குருக்கள், லேவியர் கடமைகள்

1பின்னர், ஆண்டவர் ஆரோனிடம் கூறியது: நீயும் உன் புதல்வரும் உன்னோடிருக்கும் உன் மூதாதையர் வீட்டாரும் திருஉறைவிடம் தொடர்பான குற்றத்தைச் சுமப்பீர்கள்; உங்கள் குருத்துவம் தொடர்பான குற்றத்தையோ நீயும் உன்னோடிருக்கும் உன் புதல்வரும் சுமப்பீர்கள்.
2மூதாதையர் குலமான லேவிக் குலத்திலுள்ள உன் சகோதரரையும் உன்னுடன் கூட்டிக்கொண்டு வர வேண்டும்; அவர்கள் உங்களோடு சேர்ந்து, நீயும் உன்னோடிருக்கும் உன் புதல்வரும் உடன்படிக்கைக்கூடாரத்தின் முன்நிற்கும்போது உங்களுக்கு உதவி செய்யட்டும்.
3அவர்கள் உங்களுக்கு உதவி செய்து, கூடாரத்தின் அனைத்துக் கடமைகளையும் கவனித்துக் கொள்வார்கள்; ஆனால்,நீங்களும் அவர்களோடு சாகாதபடி, திருஉறைவிடத்தின் பாத்திரங்களையோ பலிபீடத்தையோ அவர்கள் நெருங்குமாறு அனுமதிக்க வேண்டாம்.
4அவர்கள் உங்களோடு சேர்ந்து சந்திப்புக்கூடாரத்தையும் கூடாரத்தின் அனைத்து வேலைகளையும் கவனித்துக் கொள்வார்கள்; வேறு எவரும் உங்களருகில் வரலாகாது.
5இஸ்ரயேல் மக்கள் மேல் இனி என்றுமே சினம் இராதபடி திருஉறைவிடத்தின் கடமைகளையும் பலிபீடத்தின் கடமைகளையும் நீங்களே கவனித்துக்கொள்ள வேண்டும்.
6இதோ! உங்கள் சகோதரராகிய லேவியரை இஸ்ரயேல் மக்களிலிருந்து நான் தெரிந்தெடுத்தேன்; சந்திப்புக்கூடார வேலை செய்ய அவர்கள் உங்களுக்கென ஆண்டவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட கொடை ஆவர்.
7நீயும் உங்களோடிருக்கும் உன் புதல்வரும் உங்கள் குருத்துவத்திற்கு உரியதை, அதாவது பலிபீடம் தொடர்பான அனைத்தையும் தொங்கு திரைக்குள் இருப்பதையும் கவனித்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பணிபுரியும்படி உங்கள் குருத்துவத்தையும் ஒரு கொடையாகவே தருகிறேன்; அவற்றை நெருங்குகிற வேறு எவனும் கொல்லப்படுவான்.

