முகவுரை

1-14திருச்சட்டம், இறைவாக்கு நூல்கள், அவற்றைத் தொடர்ந்து வரும் ஏடுகள் வழியாகப் பல சிறந்த படிப்பினைகள் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. அவை காட்டும் நற்பயிற்சிக்காகவும் ஞானத்துக்காகவும் இஸ்ரயேலைப் புகழ்வது நமது கடமையாகும். அந்நூல்களைப் படிப்போர் அவற்றைப் புரிந்துகொண்டால் மட்டும் போதாது; கல்வியில் நாட்டம் கொண்டோர் என்னும் முறையில் தங்கள் பேச்சாலும் எழுத்தாலும் மற்றவர்களுக்கு உதவி செய்யவும் வேண்டும். எனவே, என் பாட்டனாராகிய ஏசு திருச்சட்டம், இறைவாக்கு நூல்கள், நம் மூதாதையர் எழுதிய மற்ற ஏடுகள் ஆகியவற்றை ஆழ்ந்து கற்பதில் ஆர்வம் காட்டினார்; அவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றபின் நற்பயிற்சி, ஞானம்பற்றி அவரே எழுதலானார். இவ்வாறு அவர் எழுதியவற்றின் துணைகொண்டு, கல்வியில் நாட்டம் கொண்டோர் திருச்சட்டத்திற்கு ஏற்ப வாழ்வதில் பெரும் முன்னேற்றம் காண்பர்.
15-26எனவே, நீங்கள் இந்நூலை நன்மனத்தோடும் கவனத்தோடும் படிக்குமாறு வேண்டுகிறேன். நான் மிகுந்த கருத்துடன் இந்த மொழிபெயர்ப்பைச் செய்திருந்தாலும், சில சொற்றொடர்களைச் சற்றுப் பிழைபட மொழிபெயர்த்திருக்கக்கூடும்.
19-24அதற்காக என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள்; ஏனெனில் மூலமொழியாகிய எபிரேயத்தில் சொல்லப்பட்டதைப் பிறிதொரு மொழியில் பெயர்த்து எழுதுகின்றபொழுது அது முதல் நூல் பொருளை உணர்த்துவதில்லை. இந்த நூலுக்கு மட்டுமன்று; திருச்சட்டம், இறைவாக்கு நூல்கள், மற்ற ஏடுகள் ஆகிய எல்லாவற்றுக்குமே இது பொருந்தும். இவற்றின் பொருள் மூலமொழியில் பெரும் அளவில் மாறுபடுகிறது.
27-35மன்னர் யூர்கெத்தின்* ஆட்சியின் முப்பத்தெட்டாம் ஆண்டில் நான் எகிப்துக்குச் சென்று அங்குச் சிறிது காலம் தங்கியிருந்தேன். அப்பொழுது மிகுதியாகக் கற்றுக்கொள்வதற்கு உகந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எனவே, நானே பெரும் முயற்சி எடுத்து உழைத்து இந்தநூலை மொழிபெயர்ப்பது முதன்மையான தேவை என்று உணர்ந்தேன். அப்போது மிகுந்த கருத்தோடும் திறமையோடும் செயல்புரிந்து அப்பணியை முடித்தேன். இவ்வாறு, வெளிநாடுகளில் வாழ்ந்துவருபவருள் படிப்பினைமீது நாட்டம் கொள்வோரும் திருச்சட்டத்தின்படி வாழ்வதற்கான நற்பயிற்சியில் ஈடுபடுவோரும் பயன் அடையும்பொருட்டு அதை வெளியிட்டுள்ளேன்.

0:27 ‘யூர்கெத்து’ என்னும் இக் கிரேக்கச் சொல்லுக்குப் புரவலர், வள்ளல் என்பது பொருள். இச்சிறப்புப் பெயர் பல மன்னர்களுக்கு வழங்கியது. இங்கு மன்னர் தாலமி VII (கி.மு. 170-117)-ஐக் குறிக்கிறது.