1லெபனோனே! உன் வாயில்களைத்

திறந்துவை; நெருப்பு உன் கேதுரு

மரங்களைச் சுட்டெரிக்கட்டும்.

2தேவதாரு மரங்களே!

புலம்பியழுங்கள்;

ஏனெனில், கேதுரு மரங்கள்

வீழ்த்தப்பட்டன;

ஓங்கி வளர்ந்த மரங்கள் பாழாயின;

பாசான் நாட்டுக் கருவாலி மரங்களே!

புலம்பியழுங்கள்;

ஏனெனில், அடர்ந்த காடு

வெட்டி வீழ்த்தப்பட்டது.

3அவர்கள் அலறியழும் குரல் கேட்கின்றது;

ஏனெனில் அவர்களின் மேன்மை

பாழ்படுத்தப்பட்டது;

இளம் சிங்கங்களின் கர்ச்சனை

கேட்கின்றது;

ஏனெனில், யோர்தானின் காடு

அழிக்கப்பட்டது.

ஆயர் இருவர்

4என் கடவுளாகிய ஆண்டவர் கூறியது இதுவே: வெட்டுவதற்கு குறிக்கப்பட்ட ஆடுகளை மேய்ப்பாயாக!
5விலைக்கு வாங்குவோர் அவற்றைக் கொன்றுவிடுவர்; ஆயினும் குற்றப்பழி அவர்கள் மீது சுமத்தப்படாது. அவற்றை விற்பவர்களோ, “ஆண்டவர் போற்றி! போற்றி! எங்களுக்குச் செல்வம் சேர்ந்தது” என்று சொல்கிறார்கள். ஆனால் ஆயர்கள் அவற்றின்மீது இரக்கம் காட்டவில்லை.
6“இனிமேல் நான் உலகில் வாழ்வோர்க்கு இரக்கம் காட்ட மாட்டேன்,” என்கிறார் ஆண்டவர். இதோ! மனிதர் ஒவ்வொருவரையும் அவரவர் அடுத்திருப்பார் கையிலும் அரசர்களின் கையிலும் சிக்கும்படி ஒப்புவிக்கப் போகிறேன். அவர்கள் நாட்டை அழித்தொழிப்பார்கள். அவர்கள் கையிலிருந்து நான் யாரையும் தப்புவிக்கமாட்டேன்.
7அவ்வாறே நான் வெட்டுவதற்குக் குறிக்கப்பட்ட ஆடுகளை வணிகருக்காக மேய்க்கின்ற ஆயனானேன்; நான் இரு கோல்களைக் கையிலெடுத்து, ஒன்றிற்கு ‘இனிமை’ என்றும், மற்றதற்கு ‘ஒன்றிப்பு’ என்றும் பெயரிட்டு அம்மந்தையை மேய்த்துவந்தேன்.
8ஒரே மாதத்தில் நான் மூன்று ஆயர்களை ஒழித்து விட்டேன்; நான் அவர்களைப் பொறுத்தமட்டில் பொறுமை இழந்து விட்டேன்; அவர்களும் என்னை வெறுத்தார்கள்.
9அப்போது, “இனி நான் உங்களை மேய்க்கப்போவதில்லை; சாவது சாகட்டும்; அழிவது அழியட்டும்; மீதியிருப்பவை ஒன்றை ஒன்று கடித்துத் தின்னட்டும்’
10என்று நான் சொன்னேன். ‘இனிமை’ என்ற என் கோலை எடுத்து, மக்களினங்கள் அனைத்தோடும் நான் செய்து கொண்ட உடன்படிக்கை முறியும்படி அதை முறித்துப் போட்டேன்.
11அன்றே அந்த உடன்படிக்கை முறிந்து போயிற்று. அவ்வாறே என்னைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஆட்டுவணிகரும் அது ஆண்டவரின் வாக்கு என்பதை உணர்ந்து கொண்டனர்.
12அப்போது நான் அவர்களை நோக்கி, ‘உங்களுக்குச் சரி என்று தோன்றினால் என் கூலியைக் கொடுங்கள்; இல்லையேல் கொடுக்க வேண்டாம், விடுங்கள்’ என்றேன். அவர்கள் எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசுகளைக் கொடுத்தார்கள்.
13ஆண்டவர் என்னிடம், “கருவூலத்தை* நோக்கி அதைத் தூக்கி எறி; இதுதான் அவர்கள் எனக்கு அளித்த சிறந்த மதிப்பீடு!” என்றார். அவ்வாறே நான் அந்த முப்பது வெள்ளிக் காசுகளையும் கையிலெடுத்து ஆண்டவரின் இல்லத்திலிருந்த கருவூலத்தில் எறிந்துவிட்டேன்.
14யூதாவுக்கும் இஸ்ரயேலுக்கும் இடையே இருந்த சகோதர ஒருமைப்பாடு முறியும்படி ‘ஒன்றிப்பு’ என்ற இரண்டாம் கோலையும் நான் ஒடித்துப் போட்டேன்.
15பின்பு ஆண்டவர் என்னை நோக்கி, “அறிவற்ற ஆயன் ஒருவனின் கருவிகளை இன்னொருமுறை எடுத்துக்கொள்” என்றார்.
16ஏனெனில் இதோ நாட்டில் ஆயன் ஒருவனை எழுப்புவேன்; அவன் அழிந்து போவதைக் காப்பாற்றமாட்டான். சிதறிப் போவதைத் தேடித் திரியமாட்டான்; எலும்பு முறிந்ததைக் குணப்படுத்தமாட்டான்; நலமாயிருப்பதற்கு உணவு கொடுக்க மாட்டான்; ஆனால் கொழுத்ததின் இறைச்சியைத் தின்பான்; அவற்றின் குளம்புகளைக்கூட நறுக்கிப் போடுவான்.

17ஆடுகளைக் கைவிடுகிற பயனற்ற

என் ஆயனுக்கு ஐயோ கேடு!

அவனுடைய கைமேலும்

வலக்கண் மேலும்

வாள் வந்து விழட்டும்;

அவனது கை முற்றிலும்

சூம்பிப் போகட்டும்;

அவனது வலக்கண் இருண்டு

முற்றிலும் குருடாகட்டும்.


11:12 மத் 26:15. 11:12-13 மத் 27:9-10.
11:13 ‘குயவர் நிலம்’ என்பது எபிரேய பாடம். (மத் 27:9-10).