1“ஆனால் நான், மேதியனான தாரியுவின் முதல் ஆண்டிலிருந்தே அவனைத் திடப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் அவனுக்கு அருகில் நின்றேன்.”
2“இப்பொழுது, நான் உனக்கு உண்மையை வெளிப்படுத்துகிறேன்; இதோ! இன்னும் மூன்று மன்னர்கள் பாரசீகத்தில் அரியணை ஏறுவார்கள்; நான்காம் அரசன் மற்ற எல்லாரையும் விடப் பெருஞ் செல்வம் படைத்தவனாய் இருப்பான். அவன் தன் செல்வத்தால் வலிமை பெற்ற பிறகு, கிரேக்க அரசுக்கு எதிராக எல்லாரையும் தூண்டியெழுப்புவான்.
3பிறகு வலிமைமிக்க அரசன் ஒருவன் தோன்றி, மிகுதியான ஆற்றலோடு அரசாண்டு, தான் விரும்பியதை எல்லாம் செய்வான்.
4அவன் உயர்நிலை அடைந்தபின், அவனது அரசு சிதைக்கப்பெற்று, வானத்தின் நான்கு திசையிலும் பிரிக்கப்படும்; ஆயினும் அது அவனுடைய வழிமரபினருக்குத் தரப்படாது. அவனது ஆட்சிக்காலத்திலிருந்த வலிமையும் அதற்கு இராது. ஏனெனில் அவர்களிடமிருந்து அவனுடைய அரசு பறிக்கப்பட்டு வேறு சிலருக்குப் பிரித்துக் கொடுக்கப்படும்.
5பின்பு தென்திசை மன்னன் வலிமை பெறுவான். ஆயினும் அவனுடைய படைத்தலைவர்களுள் ஒருவன் அவனை விட வலிமை பெற்று ஆட்சி செய்வான்; அவனது அரசும் மிகப் பெரியதாய் விளங்கும்.
6சில ஆண்டுகள் சென்றபின், அவர்கள் ஓர் உடன்படிக்கை செய்து கொள்வார்கள்; இந்தச் சமாதான உறவை உறுதிப்படுத்தத் தென்திசை மன்னனின் மகள் வடதிசை மன்னனிடம் வந்து சேர்வாள்; ஆனால் அவளது செல்வாக்கு நீடிக்காது; அவனும் அவனது வழிமரபும் அற்றுப் போவார்கள். அவளும் அவளை அழைத்துவந்தவரும், அவளைப் பெற்றவனும், அவளைக் கைப்பிடித்தவனும் கைவிடப்படுவார்கள்.
7அந்நாள்களில் அவளுடைய வேர்களிலிருந்து அவனது இடத்தில் ஒரு முளை தோன்றும். அவ்வாறு தோன்றுபவன் பெரும் படையுடன் வந்து, வடதிசை மன்னனின் கோட்டைக்குள் புகுந்து அவர்களைத் தாக்கி முறியடிப்பான்.
8அவர்களுடைய தெய்வங்களையும் சிலைகளையும் விலையுயர்ந்த வெள்ளி, பொன் பாத்திரங்களையும் எகிப்துக்குக் கொண்டு போவான்; சில காலத்திற்கு வடதிசை மன்னன் மேல் படையெடுக்காமல் இருப்பான்.
9பின்பு, வடதிசை மன்னன் தென்திசை மன்னனது நாட்டின்மேல் படையெடுத்து வருவான்; ஆனால் அவன் தன் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்.
10பிறகு அவனுடைய மைந்தர்கள் திரளான, வலிமைமிக்க படையைத் திரட்டிக்கொண்டு வருவார்கள்; அவர்கள் பெருவெள்ளம் போலத் திடீரெனப் பாய்ந்துவந்து மீண்டும் தென்னவனின் கோட்டைவரை சென்று போரிடுவார்கள்.
11அப்பொழுது தென்திசை மன்னன் வெகுண்டெழுந்து புறப்பட்டுப்போய் வடதிசை மன்னனோடு போரிடுவான். வடநாட்டான் பெரியதொரு படை திரட்டியிருந்தும், அப்படை பகைவன் கையில் அகப்படும்.
