படையல்களின் ஒழுங்கு முறை
(விப 29:38-46)

1ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2நீ இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்; எனக்குரிய நேர்ச்சையை, நெருப்புப் பலியான உணவை, எனக்கு உகந்த நறுமணத்தைக் குறிக்கப்பட்ட காலத்தில் எனக்குப் படைப்பதில் நீங்கள் கருத்தாயிருக்க வேண்டும்.
3நீ அவர்களிடம் சொல்; நெருப்புப் பலியாக நீங்கள் ஆண்டவருக்குப் படைக்க வேண்டியது; அன்றாட எரிபலியாக எந்நாளும் செலுத்த ஒரு வயதுடைய பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகள்.
4இவற்றுள் ஒன்றைக் காலையிலும், மற்றதை மாலையிலும் பலியிட வேண்டும்.
5அத்துடன், உணவுப் படையலாக இருபதுபடி மரக்காலில்* பத்தில் ஒரு அளவு மிருதுவான மாவை அடித்துப் பிழியப்பட்ட கால் கலயம்** எண்ணெயுடன் பிசைய வேண்டும்.
6இது எந்நாளும் செலுத்தும் எரிபலி; இது ஆண்டவருக்குரிய நெருப்புப் பலியாகவும் உகந்த நறுமணமாகவும் சீனாய் மலையில் ஏற்படுத்தப்பட்டது.
7அத்துடன் ஒவ்வோர் ஆட்டுக்குட்டிக்கும் கால் கலயம் வீதம் நீர்மப் படையல் நீங்கள் செலுத்த வேண்டும்; ஆண்டவருக்கு நீர்மப் படையலாகத் திருஉறைவிடத்தில் மதுபானத்தை ஊற்ற வேண்டும்.
8மற்ற ஆட்டுக் குட்டியை நீங்கள் மாலையில் பலியிட வேண்டும். காலையிலுள்ள உணவுப் படையல் போன்றும், அதன் நீர்மப்படையல் போன்றும் அதை நெருப்புப் பலியாகவும் ஆண்டவருக்கு உகந்த நறுமணமாகவும் நீங்கள் படைக்க வேண்டும்.

ஓய்வுநாளின் படையல்

9ஓய்வு நாளில், ஒரு வயதுடைய இரண்டு ஆட்டுக்குட்டிகளையும் உணவுப் படையலாக எண்ணெயில் பிசைந்த இருபதுபடி மரக்காலில் பத்தில் இரண்டு அளவு மிருதுவான மாவையும், அத்துடன் நீர்மப் படையலையும் செலுத்த வேண்டும்.
10எந்நாளும் செலுத்தும் எரிபலியும் நீர்மப் படையலும் நீங்கலாக இது ஒவ்வோர் ஓய்வு நாளிலும் செலுத்தப்பட வேண்டிய எரிபலி ஆகும்.

மாதப் பிறப்பின் படையல்

11மாதத் தொடக்கத்தில் எரிபலியாக நீங்கள் ஆண்டவருக்குச் செலுத்த வேண்டியவை; இளங்காளைகள் இரண்டு; ஆட்டுக் கிடாய் ஒன்று; ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் ஏழு; இவை பழுதற்றவையாக இருக்க வேண்டும்.
12அவற்றுடன், உணவுப் படையலுக்காகக் காளை ஒவ்வொன்றுக்கும் எண்ணெயில் பிசைந்த இருபதுபடி மரக்காலில் பத்தில் மூன்று அளவு மெல்லிய மாவு; உணவுப் படையலுக்காக ஆட்டுக் கிடாய் ஒன்றுக்கு எண்ணெயில் பிசைந்த பத்தில் இருபங்கு மெல்லிய மாவு;
13உணவுப் படையலுக்காக ஆட்டுக்குட்டி ஒவ்வொன்றுக்கும் எண்ணெயில் பிசைந்த பத்திலொரு பங்கு மெல்லிய மாவு. இவை எரிபலிக்காகவும் ஆண்டவருக்கு உகந்த நறுமணமான நெருப்புப் பலிக்காகவும் இருக்க வேண்டியவை.
14அவற்றின் நீர்மப் படையல்களுக்கான திராட்சை இரசம் காளை ஒன்றுக்கு அரைக் கலயம், ஆட்டுக்கிடாய் ஒன்றுக்கு மூன்றிலொரு கலயம், ஆட்டுக்குட்டி ஒன்றுக்கு கால் கலயம் என்ற அளவில் இருக்க வேண்டும். இது ஆண்டில் எல்லா மாதங்களிலும் ஒவ்வொரு மாதத்திற்கும் உரிய எரி பலி.
15எந்நாளும் செலுத்தப்படும் எரிபலியும், நீர்மப் படையலும் நீங்கலாகப் பாவம் போக்கும் பலியாக ஆண்டவருக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாய் செலுத்த வேண்டும்.

