எப்ராயிம், மனாசேக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகள்

1யோசேப்பின் மக்களுக்குக் கிடைத்த நிலப்பகுதியின் எல்லைகள்: எரிகோ பகுதியின் யோர்தானிலிருந்து எரிகோ நீர் நிலைகளுக்குக் கிழக்காக, எரிகோவிலிருந்து பெத்தேல் குன்றுவரை உள்ள பாலைநிலத்தின் ஊடேசென்று,
2பெத்தேலிலிருந்து லூசுக்குச் சென்று அர்கியரின் எல்லையான அதாரோத்தைக் கடந்து,
3மேற்காக, யாப்லேற்றியரின் எல்லை நோக்கி இறங்கி, பெத்கோரோன் கெசேர் எல்லைமட்டும் சென்று கடலில் முடிகின்றது.
4யோசேப்பின் மக்களான மனாசேயும் எப்ராயிமும் இதை உரிமைச்சொத்தாகப் பெற்றனர்.

எப்ராயிமுக்குரிய பகுதி

5எப்ராயிம் புதல்வருக்கு அவர்கள் குடும்பங்களின்படி உரிமைச் சொத்தாகக் கிடைத்த நிலப்பகுதியின் எல்லைகள்: கிழக்கே எல்லை அற்றரோத்து-அதார் முதல் மேல் பெத்கோரோன்வரை செல்கின்றது.
6மேற்கு எல்லை மிக்மெத்தாத்துக்கு வடக்கே சென்று கிழக்கே தானத்து சீலோவுக்குத் திரும்பி, அதை யானோவாவுக்குக் கிழக்காகக் கடந்து,
7யானோவாவிலிருந்து அற்றரோத்து நகருக்கு இறங்கி, எரிகோவைத் தொட்டு யோர்தானில் முடிவடைகின்றது.
8இவ்வெல்லை தப்பூவாகிலிருந்து மேற்காக கானா நதிவரை ஏறிக் கடலில் முடிவடைகின்றது. இதுவே எப்ராயிம் மக்களின் குலத்தைச் சார்ந்த குடும்பங்களுக்குக் கிடைத்த உரிமைச் சொத்து.
9இதுவன்றி, எப்ராயிம் மக்களுக்கு மனாசேயின் மக்களின் உடைமைகளான நகர்களுக்கும் அவற்றின் சிற்றூர்களுக்கும் நடுவில் நகர்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
10அவர்கள் கெசேரில் வாழ்ந்து வந்த கானானியரை வெளியேற்றவில்லை. ஆகையால் இன்றும் கானானியர் எப்ராயிம் நடுவில் அடிமைகளாக வேலைசெய்து வாழ்ந்து வருகின்றனர்.

16:10 நீத 1:29.