைக் காலத்தில் இத்திருமுகத்தில் பயன்படுத்தப்படும் சொற்கள், மொழிநடை, இறையியல் கருத்துக்கள் அடிப்படையில் இதனைப் பவுலே நேரடியாக எழுதியிருக்க மாட்டார் என்னும் கருத்து வலுப்பெற்று வருகிறது. அவரது கண்ணோட்டத்தில், மாறிவிட்ட காலக் கட்டத்திற்கும் சிக்கல்களுக்கும் ஏற்ப, அவரது பெயரில் பவுலின் சீடர் ஒருவர் இதனை எழுதியிருக்க வேண்டும் எனப் பல அறிஞர்கள் கருதுகின்றனர்.

சூழலும் நோக்கமும்

சின்ன ஆசியாவிலிருந்த கொலோசை நகரத்தில் பவுல் நேரடியாக நற்செய்திப் பணி ஆற்றவில்லை; ஆனால் எபேசு நகரில் அவர் தங்கியிருந்த போது எப்பப்பிரா மூலமாகக் கொலோசையில் நற்செய்தி அறிவித்தார் (1:7-8).

இந்நகரில் ஞான உணர்வுக் கொள்கையின் தொடக்க வடிவமும் யூதச் சிந்தனைகளும் இணைந்த சில கொள்கைகள் பரவிக் கிடந்தன. சடங்கு விதிகளுக்கு முக்கியத்துவம் தருதல் (2:16-17; 3:11), உடல் ஒறுத்தல் (2:21,23), வானதூதர் வழிபாடு (2:18; 2:2-3), மனித ஞானத்திலும் மரபிலும் மிகுந்த நம்பிக்கை வைத்தல் (2:4,8) போன்றவை இக்கொள்கையில் விரவிக் கிடந்தன. இந்நிலையைக் கண்டித்துக் கிறிஸ்தவ உண்மையை நிலைநிறுத்த இத்திருமுகம் எழுதப்பட்டிருக்க வேண்டும். சிறையிலிருந்து எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்டிருப்பதால் இது சிறைக்கூட மடல்களுள் ஒன்றாகக் கருதப்பட்டது. கி.பி. 70-80 ஆண்டுகளில் இது எழுதப்பட்டிருக்கலாம்.

உள்ளடக்கம்

கொலோசையில் இருந்த போலிப்போதகர்களின் தவறான கொள்கைகளைக் கண்டிப்பதற்காக இத்திருமுக ஆசிரியர் கிறிஸ்துவைக் கடவுளது சாயல் என்கிறார் (1:15); அவர் அனைத்தையும் படைத்தவர் என்கிறார் (1:16); அனைத்துக்கும் முந்திய அவர், அனைத்தையும் நிலைக்கச் செய்பவர் என்கிறார் (1:17). இத்திருமுகத்தின்படி கிறிஸ்து திருச்சபையின் தலைவர் (1:18), இறந்து உயிர்த்தெழுவோருள் தலைப்பேறு (1:18), கடவுளின் தன்மையை மனித உருவில் நிறைவாய்க் கொண்டவர் (1:19; 2:9), கடவுளோடு நம்மை மீண்டும் ஒப்புரவாக்குபவர் (1:20-22).

முதற் பகுதியில் (1-2) கிறிஸ்துவின் தன்மையை எடுத்துக்காட்டிய திருமுக ஆசிரியர், இரண்டாம் பகுதியில் இப்போதனை கிறிஸ்தவர்களின் வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என விளக்குகிறார் (3-4). கிறிஸ்தவர்கள் பழைய இயல்பைக் களைந்து புதிய இயல்பை அணிந்து கொள்ள வேண்டும்; குடும்ப வாழ்விலும், தொழிலிலும், பொது வாழ்விலும் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்துகிறார்; இறுதியில் திக்கிக்கு என்பவருக்கு நன்றி கூறி நண்பர்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்.

அமைப்பு

  1. முன்னுரை (வாழ்த்தும் நன்றியும் மன்றாட்டும்) 1:1 - 14
  2. கிறிஸ்துவின் மேன்மை 1:15 - 2:3
  3. போலிப் போதகர்களுக்கு எதிரான எச்சரிக்கை 2:4 - 23
  4. கிறிஸ்தவ வாழ்வு 3:1 - 4:6
  5. முடிவுரை 4:7 - 18