புளிப்பற்ற அப்பத் திருநாளின் படையல்கள்
(லேவி 23:5-14)

16முதல் மாதத்தின் பதினான்காம் நாள் ஆண்டவரின் பாஸ்கா.
17இந்த மாதத்தின் பதினைந்தாம் நாள் திருவிழா. ஏழுநாள்களும் புளிப்பற்ற அப்பமே உண்ண வேண்டும்.
18முதல் நாளில் திருப்பேரவை கூட்டப்படும். கடின வேலை ஏதும் நீங்கள் செய்யக்கூடாது.
19ஆனால், நெருப்புப் பலியொன்றை, எரிபலியொன்றை ஆண்டவருக்குச் செலுத்த வேண்டும். இதற்கு வேண்டியவை இளங்காளைகள் இரண்டு, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் ஏழு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.
20அத்துடன் உணவுப் படையலாக எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு, காளை ஒன்றுக்கு ஆறு படியும், வெள்ளாட்டுக்கிடாய் ஒன்றுக்கு நான்கு படி அளவு வீதம் நீங்கள் படைக்க வேண்டும்.
21ஏழு ஆட்டுக் குட்டிகளில் ஒவ்வொன்றுக்கும் இரண்டு படி அளவு வீதம் படைக்க வேண்டும்.
22இத்துடன் உங்களுக்குக் கறைநீக்கம் செய்யப் பாவம் போக்கும் பலியாகச் செலுத்த வேண்டிய ஒரு வெள்ளாட்டுக்கிடாய்.
23எந்நாளும் செலுத்தும் எரிபலியாக, காலை தோறும் செலுத்தும் எரிபலி நீங்கலாக, இவற்றை நீங்கள் செலுத்த வேண்டும்.
24நாள்தோறும் இதே முறையில் ஏழு நாள்களுக்கும் நெருப்புப் பலியாகிய உணவை, ஆண்டவருக்கு உகந்த நறுமணத்தை நீங்கள் படைக்க வேண்டும். இது எந்நாளும் செலுத்தும் எரி பலியும் நீர்மப் படையலும் நீங்கலாகப் படைக்க வேண்டியது.
25ஏழாம் நாள் உங்களுக்குத் திருப்பேரவை நாள். நீங்கள் கடினமான வேலை ஏதும் செய்யக்கூடாது.

அறுவடைவிழாப் படையல்கள்
(லேவி 23:15-22)

26வாரங்களின் விழாவில் முதற்பலன்களின் நாளன்று புதுத் தானியத்திலிருந்து நீங்கள் ஆண்டவருக்கு உணவுப் படையல் படைக்கும் போதும் உங்களுக்குத் திருப்பேரவை இருக்கும்; கடினமான வேலை ஏதும் நீங்கள் செய்யக்கூடாது.
27ஆண்டவருக்கு உகந்த நறுமணமாக எரிபலியொன்றைச் செலுத்துவீர்கள். இதற்கு வேண்டியவை; இளங்காளைகள் இரண்டு, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதான ஆட்டுக்குட்டிகள் ஏழு.
28அத்துடன் உணவுப் படையலாக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவு, காளை ஒன்றுக்கு ஆறுபடியும் ஆட்டுக்கிடாய் ஒன்றுக்கு நான்குபடி அளவில் இருக்கும்.
29ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றுக்கும் இரண்டு படி என்ற அளவில் இருக்கும்.
30மேலும், உங்களுக்குக் கறை நீக்கம் செய்ய வெள்ளாட்டுக் கிடாய் ஒன்று தேவை.
31இவையும், இவற்றின் இனப் படையலும், எந்நாளும் செலுத்தும் எரிபலியும், அதன் உணவுப் படையலும் நீங்கலாக, நீங்கள் படைக்க வேண்டும். இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.

28:16 விப 12:1-13; இச 16:1-2. 28:17-25 விப 12:14-20; 23-15; 34:18; இச 16:3-8. 28:26-31 விப 23:16; 34:22; இச 16:9-12.
28:5 * பத்திலொரு ‘ஏப்பா’. 28:5 ** கால் ‘கீன்’.