12அப்படையைச் சிறைப்பிடித்ததால் தென்னவன் உள்ளம் இறுமாப்புக் கொள்ளும். பல்லாயிரம் பேரை அவன் வீழ்த்துவான்; ஆயினும் அவன் முழு வெற்றி அடையமாட்டான்.
13ஏனெனில் வடதிசை மன்னன் முன்னதைவிடப் பெரிய படையை மீண்டும் திரட்டுவான்; சில ஆண்டுகளுக்குப் பிறகு அவன் திடீரெனப் பெரிய படையோடும் மிகுந்த தளவாடங்களோடும் தாக்க வருவான்.
14அக்காலத்தில் தென்திசை மன்னனுக்கு எதிராகப் பலர் எழும்புவர். உன் சொந்த இனத்தாரின் மக்களுள் வன்முறையில் ஈடுபடுகிறவர்களும் காட்சியை நிறைவேற்றும்படி எழும்புவார்கள். ஆனால் அவர்கள் தோல்வியுறுவார்கள்.
15வடதிசை மன்னன் வந்து முற்றுகையிட்டு நன்கு அரண் செய்யப்பட்ட நகரத்தைக் கைப்பற்றுவான்; தென்னகப் படைகள் எதிர்க்க வலிமையற்றுப் போகும்; அப்படைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களும் எதிர்த்து நிற்க முடியாது போவார்கள்; ஏனெனில் அவர்களிடம் வலிமையே இராது.
16வடதிசை மன்னன் தென்திசை மன்னனுக்கு எதிராகப் புறப்பட்டுவந்து தன் மனம் போலச் செய்வான்; அவனை எதிர்த்து நிற்பவன் எவனும் இல்லை; சிறப்புமிக்க நாட்டினுள் நுழைந்து அது முழுவதையும் தன் ஆட்சிக்கு உட்படுத்துவான்.
17அவன் முழு அரசின் வலிமையோடு படையெடுக்கத் திட்டமிடுவான்; ஆகவே தென்திசை மன்னனோடு நட்புக் கொண்டாடுவது போல நடித்து, அவனை வஞ்சகமாய் ஒழித்துக் கட்டும்படித் தன் புதல்வியருள் ஒருத்தியை அவனுக்கு மணம் செய்து கொடுப்பான்; ஆனால் அவன் நினைத்தது நிறைவேறாது; அந்த நாடும் அவனுக்குச் சொந்தமாகாது.
18பிறகு அவன் தன் கவனத்தைக் கடலோர நாடுகள் மேல் திருப்பி, அவற்றுள் பலவற்றைப் பிடிப்பான்; ஆனால் படைத் தலைவன் ஒருவன் அவன் திமிரை அடக்கி அத்திமிர் அவனையே அழிக்கும்படி செய்வான்.
19ஆகையால் அவன் தன் சொந்த நாட்டின் கோட்டைக்குள் திரும்பிவிட முடிவுசெய்வான்; ஆனால் அவன் தடுமாறி விழுந்து அடையாளமின்றி அழிந்து போவான்.
20நாட்டின் செழிப்பான பகுதிகளுக்கு வரிவசூலிப்பவனை அனுப்பும் வேறொருவன் அவனுக்குப் பதிலாகத் தோன்றுவான். அவன் எவரது சினத்தின் காரணமாகவோ போர் முனையிலோ சாகாமல், தானே மடிந்து போவான்.
21அவனது இடத்தில் இழிந்தவன் ஒருவன் எழும்புவான்; அவனுக்கு எவ்வித அரசுரிமையும் கிடையாது; ஆயினும் எதிர்பாராத நேரத்தில் வந்து முகப்புகழ்ச்சியால் அரசைக் கைப்பற்றிக் கொள்வான்.
22அவனை எதிர்த்துப் போர் புரியும் படை தோல்வியடைந்து நசுக்கப்படும். அவ்வாறே உடன்படிக்கை செய்து கொண்ட தலைவனும் ஒழிக்கப்படுவான்.
23உடன்படிக்கை செய்து கொண்ட பிறகும் அவன் வஞ்சகமாய் நடந்துகொள்வான். அவன் குடிமக்கள் சிலரே ஆயினும், அவன் வலிமை பெற்று விளங்குவான்.
