குலங்களுக்குரிய நிலப்பிரிவினை

1குலங்களின் பெயர்கள் இவையே: வடக்கு எல்லையில், ஏக்லோன், ஆமாத்து நுழைவு அட்சர், ஏனோன் சாலை வழியாய் தமஸ்கு எல்லைவழி, வடக்கில் ஆமாத்து பக்கம் வரை கிழக்கிலிருந்து மேற்குவரை, தாணுக்கு உரியது.
2தாணின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை ஆசேருக்கு உரியது.
3ஆசேரின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை நப்தலிக்கு உரியது.
4நப்தலியின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை மனாசேக்கு உரியது.
5மனாசேயின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை எப்ராயிமுக்கு உரியது.
6எப்ராயிமின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை ரூபனுக்கு உரியது.
7ரூபனின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை யூதாவுக்கு உரியது.

நிலத்தின் நடுவே அமைந்த சிறப்புப் பகுதி

8யூதாவின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை நீங்கள் அர்ப்பணிக்க வேண்டிய சிறப்புப்பகுதி; அது இருபத்தையாயிர முழ அகலமும் ஒரு குலத்துக்குரிய கிழக்கு முதல் மேற்குப் பகுதிக்கான நீளமும் உடையதாய் இருக்கும். அதன் நடுவில் தூயகம் இருக்கும்.
9நீங்கள் ஆண்டவருக்கு அர்ப்பணிக்க வேண்டிய சிறப்புப்பகுதி இருபத்தையாயிர முழ நீளமும் பத்தாயிர முழ அகலமும் உடையதாய் இருக்கும்.
10அது குருக்களுக்குரிய புனிதப் பகுதியாய் இருக்கும். அது வடக்குப் பக்கம் இருபத்தையாயிர முழமும் மேற்குப்பக்கம் பத்தாயிர முழமும் கிழக்குப் பக்கம் பத்தாயிர முழமும், தெற்குப் பக்கம் இருபத்தையாயிர முழமும் உடையதாய் இருக்கும். அதன் நடுவில் ஆண்டவரின் தூயகம் இருக்கும்.
11அந்த இடம் இஸ்ரயேலருடன் சேர்ந்து என்னைவிட்டு விலகிச் சென்ற லேவியரைப் போல் அல்லாமல் எனக்குப் பணிபுரிவதில் கருத்தாயிருந்த சாதோக்கியராகிய புனிதப்படுத்தப்பட்ட குருக்களுக்கு உரியதாய் இருக்கும்.
12லேவியரின் எல்லையருகே உள்ள மிக உன்னத இடத்தின் ஒரு பகுதியாகிய அது அவர்களுக்கான சிறப்பு அன்பளிப்பாகும்.
13குருக்களுக்கான பகுதியின் எல்லையருகே இருபத்தையாயிர முழ நீளமும் பத்தாயிர முழ அகலமும் கொண்ட பகுதி லேவியருக்கு உரியதாய் இருக்கும்; ஆம், மொத்த நீளம் இருபத்தையாயிர முழமும் அகலம் பத்தாயிர முழமும் இருப்பதாக!
14அவர்கள் அதிலிருந்து கொஞ்சமும் விற்கவோ, உரிமை மாற்றம் செய்யவோ கூடாது. சிறந்த நிலமாகிய அதை யாருக்கும் கொடுத்தலாகாது. ஏனெனில் அது ஆண்டவரின் தூய நிலமாகும்.
15ஐயாயிர முழ அகலமும் இருபத்தையாயிர முழ நீளமும் கொண்ட எஞ்சிய பகுதி பொதுவானது. இது நகருக்காகவும் வீடுகளுக்காகவும் திறந்த வெளிக்காகவும் ஒதுக்கப்படும். நகர் அதன் நடுவில் இருக்கும்.
16நகர்க்குரிய அளவுகள் பின்வருமாறு; வடக்குப் பகுதியில் நாலாயிரத்து ஐந்நூறு கோல்; தெற்குப் பகுதியில் நாலாயிரத்து ஐந்நூறு கோல்; கிழக்குப் பகுதியில் நாலாயிரத்து ஐந்நூறு கோல்; மேற்குப் பகுதியில் நாலாயிரத்து ஐந்நூறு கோல்.
17நகரின் திறந்த நிலம் வடக்கில் இருநூற்று ஐம்பது கோலும் தெற்கில் இருநூற்று ஐம்பது கோலும் கிழக்கில் இருநூற்று ஐம்பது கோலும் மேற்கில் இருநூற்று ஐம்பது கோலும் உடையதாய் இருக்கும்.
18தூயகத்தை ஒட்டி எஞ்சியுள்ள நீண்ட பகுதி கிழக்கில் பத்தாயிரம் கோலும், மேற்கில் பத்தாயிரம் கோலுமாய் இருக்கும். அதில் கிடைக்கும் விளைச்சல் நகரின் பணியாளர்களுக்கு உணவளிக்கும்.
19நகரில் பணிபுரிவோர் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
20முழு நிலப்பகுதியும் இருபத்தையாயிரம் கோல் நீள அகலமுடைய சதுர நிலமாய் இருக்கும். தூயகத்திற்கும் நகருக்குமான பகுதிகளை ஒதுக்கி வைப்பீர்களாக!
21தூயகத்திற்கும் நகருக்கமான பகுதிகளின் இருபக்கங்களிலும் எஞ்சியுள்ளவை தலைவனுக்கு உரியன. அது தூயகத்திலிருந்து கிழக்கே இருபத்தையாயிரம் கோலும் மேற்கே இருபத்தையாயிரம் கோலுமாய் இருக்கும். குலங்களுக்குச் சொந்தமான பகுதிகளை ஒட்டிய இவ்விரு பகுதிகளும் தலைவனுக்கு உரியன. கோவிலின் தூயகத்தை உள்ளடக்கிய புனிதப் பகுதி நடுவில் இருக்கும்.
22லேவியரின் பகுதிக்கும், நகரின் பகுதிக்கும் இடையில் தலைவனுக்குரிய பகுதி இருக்கும். அப்பகுதி யூதாவின் எல்லைக்கும் பென்யமினின் எல்லைக்கும் நடுவில் இருக்கும்.