குருக்களின் பங்கு

8மேலும், ஆண்டவர் ஆரோனிடம் கூறியது: இதோ எனக்கென உயர்த்திப் படைக்கப்படும் படையல்களில் உன் பொறுப்பில் காக்கப்படும் எதையும், அதாவது இஸ்ரயேல் மக்களின் அர்ப்பணிக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் உங்களுக்குத் தந்து விட்டேன்; இது உனக்கும் உன்புதல்வருக்கும் என்றுமுள்ள நியமமாக விளங்கும்.
9நெருப்புக்குட்படாத மிகப் புனிதமான பொருள்களில் உனக்குரியது இதுவே: அவர்கள் எனக்கு அர்ப்பணிக்கிற அவர்களின் படையல், உணவுப் படையல், பாவம் போக்கும் படையல், குற்ற நீக்கப்படையல் ஒவ்வொன்றும் உனக்கும் உன் புதல்வருக்கும் மிகவும் புனிதமானவை.
10மிகவும் தூய்மையான தலத்தில் நீ அதனை உண்பாய்; ஆண்மகன் ஒவ்வொருவனும் அதனின்று உண்ணலாம்; அது உனக்குப் புனிதமானது.
11இஸ்ரயேல் மக்கள் உயர்த்திப் படைக்கும் படையல்களும் அவர்களின் அனைத்து ஆரத்திப் படையல்களும் உன்னுடையவையே; இது உனக்கும் உன்னோடிருக்கும் உன் புதல்வர் புதல்வியருக்கும் என்றுமுள நியமமாக விளங்கும். உன் வீட்டில் தீட்டுப்படாத ஒவ்வொருவரும் அதிலிருந்து உண்ணலாம்.
12உயர்தர எண்ணெய், உயர்தரத் திராட்சை இரசம், உயர்தரத் தானியம் அனைத்தையும் அவர்கள் ஆண்டவருக்குச் செலுத்தும் முதற்பலன்களையும் நான் உனக்குத் தருகிறேன்.
13அவர்களது நிலத்தின் முதற்கனிகளாக அவர்கள் ஆண்டவரிடம் கொண்டு வரும் அனைத்தும் உன்னுடையதே; உன் வீட்டில் தீட்டுப்படாத ஒவ்வொருவரும் அதிலிருந்து உண்ணலாம்.
14இஸ்ரயேலில் அர்ப்பணிக்கப்பட்ட பொருள் ஒவ்வொன்றும் உன்னுடையதாக இருக்கும்.
15மனிதராயினும் விலங்காயினும் முதலில் கருப்பை திறக்கும் அனைத்திலும் அவர்கள் ஆண்டவருக்குப் படைக்கின்ற ஒவ்வொன்றும் உன்னுடையது; ஆயினும், மனிதரில் தலைப்பேறானவனை நீ மீட்டுக்கொள்வாய்; தீட்டான விலங்கின் தலையீற்றையும் நீ மீட்க வேண்டும்.
16ஒரு மாத காலத்தில் நீ அவற்றை மீட்கும்போது அவற்றின் மீட்புத்தொகை தூயகச் செக்கேல் நிறைப்படி ஐந்து வெள்ளிக் காசுகள் என்று விலை குறிப்பாய்; அது பன்னிரண்டு கிராம் ஆகும்.
17ஆனால், மாடு, ஆடு, வெள்ளாடு இவற்றின் தலையீற்றை நீ மீட்க வேண்டாம்; அவை புனிதமானவை. அவற்றின் இரத்தத்தை நீ பலிபீடத்தின்மேல் தெளிப்பாய்; அவற்றின் கொழுப்பை நெருப்புப் பலியாக்குவாய்; அது ஆண்டவருக்கு உகந்த நறுமணமாக விளங்கும்.
18ஆரத்திப் படையலாக அளிக்கப்படும் இறைச்சியான அவற்றின் மார்பகமும் முன்னந்தொடையும் உன்னைச் சேரும்.
19இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் புனிதப்படையல்கள் அனைத்தையும் நான் உனக்கும் உன்னோடிருக்கும் உன் புதல்வர் புதல்வியருக்கும் என்றுமுள நியமமாகத் தருகிறேன்; இது உனக்கும் உன்னோடிருக்கும் உன்வழி மரபுக்கும் ஆண்டவர் திருமுன் என்றுமுள “உப்பு உடன்படிக்கை” ஆகும்.
20மேலும், ஆண்டவர் ஆரோனிடம் கூறியது: அவர்கள் நாட்டில் உனக்கு உரிமைச் சொத்து ஏதுமில்லை, அவர்களிடையே உனக்குப் பங்கும் இல்லை; இஸ்ரயேல் மக்களிடையே உனக்குப் பங்கும் உரிமைச் சொத்தும் நானே.
21இஸ்ரயேலின் பத்திலொன்று அனைத்தையும் லேவியருக்கு உரிமைச் சொத்தாகத் தந்திருக்கிறேன்; சந்திப்புக் கூடாரப் பணியில் அவர்கள் ஏற்கும் பங்கிற்கு இதுவே கைம்மாறு,
22இது முதல் இஸ்ரயேல் மக்கள் சந்திப்புக் கூடாரத்தருகில் வர வேண்டாம்; வந்தால் அவர்கள் பாவம் சுமந்து மாள்வர்.
23ஆனால், லேவியர் சந்திப்புக்கூடாரத்தில் பணி செய்வர்; அவர்கள் குற்றம் அவர்கள் மேலேயே இருக்கும்; உங்கள் தலைமுறைதோறும் இது என்றுமுள நியமமாக விளங்கும்; இஸ்ரயேல் மக்களிடையே அவர்களுக்கு உரிமைச் சொத்தாக ஏதுமில்லை.
24இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் படையலின் பத்தில் ஒன்றை நான் லேவியருக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்தேன்; எனவே, இஸ்ரயேல் மக்களிடையே அவர்களுக்கு உரிமைச் சொத்து ஏதுமில்லை என்று அவர்களைக் குறித்துக் கூறினேன்.

லேவியர்க்குரிய பத்திலொரு பங்கு

25பின்னர், ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
26நீ லேவியரிடம் சொல்ல வேண்டியது: “நான் இஸ்ரயேல் மக்களிடமிருந்து உங்களுக்கு உரிமைச் சொத்தாகத் தந்த பத்திலொன்றை அவர்களிடமிருந்து நீங்கள் எடுக்கும்போது, நீங்களும் அதிலிருந்து ஒரு படையலை, அதாவது, பத்திலொன்றிலிருந்து பத்திலொன்றை ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்க வேண்டும்.
27அவ்வாறளிக்கும் உங்கள் படையல் போரடிக்கும் களத்தின் தானியமாகவும் திராட்சைப் பழ ஆலையின் இரசமாகவும் கருதப்படும்.
28அப்படியே நீங்களும் இஸ்ரயேல் மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளுகின்ற உங்கள் பத்திலொன்று அனைத்திலுமிருந்து ஒரு படையலை ஆண்டவருக்கு உயர்த்திப் படைப்பீர்கள்; இவ்வாறு வரும் ஆண்டவரின் படையலை குரு ஆரோனுக்குக் கொடுப்பீர்கள்.
29உங்களுக்கு வரும் கொடைகள் அனைத்திலும் மிகச் சிறந்ததும் தூய்மையானதுமானவற்றை ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் படையலாக அளிக்க வேண்டும்.
30எனவே, நீ அவர்களிடம் சொல்ல வேண்டியது, “அதிலிருந்து மிகச் சிறப்பானதை நீங்கள் படைத்தபின் மீதியானது லேவியருக்குப் போரடிக்கும் களத்தினின்றும் திராட்சைப் பழ ஆலையினின்றும் வர வேண்டியவையாகக் கருதப்படும்;
31அதனை எவ்விடத்திலும் நீங்களும் உங்கள் வீட்டாரும் உண்ணலாம்; அது சந்திப்புக்கூடாரத்தில் நீங்கள் செய்யும் பணிக்காக வரும் கைம்மாறு ஆகும்.
32நீங்கள் அதில் மிகச் சிறப்பானதை படைப்பதால் இந்தக் காரியத்தில் உங்கள்மேல் பாவம் இராது; நீங்கள் இஸ்ரயேல் மக்களின் புனிதப் பொருள்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள், இல்லையேல் சாவீர்கள்.

18:14 லேவி 27:28. 18:21 லேவி 27:32-33; இச 14:22-29.