24செல்வச் சிறப்புமிக்க நகரங்களுள் அவன் முன்னெச்சரிக்கை இன்றி நுழைந்து, தன் தந்தையரும் முன்னோரும் செய்யாததை எல்லாம் செய்வான்; அந்நகரங்களில் கொள்ளையடித்த பொருள்களையும் கைப்பற்றிய செல்வங்களையும் வாரியிறைப்பான்; அந்நகரங்களின் அரண்களைப் பிடிக்கப் பல்வேறு வழிமுறைகளைக் கையாள்வான்; ஆயினும் இந்த நிலை சிறிது காலமே நீடிக்கும்.
25பிறகு அவன் தன் வலிமையை நம்பித் தென்திசை மன்னனுக்கு எதிராகப் பெரும்படையோடு போரிடத் துணிந்து செல்வான். அப்பொழுது, தென்திசை மன்னனும் வலிமைமிக்க பெரும் படையோடு வந்து போர்முனையில் சந்திப்பான்; ஆனால் அவனுக்கு எதிராகச் சதித்திட்டங்கள் செய்யப்பட்டிருந்தபடியால், அவன் நிலைகுலைந்து போவான்.
26அவனோடு விருந்துணவு உண்டவர்களே அவனுக்கு இரண்டகம் செய்வார்கள். அவனுடைய படை முறியடிக்கப்படும்; பலர் கொலையுண்டு அழிவார்கள்;
27இரு அரசர்களும் ஒருவருக்கொருவர் தீங்கு செய்ய நினைப்பார்கள்; ஒரே பந்தியில் இருந்து கொண்டே பொய் பேசுவார்கள்; ஆயினும் அது அவர்களுக்குப் பயன் தராது; ஏனெனில், முடிவு குறிக்கப்பட்ட காலத்தில் வரவிருக்கின்றது.
28வடநாட்டு மன்னன் மிகுந்த கொள்ளைப் பொருள்களோடு தன் நாட்டுக்குத் திரும்பிப் போவான். அவனுடைய உள்ளம் புனிதமான உடன்படிக்கைக்கு எதிராக இருக்கும். தான் நினைத்ததைச் செய்துமுடித்தபின் அவன் தன் நாட்டுக்குத் திரும்புவான்.
29குறிக்கப்பட்ட காலத்தில் அவன் மறுபடியும் தென்னாட்டுக்கு வருவான்; ஆனால் இம்முறை முன்புபோல் இராது.
30அவனுக்கு எதிராக இத்தியர்கள் கப்பல்களில் வருவார்கள்; அவனோ அவர்களுக்கு அஞ்சிப் பின் வாங்கிப் புறமுதுகிட்டு ஓடுவான்; அவன் கடுஞ்சினமுற்று புனித உடன்படிக்கைக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுப்பான்; மீண்டும் வந்து, புனித உடன்படிக்கையைக் கைவிட்டவர்கள் மேல் தன் கவனத்தைத் திருப்புவான்.
31அவனுடைய படை வீரர்கள் வந்து திருக்கோவிலையும் கோட்டையையும் தீட்டுப்படுத்தி, அன்றாடப் பலியை நிறுத்திவிட்டு, ‘நடுங்கவைக்கும் தீட்டை’ அங்கே அமைப்பார்கள்.
32உடன்படிக்கையை மீறுகிறவர்களை அவன் பசப்புமொழிகளால் தன் பக்கம் ஈர்ப்பான். ஆனால் தங்கள் கடவுளை அறிந்திருக்கும் மக்கள் திடம் கொண்டு செயலில் இறங்குவார்கள்.
33ஞானமுள்ள பலர் மக்களுக்கு அறிவூட்டுவார்கள்; சில காலம் அவர்கள் வாளாலும் நெருப்பாலும் சிறைத் தண்டனையாலும் கொள்ளையினாலும் மடிவார்கள்.
34அவர்கள் வீழ்ச்சியுறும்போது, அவர்களுக்கு உதவி செய்ய ஒருசிலர் இருப்பர்; ஆயினும் அவர்களது துணைக்கு வருபவர் தன்னல நோக்குடனே உதவி செய்வர்.