குலங்களுக்குரிய நிலப்பிரிவினை

23மற்றக் குலங்களைப் பொருத்த வரை கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை பென்யமினுக்கு உரியது.
24பென்யமினின் எல்லையருகே கிழக்குப் பகுதி முதல் மேற்குப் பகுதிவரை சிமியோனுக்கு உரியது.
25சிமியோனின் எல்லையருகே கிழக்குப் பகுதி முதல் மேற்குப் பகுதிவரை இசக்காருக்கு உரியது.
26இசக்காரின் எல்லையருகே கிழக்குப் பகுதி முதல் மேற்குப் பகுதி வரை செபுலோனுக்கு உரியது.
27செபுனோனின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை காத்துக்கு உரியது.
28காத்தின் எல்லையருகே தெற்குப் பகுதி தாமார் எல்லையிலிருந்து மெரிபா, காதேசு நீர்நிலை வரையும் எகிப்திய எல்லையோரம் பெருங்கடல் வரையும் போகும்.
29நீங்கள் இஸ்ரயேல் குலங்களுக்கு உரிமைச் சொத்தாய்ப் பங்கிட வேண்டிய நாடு இதுவே; அவர்களின் பங்குகள் இவையே, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

எருசலேமின் வாயில்கள்

30நகரைவிட்டு வெளிச்செல்லும் வாயில்கள் இவையே; வடக்குப் புறத்தில் நாலாயிரத்து ஐந்நூறு கோல் அளவுப் பகுதியில் இருக்கும்.
31நகர் வாயில்கள் இஸ்ரயேலின் குலங்களின் பெயரால் அழைக்கப்படும்; வடக்குப் புறத்தில் உள்ள மூன்று வாயில்களில் ஒன்று “ரூபனின் வாயில்”, ஒன்று “யூதாவின் வாயில்”, ஒன்று “லேவியின் வாயில்”.
32கிழக்குப் புறத்தில் நாலாயிரத்து ஐந்நூறு கோல் அளவுப் பகுதியில் உள்ள மூன்று வாயில்களில் ஒன்று ‘யோசேப்பின் வாயில்’, ஒன்று ‘பென்யமின் வாயில்’, ஒன்று ‘தாணின் வாயில்’.
33தெற்குப் புறத்தில் நாலாயிரத்து ஐந்நூறு கோல் அளவுப் பகுதியில் உள்ள மூன்று வாயில்களில் ஒன்று ‘சிமியோனின் வாயில்e, ஒன்று ‘இசக்காரின் வாயில்’, ஒன்று ‘செபுலோனின் வாயில்’.
34மேற்குப் புறத்தில் நாலாயிரத்து ஐந்நூறு கோல் அளவுப் பகுதியில் உள்ள மூன்று வாயில்களில் ஒன்று ‘காத்தின் வாயில்’, ஒன்று ‘ஆசேரின் வாயில்’, ஒன்று ‘நப்தலியின் வாயில்’.
35அந்நகரின் சுற்றளவு பதினெட்டாயிரம் கோல். அந்நாளிலிருந்து நகர் ‘ஆண்டவர் இங்கு இருக்கிறார’ என்னும் பெயர் பெறும்.

48:30-34 திவெ 21:12-13.