காலம் அறிந்து பேசுதல்

1தவறான நேரத்தில்

கண்டிப்போரும் உண்டு;

அமைதி காத்து ஞானி

ஆனோரும் உண்டு.

2உள்ளே புகைந்து

கொண்டிருப்பதைவிடக்

கண்டிப்பது மேல்.

3தங்கள் குற்றங்களை

ஏற்றுக்கொள்வோர்

தோல்வியிலிருந்து

விடுவிக்கப்பெறுவர்.

4கட்டாயத்தின்பேரில் ஒருவர்

நீதியானதைச் செய்வது

ஓர் அண்ணகன் ஒரு சிறுமியை

கற்பழிக்க விரும்புவதற்கு

இணையாகும்.

5அமைதி காப்போர் ஞானியராக

எண்ணப்படுகின்றனர்;

வாயாடிகள் வெறுப்புக்கு

ஆளாகின்றனர்.

6எதைப்பேசுவது எனத் தெரியாமல்

அமைதியாய் இருப்போரும் உண்டு;

எப்போது பேசுவது எனத் தெரிந்தவராய்

அமைதி காப்போரும் உண்டு.

7ஞானியர் தக்க நேரம்

வரும் வரை அமைதி காப்பர்;

வீண் பெருமை பேசும் மூடர்

சரியான நேரத்தைத் தவறவிடுவர்.

8மட்டு மீறிப் பேசுவோர்

அருவருப்புக்கு ஆளாவார்;

அதிகாரத்தைத் தவறாகப்

பயன்படுத்துவோர் வெறுக்கப்படுவர்.

முரண்பாடு

9தீமை நன்மையாக

மாறுவதும் உண்டு;

நல்வாய்ப்பு இழப்புக்கு

இட்டுச் செல்வதும் உண்டு.

10உனக்குப் பயன் அளிக்காத

கொடையும் உண்டு;

இரட்டிப்பாகத் திருப்பிக்

கொடுக்க வேண்டிய

கொடைகளும் உண்டு.

11பெருமை நாடி வீழ்ச்சி

அடைந்தோர் உண்டு;

தாழ்நிலையிலிருந்து உயர்நிலை

அடைந்தோரும் உண்டு.

12நிறைந்த பொருளைக்

குறைந்த விலைக்கு வாங்கக்

கருதி ஏழு மடங்கு மிகுதியாகக்

கொடுத்து வாங்குவோரும் உண்டு.

13ஞானிகள் தங்கள் சொற்களால்

தங்களை அன்புக்குரியோர் ஆக்கிக்

கொள்ளுகின்றார்கள்; மூடரின்

இச்சகம் வீணாகின்றது.

14அறிவிலிகளின் கொடை

உனக்கு ஒன்றுக்கும் உதவாது;

அது அவர்களுக்கே பன்மடங்கு

பெரிதாய்த் தெரிகிறது.

15அவர்கள் குறைவாகக் கொடுப்பார்கள்;

நிறைய திட்டுவார்கள்.

முரசறைவோர் போன்று

அதுபற்றிப் பேசுவார்கள்.

இன்று கடன் கொடுப்பர்;

நாளையே அதைத்

திருப்பிக்கேட்பர்.

இத்தகையோர் வெறுப்புக்கு

உரியோர்.

16‘எனக்கு நண்பர்கள் இல்லை;

நான் செய்த நற்செயல்களுக்கு

எவரும் நன்றி காட்டுவதில்லை’

என அறிவிலிகள் சொல்லிக்

கொள்வார்கள்.

17அவர்கள் அளிக்கும் உணவை

அருந்தியவாறே அவர்களைப்பற்றி

இழிவாய்ப் பேசுவார்கள்;

பல நேரங்களில் அவர்களை

எள்ளி நகையாடுவார்கள்.

பொருந்தாப் பேச்சு

18நாவினில் தடுமாறுவதைவிட

நடைபாதையில் தடுமாறி

விழுவதுமேல்; தீயவர்களின்

வீழ்ச்சி திடீரென்று ஏற்படும்.

19பண்பற்றோர் பொருத்தமற்ற

கதையைப் போன்றோர்;

அறிவற்றோரின் வாயில் அது

தொடர்ந்து இருக்கும்.

20மூடர்களின் வாயினின்று

வரும் பழமொழிகள்

ஏற்றுக்கொள்ளப்படா;

காலம் அறிந்து அவர்கள்

அவற்றைச் சொல்வதில்லை.

21வறுமையினால்

பாவம் செய்வதினின்று

தடுக்கப்படுவோர் உண்டு;

அவர்கள் மனவுறுத்தலின்றி

ஓய்வு கொள்வார்கள்.

22தன்மானம் இழக்கும் நேரத்தில்

உயிர் நீப்போர் உளர்;

மூடர்பொருட்டு அழிவோரும்

உண்டு.

23வெட்கம் தாங்காமல் சிலர்

தங்கள் நண்பர்களுக்கு

உறுதிமொழி வழங்குகின்றனர்;

காரணமின்றி அவர்களைப்

பகைவர் ஆக்கிக்கொள்கின்றனர்.

பொய்

24பொய் பேசுதல் மனிதருக்கு

அருவருக்கத்தக்க

கறை ஆகும்;

அறிவற்றோரின் வாயிலிருந்து

அது ஓயாது வெளிப்படும்.

25பொய் சொல்லும் பழக்கம்

கொண்டவரை விடத் திருடன்

மேலானவன்; இருவருமே

அழிவை உரிமையாக்கிக்கொள்வர்.

26பொய்யரின் நடத்தை இகழ்ச்சிக்கு

இட்டுச்செல்லும்;

அவர்களின் வெட்கக்கேடும்

அவர்களோடு எப்போதும் இருக்கும்.

ஞானியர்

27ஞானியர் தங்கள் சொற்களால்

முன்னேற்றம் அடைவர்;

முன்மதி கொண்டோர்

பெரியார்களை மகிழ்விக்கின்றனர்.

28நிலத்தில் பாடுபடுவோர்

நிறைந்த விளைச்சல் பெறுவர்;

பெரியார்களுக்கு வேண்டியோர்

அநீதி புரிந்திருந்தாலும் தப்பிவிடுவர்.

29சலுகைகளும் அன்பளிப்புகளும்

ஞானிகளின் கண்களைக்

குருடாக்கும்;

கடிவாளமிட்ட வாய்போல்

அவை கண்டனங்களைத்

தவிர்த்துவிடும்.

30மறைந்து கிடக்கும் ஞானம்,

கண்ணுக்குத் தெரியாத

புதையல் ஆகியவற்றால்

கிடைக்கும் பயன் என்ன?

31தங்கள் ஞானத்தை மறைத்து

வைக்கும் மனிதரைவிடத்

தங்களது மடமையை மூடி

மறைக்கும் மானிடர் மேலானோர்.


20:1 சஉ 3:7; ஆமோ 5:13. 20:11 மத் 23:12. 20:18 நீமொ 12:13. 20:28 நீமொ 12:11.