35ஞானிகள் சிலர் கொல்லப்படுவர். இதன்மூலம் மக்கள் புடம்போடப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டு வெண்மையாக்கப்பெறுவர். இறுதியாக, குறிக்கப்பட்ட முடிவு காலம் வரும்.
36“அரசன் தன் மனம்போன போக்கில் நடந்துகொள்வான். அவன் தன்னையே உயர்த்திக்கொள்வான்; எல்லாத் தெய்வத்திற்கும் மேலாகத் தன்னையே பெருமைப்படுத்திக் கொண்டு தெய்வங்களுக்கெல்லாம், இறைவனானவர்க்கே எதிராகப் பழிச்சொற்களைப் பேசுவான். இறைவனின் சினம் நிறைவேறும் நாள் வரும்வரை அவன் வாழ்க்கை வளம்பெறும்; ஏனெனில், குறிக்கப்பட்டது நடந்தேற வேண்டும்.
37அவன் தன் தந்தையர் வழிபட்ட தெய்வங்களையோ பெண்கள் விரும்பும் வேறெந்தத் தெய்வத்தையோ பொருட்படுத்தாமல், அவற்றுக்கெல்லாம் மேலாகத் தன்னையே உயர்த்திக் கொள்வான்.
38அவற்றிற்குப் பதிலாக, அரண்களின் தெய்வத்தை மட்டும் வணங்குவான். தன் தந்தையர் அறிந்திராத அந்தத் தெய்வத்தை அவன் பொன்னாலும் வெள்ளியாலும் மாணிக்கக் கல்லாலும் விலையுயர்ந்த பொருள்களாலும் பெருமைப்படுத்தி வழிபடுவான்.
39தன் வலிமைமிக்க கோட்டைகளின் காவலர்களாக, அயல் தெய்வத்தை வழிபடும் மக்களை நியமிப்பான். அவனை அரசனாக ஏற்றுக்கொண்டவர்களைச் சிறப்பித்து, மக்களின் அதிகாரிகளாக நியமித்து, பணத்திற்காக நிலத்தைப் பிரித்துக் கொடுப்பான்.
40முடிவுக்காலம் வரும்போது தென்திசை மன்னன் அவனைத் தாக்குவான்; வடதிசை மன்னனும் தேர்ப்படை, குதிரை வீரர்கள், கப்பற்படை ஆகியவற்றுடன் சுழற்காற்றைப் போல் அவனை எதிர்த்து வருவான்; அவன் நாடுகளுக்குள் வெள்ளம்போல் பாய்ந்து அழிவு விளைவித்துக்கொண்டே போவான்.
41பிறகு அவன் சிறப்புமிக்க நாட்டினுள் நுழைவான். பல்லாயிரக் கணக்கானோர் அழிக்கப்படுவர்; ஆனால் ஏதோமியர், மோவாபியர், அம்மோனியரின் தலைவர்கள் ஆகியோர் மட்டும் தப்பித்துக்கொள்வர்.
42அவன் மற்ற மாநிலங்கள் மேலும் தன் கையை ஓங்குவான்.
43அவன் கைக்கு எகிப்து நாடும் தப்பாது. அங்குள்ள பொன், வெள்ளி முதலிய செல்வங்களையும், விலையுயர்ந்த எல்லாப் பொருள்களையும் கைப்பற்றிக்கொள்வான். லிபியரும் எத்தியோப்பியரும் அவன் பின்னே செல்வார்கள்.
44ஆனால் கிழக்கிலும் வடக்கிலும் இருந்து வரும் செய்திகள் அவனைக் கலங்கச் செய்யும். பலரைக் கொன்றொழிப்பதற்கு அவன் பெரும் சீற்றத்துடன் புறப்பட்டுச் செல்வான்.
45பிறகு கடலுக்கும் மாட்சிமிகு திருமலைக்கும் இடையே தன் அரச கூடாரங்களை அமைப்பான்; ஆயினும் உதவி செய்வார் யாருமின்றி அவன் தன் முடிவைக் காண்பான்.

11:31 தானி 9:27; 12:11; மத் 24:15; மாற் 13:4. 11:36 2 தெச 2:3-4; திவெ 13:5-6.